Friday, 6 February 2015

தொல்லையான தொலைபேசி அழைப்புகள்.

இரவு நேரம் 7.45 இருக்கும். டெலிபோன் மணி கணீரிட்டது.


"டொக்டர் உங்களை அவசரமாகக் காண வேண்டும், இப்ப வந்தால் காணலாம் தானே?"

"இப்ப வந்தால் காணலாம், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஏலாது. 8 மணிக்குப் பூட்டிப் போடுவோம்."

"உடனே வாறன்"

'எப்படி வருவார்?'

அவர் இருப்பது மூன்று மைல் தொலைவில், பத்து நிமிடத்தில் வர முடியுமா? விசாரித்தேன்.

"எப்படியும் வந்து விடுவேன். ஒரு ஐந்து பத்து நிமிடம் பிந்தினால் பூட்டிப் போடாதீர்கள். ப்ளீஸ் மிகவும் அவசரம்...." கடிவாளம் போட்டார். 

காரில் வந்து விடுவாராக்கும் என எண்ணிக் கொண்டேன்.

இத்தகைய டெலிபோன் அழைப்புக்கள் எனக்கு வழமையானதுதான்.

தினமும் 7.15 ல் இருந்து 7.30 மணிக்குள் இத்தகைய அழைப்புக்கள் ஒன்று இரண்டு நிச்சயம் வரும்.

கடைசி நிமிடத்தில் டொக்டரை இழுத்துப் பிடிக்கும் பிஸியானவர்களிடமிருந்துதான்.

"சரி வாங்கோ" என்றேன்.

நோயாளிகள் மேலும் பலர் காத்திருந்ததால் நேரம் போனது தெரிய வில்லை. மீண்டும் டெலிபோன் கிணுகிணுத்தது. நேரத்தைப் பார்த்தேன். 8.20 ஆகிவிட்டது. ரிசீவரைத் தூக்கினேன். மணி நின்றிடக் குரல் ஒலித்தது.

"டொக்டர் கொஞ்சம் பிந்தி விட்டது. வாகனம் பஞ்சர். இப்ப சரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. உடனே வந்திடுவன்"


எஞ்சியிருந்த ஓரிரு நோயாளர்களையும் பார்த்து முடிக்க நேரம் 8.30 ஆகிவிட்டது. போன் பண்ணியவரை அப்போதும் காணவில்லை.

நேர்ஸ்களுக்கும் வீடு போகும் அவசரம்.
எனக்கும் அப்பிடித்தான்.
ஆயினும் என்ன அவசரத்திற்காக தேடி வருகிறாரோ என்று அனுதாபம் மேவியது.

இன்னமும் சிறிது நேரம் பொறுத்துப் பார்க்க தீர்மானித்தேன். மேலும் 10 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தேன். காணவில்லை. பொறுமை கடந்து விட்டது.

டிஸ்பென்சரியைப் பூட்டி, வெளி கேற்றையும் பூட்டிக் கொண்டு வீதியில் இறங்கினோம். நர்ஸ்களும் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அப்பொழுது ஓட்டமும் நடையுமாக பூனையாக குறுக்கே வந்தார்.

"பூட்டிப்போட்டியளோ? நான் தான் போன் பண்ணியது"

"நீங்கள் போன் பண்ணியபடியால்தான் எட்டு மணிக்குப் பூட்ட வேண்டிய நான் இதுவரை காத்திருந்தேன்"

"சொறி டொக்டர் வந்த மினிபஸ் பஞ்சராகி நின்றதால் வேறு பஸ் பிடித்துவர நேரமாகிவிட்டது."

ஓகோ! ஆடிப்பாடி பஸ்சில்தான் வந்திருக்கிறார்.

இவரது வீட்டிலிருந்து பஸ் ஸ்டான்டுக்கு வரவே பத்து நிமிடங்கள் வேண்டும். பிறகு காத்திருந்து பஸ் பிடித்து இங்கு வந்து சேர எப்படியும் குறைந்தது ஒரு மணித்தியால மாவது வேண்டும்.

அப்படி இருக்க பத்து நிமிடங்களில் வந்து சேர்வேன் என என்னை முழுமடையனாக்கி விட்டார்.

"பிளீஸ் டொக்டர்" காரியக்காரன் அழுவது போலக் கெஞ்சினார்.

"என்ன வருத்தமோ!" குமுறிய என் நெஞ்சு இளகியது.

"சரி வாங்கோ" எனத் திரும்பி நடந்தேன். பின் தொடர்ந்தார்.

பூட்டிய கதவுகளைத் திறந்து டிஸ்பென்சரிக்குள் நுழைந்து எனது கதிரையில் அமர்ந்து கொண்டேன். உள்ளே வந்த அவர் சர்வ சாதாரணமாக ஆறஅமரக் கதிரையில் சாய்ந்து கொண்டார்.

தான் வரப் பிந்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினார்.
தினசரி கடுமையான ஒபிஸ் வேலை, வேலையால் வர தாமதமாவது.
அடுத்த நாளைக்கான உடைகளைத் துவைத்தல்,
சமையலுக்கு மரக்கறி வாங்கப் போக வேண்டியமை,
இப்படிப் பல சோலிகள்.

"அதுதான் லேட். உங்கட குணம் எனக்குத் தெரியும் தானே டொக்டர். நோயாளிகளின் துன்பம் தெரிந்தவர். பாவம் பார்க்கிறவர். எப்படியும் காத்திருப்பியள் என்று தெரியும்"

ஐஸ் அடிப்பதுடன்
ஏமாந்த சோணாகிரிப் பட்டத்தையும்  சூட்டுகிறார்....

லேசாக கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

"டொக்டருக்கு நேரம் போட்டுதோ? இந்த நேரத்திலை வந்தால்தான் உங்களோடை ஆறுதலாகக் கதைக்கலாம். இல்லாவிட்டால் சனம் விடுமே? மற்ற நேரம் என்றால் சனமாயிருக்கும்.
எப்படிக் கதைக்கிறது?
உங்களுக்கும் எங்களைப் போலை சிலரோடை கதைச்சால் தானே மனம் ஆறும். எந்த நேரமும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்"
மகாவலி கங்கை போல கருணை ஆறு பரவி வந்தது!

 கரிசனையான மனிதன்!

இந்த அரைச் சாமத்திலை வந்து கழுத்தறுக்கிறார். விட்டால் நடுச்சாமம் வரை இருப்பார். கேள்வியைப் போட்டு கதையை மாத்தினேன்.

"இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்"

"எனக்கோ வருத்தமோ? ஒன்றும் கிடையாது."

"அப்ப ஏன் இந்த நேரத்திலை?"

"இரண்டு நாட்களாக வேலைக்குப் போகவில்லை. வீட்டிலை வேலை இருந்தது. நாளைக்குப் போக வேணும். அதுதான் ஒரு மெடிக்கல்
சேர் ட்டிபிக்கற் வாங்க வந்தனான்."

எதையும் வாயடிச்சுச் சாதிக்கலாம் என நினைக்கும் கபடக்காரர்.

இன்றைய உலகில் டெலிபோன் என்பது மிகவும் அத்தியாவசிய மான சாதனம் ஆகிவிட்டது.

அது நடந்து பல வருடங்களாகிவிட்டன.


ஆனால் இன்றும் தொல்லைகள் தீரவில்லை. பண்டா போக சிறிமா வந்தார். அவர் போக ஜெயவர்த்தன, சந்தரிகா, மஹிந்த அந்தப் பக்கம்.
செல்வா, அமிர்தலிங்கம் பிரபா என மற்றொரு பக்கம்.

தீராத வியாதி. 

இலங்கைத் தமிழர் பிரச்சனை போல என்றுமே தீராத தொடர் பிரச்சனைதான்.

ஒரு சின்னஞ்சிறு செய்தியைத் தெரிவிப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து 21 மைல் பிரயாணம் செய்து யாழ் செல்ல வேண்டிய காலம் 10-15 வருடங்களுக்கு முன் வரை இருந்ததை மறக்க முடியாது.

இன்று பருத்தித்துறையில் இருந்து கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எல்லாம் கணப்பொழுதில் சாத்தியமாகிறது.

முகத்தோடு முகம் பார்த்துப் பேசுவது வசமாகிவிட்டது.

ஆனால் அதே நேரம் நவீன வசதிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களும் ஏராளம் என்பதையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
அன்று வந்த திடீர் தொலைபேசி அழைப்பு இது.

"டொக்டர் நான் டின்னர் ஒன்றிற்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
இவன் எனது மகன் திடீரென தனக்கு வயிற்றோட்டம் என்கிறான்.
இப்ப உங்களிட்டை வந்து காத்துக் கொண்டிருக்க எனக்கேலாது.
நேரமுமில்லை.
ஏதாவது மருந்து சொல்லுங்கோ.
மருந்தைப் போட்டிட்டுப் பேசாமல் படுத்துக் கிடக்கட்டும்.
நாளைக்கு நாளையின்றைக்கு கொண்டு வந்து காட்டிறன்"

அவ நாளைக்கும் வரமாட்டா,
நாளையின்றைக்கும் வரமாட்டா.
மகனுக்குக் குணமான பின் டாக்டரிடம் போக வேண்டிய அவ சியம் என்ன?

அம்மாவிற்கு டின்னருக்குப் பிந்தாமல் போவதற்கு நேரம் முக்கியம்.
மகனின் வருத்தம் இரண்டாம் பட்சம்.

டொக்டர் போனில் பேசும்போது,
ஏற்கனவே டாக்டருக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி நோயாளியின் நேரம் மூன்றாம் பட்சம்!

டொக்டரின் நேரம் கணக்கிலேயே சேராது!

ஒரு டெலிபோன் பண்ணும் செலவில் அம்மாவின் கொன்ஸ்சல்டேசன் முடிந்து விட்டது.


மிக அவசரத்திற்கு மருத்துவர்களை டெலிபோனில் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் வேலையில் மருத்துவர்கள் மும்மரமாக இருக்கும்போது சிறு காரணங்களுக்காக தொல்லைப்படுத்துவது சரியாகாது.

இன்று ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  மூன்று அழையா விருந்தாளி அழைப்புகள்.

'மருந்தைச் சாப்பிடுவது எப்படி' என ஒன்று.

நோரடியாகவே மூன்று தடவைகள் விளங்கப்படுத்தும் போது ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டவர்தான் அழைந்திருந்தார்.
மற்றக் காதுக்கு பஞ்சு அடைத்துவிட்டுப் பேசுங்கள் என்று சொல்லத்தான் மனம் வந்தது.

'இப்ப வந்தால் காணலாமா' என மற்றொன்று.

ரிசப்சன் பெண்ணிடம் கேட்டும் சந்தேகம் அடங்காத பெண்ணிடமிருந்து.

'தலைவலிக்குப் பனடோல் போடலாமா' என மற்றொருவர்.

ஏற்கவே அருகிருந்த நோயாளி டெலிபோன் அழைப்புகளால் சலித்து, எழுந்து  ஓடாதது நான் செய்த புண்ணியம்.

மீண்டும் கிணுகிணுத்தது. இது பொக்கறிலிருந்த செல்போன்!

"ஹலோ.." எனது குரலில்  உயிரில்லை என்பது எனக்கே புரிந்தது.


"மச்சாங் கோமத......" புரியாத குரல்,

தெளிவாக விளங்காத பாசை.

ரோங் கோல்...

தொல்லை அழைப்புகள் தொடரும்.....

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக் கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளிக் கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
.  .
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

அது ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவது தான் நல்லது. 

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக  ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக் கேந்திர அதிகாரிகள் ராக்கெட்  கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை  நடுவானில் அழிப்பர்.

இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர்  25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளிக் கேந்திரத்தை கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு   23.93 மணி நேரம் பிடிக்கிறது..  பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு  1569 கிலோ மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக  பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன 
  
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625  கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
 .
படம்: நன்றி- Mahendragiri LPSC Staff Assn Report
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடிவதில்லை.

அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது. அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு  என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து விடும்.

 எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி  ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.

ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம் 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்

. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித்  தருவது என்பது உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார் நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.

உலகில் இந்தியா உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம் என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம் குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில் கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

தவிர, பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது.

 குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது. படம் மற்றும் கூடுதல் தகவல்களுடன் இங்கு வெளியிடப்படுகிறது

யாருக்கு நோபல் பரிசு?

ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் பிறந்தால் போதும். அடுத்தடுத்த தேதிகளில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். யாருக்குக் கிடைக்க்ப் போகிறது என்பது குறித்த ஹேஷ்யங்களும் கிளம்பும். இன்னாருக்குத் தான் கிடைக்கும் என்று பந்தயம் கட்டுவதும் உண்டு.

     அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இப்படியாகப் பந்தயம் கட்டுகிற வழக்கம் உள்ளது. பொருளாதாரத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு என்பதில் தான் பந்தயம். இன்னாருக்குக் கிடைக்கும் என்று சொலபவர் ஒரு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே நபர் பலருடைய பெயரைக் கூறலாம். ஆனால் . ஒரு பெயருக்கு ஒரு டாலர் வீதம் செலுத்தியாக வேண்டும். இப்போதெல்லாம் இண்டர்னெட் வசதி வந்து விட்டதால் வெளியாரும் பந்தயத்தில் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.

      சரியாகக் கூறுபவருக்கு மொத்த வசூலில் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படுகிறது. பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது வருகிற 10 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

Alfred Nobel (1833 - 1896)
     வேதியியல், இயற்பியல்,இலக்கியம் முதலான இதர துறைகளிலும் இது போன்று பணம் கட்டுகிற பந்தயங்கள் உண்டு (ஹார்வர்டில் அல்ல) .

     ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் (Alfred Nobel) குறிப்பாக டைனமைட்(Dynamite) எனப்படும் வெடிமருந்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பெரும் செல்வந்தரானார். அவரது உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் வேறு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

     உயிருடன் இருக்கின்ற சாதனையாளர்களுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன். காலமாகிவிட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் ஒருவர் காலமானால் பரிசு ரத்து செய்யப்படுவது கிடையாது. நோபல் பரிசு குறித்து பல சர்ச்சைகள் உண்டு.

"செத்துப் போன” இருதயம் வாழ்வு கொடுத்தது

செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து அதனை ஒரு நோயாளிக்குப் பொருத்தி வாழ்வு கொடுத்துள்ளனர் டாக்டர்கள். ஆஸ்திரேலியாவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்படியான இருதயம் பொருத்தப்பட்டவரான மிஷேல் கிரிபிலாஸ் என்னும் 57 வயதான பெண்மணி பிறவியிலேயே இருதயக் கோளாறு கொண்டவர்.  “இப்போது 10 வயது குறைந்து விட்டது போல உணருகிறேன்” என்று அவர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு மாற்று இருதய ஆபரேஷன் நடந்தது.

ஆபரேஷனுக்குப் பிறகு அவர் தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கிறார். 100 முதல் 120 படி ஏறுகிறார்.

இடதுபுறம் சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர் குமுத் திதாள்.
வலதுபுறம் புது இருதயம் பெற்ற மிஷேல் கிரிபிலாஸ்.
இவர் போலவே மேலும் இரண்டு பேர் ‘செத்துப் போன “ இருதயம் பொருத்தப்பட்டு நன்றாக இருக்கிறார்கள்.

சாலை விபத்து போன்றவற்றில் தலையில் அடிபட்டு சாகின்றவர்களின் இருதயம் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படுவது உண்டு. இருதயத் துடிப்புடன் உள்ள இருதயம் அப்படியே எடுக்கப்பட்டு உடனுக்குடன்  ஒரு நோயாளிக்குப் பொருத்தப்படும். இது வழக்கமாக நடப்பது தான்.

ஆனால் ஒருவர் செத்துப் போய் இருபது நிமிஷங்கள் ஆன பிறகு அதை எடுத்து  ஒரு மெஷினில் வைத்து செயல்பட வைத்துப் பிறகு ஒரு நோயாளிக்குப் பயன்படுத்துவது  உலகில் இப்போது தான் முதல் தடவையாக நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள செயிண்ட் வின்செண்ட் ஆஸ்பத்திரி நிபுணர்கள் தான் இதை சாதித்துள்ளனர். இது ஏதோ திடீரென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.

இருதயப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இருதயம்
செயலிழந்த இருதயத்தை எப்படி ஒரு நோயாளிக்குப் பொருத்துவது என்பது குறித்து அவர்கள் 20 ஆண்டுகளாகவே ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட திரவத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை உருவாக்கவே 12 ஆண்டுகள் ஆகின.

இந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி      “ இருதயப் பெட்டி” என்னும் யந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இறந்து போனவரிடமிருந்து எடுக்கப்பட்ட செயலற்ற இருதயம் இப்பெட்டியில் வைக்கப்படுகிறது.


இப்பெட்டியில் இருக்கும் போது தகுந்த வெப்பம் அளிக்கப்படுகிறது. இருதயம் மறுபடி துடிக்கும்படி செய்யப்படுகிறது. நிபுணர்கள் உருவாக்கிய விசேஷ திரவம் ஊசி மூலம் இருதயத்துக்குள் செலுத்தப்படுகிறது. இத் திரவம் இந்த இருதயம் செயல்படாது இருந்த நிமிஷங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை அகற்றுகிறது. சுமார் நான்கு மணி நேரம் இருதயம் இந்தப் பெட்டிக்குள்ளாக இருந்தபடி செயல்படுகிறது. அதன் பின்னரே தேவையான நோயாளிக்குப் பொருத்தப்படுகிறது.

சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கியுள்ள முறையின் மூலம் இதுவரை மூன்று பேர் புது இருதயம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்னும் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை.

செத்துப்போனவரின் உடலிலிருந்து எவ்வளவு நேரத்துக்குள்ளாக இருதயத்தை வெளியே எடுக்க வேண்டும் என்பது இன்னும் தெரியவரவில்லை. 30 நிமிஷத்துக்குப் பிறகும் எடுக்க முடியும் என்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

வெளியே எடுக்கப்படும் இருதயத்தைப் பாதுகாப்பதில் வருகிற ஆண்டுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று டாக்டர்  குமுத் திதாள் கூறினார். நேபாளத்தைச் சேர்ந்த அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.

சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கிய முறையை உலகில் வேறிடங்களிலும் பயன்படுத்துகிற நிலைமை உருவானால் ஏராளமான நோயாளிகள் பயன்பெறும் நிலைமை உருவாகும்.

சீரீஸ் என்றொரு குட்டிக் கிரகத்தை நோக்கி விண்கலம்



செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒரு கிரகத்தைக் காணோம் என்று சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி   ஒருவர் கூறினார். உடனே பல விஞ்ஞானிகள் “ வான் போலீஸ்” என்ற குழுவை அமைத்து டெலஸ்கோப்புகள் மூலம் வானில் தேட ஆரம்பித்தனர்.

அச்சமயத்தில் இக்குழுவில் சேராத பியாஸி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒரு ’குட்டிக் கிரக’ த்தைக் கண்டுபிடித்தார். அது தான் சீரீஸ்(Ceres)எனப்படும் அஸ்டிராய்ட்  ஆகும். “காணாமல் போன” கிரகம் அதுவாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தனர். பின்னர் தான் எண்ணற்ற அஸ்டிராய்டுகளில் அதுவும் ஒன்று என்பது தெரிய வந்தது.

  ஒரு கிரகம் இருந்திருக்குமானால் அதற்கென ஒரு சுற்றுப்பாதை இருந்திருக்கும். விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்த போது மேற்படி சுற்றுப்பாதையில் ஒன்றல்ல, பல லட்சம் துண்டுப் பாறைகள் பறந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
புள்ளி புள்ளியாக உள்ளவை அஸ்டிராய்டுகள். இவை செவ்வாயின் (Mars) மற்றும் வியாழனின் (Jupiter) சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளன.
 கிரிப் பிரதட்சிணம் செய்யும் பக்தர்களைப் போல இவை அனைத்தும் ஒழுங்காக சூரியனை சுற்றி வருகின்றன. இவை செல்லும் பாதையானது அஸ்டிராய்ட் வட்டாரம் (Asteroid Belt)  என்று அழைக்கப்படுகின்றது.

 அஸ்டிராய்டுகளில் உள்ள பெரிய துண்டு தான் சீரீஸ். அதன் குறுக்களவு வெறும் 950 கிலோ மீட்டர். அது சந்திரனையும் விடச் சிறியது.
வலது புறம் பூமி. இடது மேல் சந்திரன். இடது கீழ் சீரீஸ்
இப்போது அந்த சீரீஸை நோக்கி அமெரிக்க விண்கலம் டான் (Dawn) சென்று கொண்டிருக்கிறது. அது வருகிற மார்ச் மாதம்  6 ஆம் தேதி சீரீஸ் குட்டிக் கிரகத்தை நெருங்கி அதைச் சுற்ற ஆரம்பிக்கும்.

முதலில் 5000 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி சுற்றும். பிறகு கீழாக 1300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி சுற்றும். பிறகு மேலும் நெருங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பறந்து கொண்டிருக்கும்.
சீரீஸ் படம். டான் விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து எடுத்தது
சீரீஸ் அஸ்டிராய்ட்  சூரியனிலிருந்து சுமார் 41 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.( இத்துடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

டான் விண்கலம் கடந்த 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அது முதலில் வெஸ்டா (Vesta) எனப்படும் வேறு ஒரு அஸ்டிராய்டை  நெருங்கிச் சென்று ஆராய்ந்தது. அதை முடித்துக் கொண்டு டான் இப்போது சீரீஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சீரீஸில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு அடியில் ஒருவேளை தண்ணீர் இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
 நாஸாவின் டான் விண்கலம்
அஸ்டிராய்டுகளை ஆராய்வதன் மூலம் சூரிய மண்டலத் தோற்றம் பற்றி மேலும் தகவல்களை அறிய முடியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- என்.ராமதுரை

Sunday, 1 February 2015

எத்தனை பெட் ரூம்கள் இருந்தாலென்ன!

இரு படுக்கையறைகள், மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் எப்பொழுதும் காதுகளில் விழுந்தவண்ணம் இருக்கின்றன.

நவீன சமையலறை, பூஜையறை, ஃபுல்லி ஃபர்னிஷ்டு லிவிங் ரூம், கழிவறை, குளியலறை, சன்னல், கதவு என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.


எந்த விளம்பரமும், வீட்டில் மூச்சடைக்காது உயிர்வாழ நூலகம் அவசியம் என்று உணர்ந்து நூலக அலமாரியைக் குறிப்பிடுவதே இல்லை.

அப்படியே, மரங்களும் செடிகளும் கொண்ட தோட்டமும் அவசியம் என்று குறிப்பிடுவதில்லை.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது, விசாலமான அகண்ட வெளி. பரந்த வெளியில் குழந்தைகளை விட்டுப்பாருங்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உண்மையில் இத்தகைய பரந்த வெளிகளே, குழந்தைகளுக்கு நிறைந்த கற்பனையையும், தயக்கமற்ற படைப்புத்திறனையும் தருகின்றன.

சன்னல் வழியே அறைகளுக்குள் நீளும் மரக்கிளைகள் இல்லாமல், அதன் வழியே அணில்களும் குருவிகளும் வீட்டிற்குள் வந்துபோகாமல், சன்னலில் வந்து காகங்கள் அமர்ந்து காதடைக்கும் இரைச்சலுடன் கரையாமல் வீடென்ன வீடு!

ஆனால், இதையெல்லாம் யாரும் கருத்திற்கொண்டாற்போலில்லை. திரும்பும் திசையெல்லாம் சுவர்முட்டும் அறைகள் கொண்ட வீடுகள், எத்தனை இலட்சத்திற்கென்றாலும் அவை யாருக்குத்தான் வேண்டும்?

வீடுகள் தமக்குள் நுழையும் மனிதர்களுக்குக் காலாதீத உணர்வைத் தானே தரவேண்டும்!

இத்தகைய வீடுகள், மனிதர்களை உயிருடன் புதைக்கும் கல்லறைகள் இல்லையா?


நன்றி குட்டி ரேவதி