குழந்தை இப்போது வேண்டாமா?
கருமுட்டை வங்கிகளை மருத்துவ முன்னேற்றமாகப் பார்ப்பதா, மானுடச் சீரழிவாகப் பார்ப்பதா?
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய
நிறுவனங்கள் சில வாரங்களுக்கு முன்னால் ஓர் அதிசய அறிவிப்பை வெளியிட்டன.
அவற்றில் பணியாற்றும் இளம் பெண்கள் நிர்வாகத்தின் வசதிக்கேற்றபடி தமது
பேறுகாலத்தைத் தள்ளி வைத்துக்கொள்ளும் வகையில், தமது கருமுட்டைகளை
உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்ளப் பண உதவி செய்யும் ஒரு
திட்டத்தை அவை அறிவித்துள்ளன.
ஆண் பணியாளர்களுடன் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளுக்காகப் போட்டிபோட
வேண்டியிருக்கிற பெண் பணியாளர்கள், பிரசவத்துக்காக விடுப்பு எடுத்துத் தமது
சாதனை வாய்ப்புகளைத் தாமதப்படுத்தவோ இழக்கவோ விரும்புவதில்லை.
கருவுற்றிருக்கும் காலங்களில் ஏற்படும் மனம் மற்றும் உடல்ரீதியான
சிக்கல்களின் காரணமாகப் பதவிப் போட்டியில் பின்தங்க நேரிடுவதையும் அவர்கள்
தவிர்க்க முனை கிறார்கள். கடந்த நான்காண்டுகளில் ஏராளமான இளம் பெண்கள்
தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத் தமது கருமுட்டைகளை
உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண் முதன்முறை தன் கருமுட்டையை உறையவைக்க 10,000 டாலர்களும் அடுத்து
ஒவ்வோராண்டும் 500 டாலர்களும் வழங்குவதாக, ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு
தொடக்கத்தில் அறிவித்துள்ளது. கூடுதலான மருத்துவ விடுப்புகளுடன்,
குழந்தையின்மைக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைபெற நிதியுதவியும் செய்வதாக
ஆப்பிள் நிறுவனம் அறிவித் துள்ளது.
தமது பெண் ஊழியர்கள் எப்போது பேறுகால விடுப்பு எடுக்க வேண்டும், எப்போது
பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக்கூடத் தாமே தீர்மானிக்க வேண்டும்
என்று அந்த நிறுவனங்கள் எண்ணுவதைப் போலத் தோன்றுகிறது. அவர்களுடைய
விருப்பப்படி பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு அவை 20,000 டாலர் வரை
ஊக்கத்தொகையையும் அளிக்கின்றன.
வர்த்தகப் போட்டிகள் வலுவாக உள்ள இந்தக் காலத்தில், பெண் பணியாளர்களின்
பிரசவ கால விடுப்புகளாலும், கர்ப்பகால உடல்நலக் குறைவு களாலும் தமது
நிறுவனங்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற சுயநல
நோக்கமே இத்தகைய தாராள நிதியுதவி வழங்கப்படக் காரணம் எனச் சில
பெண்ணுரிமைவாத அமைப்புகள் கூறு கின்றன. கருமுட்டைகளை ஆய்வகங்களில்
சோதித்து, தரமானவற்றை மட்டுமே பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுவதன் மூலம்
பிறக்கும் குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளோ, மரபணுசார்ந்த பரம்பரை நோய்களோ
இல்லாமல் தவிர்க்க இந்த உத்தி உதவும் என்று பல மருத்துவ ஆய்வாளர்கள்
பாராட்டுகிறார்கள்.
வருங்காலவைப்பு
கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு ஏற்படுத்தும் உத்திகளைப் பல ஆண்டுகளுக்கு
முன்பே விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டார்கள். அவ்வாறு உருவாகும் சிசுக்கள்
சோதனைக்குழாய் சிசுக்கள் என்று அழைக்கப்பட்டன.
பெண்ணின் கருவணுவகத்திலிருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின்
விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்தக் கரு முட்டைக்குள் புகுத்தி அதைச்
சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது. அந்தக் கருவை
ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின்
அல்லது மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம்
கழித்து அது முழுக் குழந்தையாக வெளிப்படும். கருப்பையில் கோளாறு அல்லது
வேறு வகை உடல்நலக் குறைபாடு உள்ள பெண்கள் குழந்தைப் பேறு பெற்று மகிழ இந்த
சோதனைக் குழாய் உத்தி உதவியிருக்கிறது.
கருத்தரித்த முட்டையை ஒரு பெண்ணின் கருப் பையில் உடனடியாக வைத்தாக
வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைக் குளிர்பதனப் பெட்டியில் உறைய
வைத்துவிடலாம். தம்பதிகள் விரும்புகிறபோது அதை மனைவியின் கருப்பையில்
பதித்து வளர்க்கலாம்.
ஏதாவதொரு காரணத்தால், கருவைப் பத்து மாதங்களுக்குத் தன் வயிற்றில் சுமக்க
முடியாத நிலை மனைவிக்கு ஏற்படுமானால், உறையவைக்கப்பட்ட கருவை வேறொரு
பெண்ணின் கருப்பையில் பதித்து அவளைப் பத்து மாதங்களுக்குப் பிறகு அதை
முழுக் குழந்தையாகப் பெற்றெடுக்க வைக்கலாம். அவ்வாறு மேலை நாடுகளில் பல
தம்பதிகள், உடல்நலமுள்ள பெண்ணின் கருப்பையில் தமது குழந்தைகளை வளர்த்து,
பெற்றுக்கொள்கிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் கருப்பையை வாடகைக்கு
விடுவது ஒரு தொழிலாகவே நடக்கிறது.
மாதம் ஒரு கருமுட்டைதான்…
பெண்ணின் கருவணுவகத்தில் மாதம் ஒரு கருமுட்டைதான் உருவாகும். எனவே,
அவளுக்கு ஹார்மோன்களை ஊட்டி ஒரே சமயத்தில் நிறைய கருமுட்டைகள் உருவாகும்படி
செய்கிறார்கள். பின்னர், அவற்றை வெளியில் எடுத்து அவை குறைகளின்றியும்
நல்ல வளத்துடனும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னர், நான்கைந்து
கருமுட்டைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றை ஆணின் விந்தணுக்களுடன்
சேர்த்துக் கருத்தரிக்க வைப்பார்கள். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கேற்ப
ஒன்று அல்லது இரண்டு கரு முட்டைகளை அவளுடைய கருப்பையில் வைத்து வளர
விடுவார்கள்.
1986-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் சென் என்ற ஆஸ்திரேலிய மருத்துவர், பெண்ணின்
கருத்தரிக்காத முட்டைகளைக்கூட உறையவைத்துப் பாதுகாக்கும் முறையைக்
கண்டுபிடித்தார். தேவைப்படும்போது விந்தணுவுடன் சேர்த்துவைத்துப் பிள்ளை
பெற்றுக் கொள்ள முடியும்.
கருவுற்ற முட்டைகளை உறைய வைப்பதைவிடக் கருவுறாத முட்டைகளை உறையவைப்பது அதிக
சிக்கலானது. கருமுட்டை என்பது மிக நுண்ணிய ஒற்றைச் செல். உறையவைக்கும்போது
அல்லது உறைந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும்போது அது சேதப்பட பல
வாய்ப்புகள் உண்டு. கருமுட்டையைச் சரியான நேரத்துக்கு உறைய வைக்க வேண்டும்.
அதன் உள்ளே இருக்கும் திரவம் உறைந்து கட்டி யாகிவிடாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். அப்படி ஆனால், செல் கட்டமைப்பு குலைந்துவிடும். கருமுட்டைக்
குள்ளிருக்கும் திரவத்தின் நீர்க்கூறை எடுத்துவிட்டு, வேறு சில ரசாயனங்களை
அதற்குப் பதிலாகப் புகுத்தி அந்தத் திரவம் கட்டியாகாமல் தடுக்கப்படுகிறது.
கருமுட்டைகளின் எண்ணிக்கையைக் கூட்ட ஹார் மோன் சிகிச்சையளிக்கும்போது
தாயின் கருப்பை உட்புறச்சுவர் தடித்துவிடும். அதன் காரணமாகப் பெண்ணுக்குத்
தாய்மை ஏற்படாமல் போகலாம். ஹார்மோன் சிகிச்சையால் ஏற்பட்ட விளைவுகள்
மறையும்வரை சினைப்படுத்தப்பட்ட கருமுட்டையை உறையவைத்துப் பாதுகாத்து,
அதற்குப் பிறகு அந்தக் கருமுட்டையை அவளுடைய கருப்பையில் பதித்து வளரச்
செய்யலாம்.
கருமுட்டை வங்கிகள்
ஒரு பெண் தனது ஆரோக்கியமான இளம் வயதில் தனது கருமுட்டைகளை உறைய
வைத்துவிட்டுச் சில ஆண்டுகள் கழித்துத் தனது உடல்நிலை மற்றும் குடும்பநிலை
சாதகமாக அமையும்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். வயதாக வயதாகப்
பெண்களின் முட்டைகளில் குரோமோசோம்கள் குறை பட்டவையாக ஆகிவிடும். இதைத்
தவிர்ப்பதற்காக இளம் பெண்கள் திருமணமானவுடன் தமது கரு முட்டைகளை எடுத்து
முட்டை வங்கியில் டெபாசிட் செய்துவிடலாம். கணவருக்குப் பதவி மற்றும் ஊதிய
உயர்வுகள் கிடைத்து, குடும்பத்தின் பொருளாதார வசதி மேம்பட்ட பிறகு, அந்தக்
கருமுட்டைகளைப் பயன் படுத்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். வேலைக்குப் போகிற
பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
பெண்களுக்குப் போட்டியாக, ஆண்களின் விந்தணுக் களைச் சேமிக்கும் வங்கிகளும்
சில நாடுகளில் தோன்றியுள்ளன. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆணழகர்கள்
போன்றோரின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, தேவைப்படுவோருக்கு விற்கும்
வர்த்தகம்கூடச் சில நாடுகளில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் ஒரு கோடீஸ்வரத் தம்பதி தமது கருவுற்ற முட்டையை
உறையவைத்துப் பாது காக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், சில
மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் விமான விபத்தில்
மரணமடைந்துவிட்டனர். அந்த உறைவு ஆய்வகத்தில் பணியாற்றிய ஒரு பெண், அந்தக்
கருவுற்ற முட்டையைத் தன் கருப்பையில் பதித்துக் கொண்டு ஒரு குழந்தையையும்
பெற்றாள். அந்தக் குழந்தைக்குக் கோடீஸ்வரத் தம்பதியரின் சொத்து முழுவதும்
சேர வேண்டும் என்று வழக்கு தொடுத்தாள். மரபணுச் சோதனைகள் அவளுடைய
வாதத்துக்குச் சாதகமாயிருந்தன. ஆஸ்திரேலியாவின் சட்ட மேதை களால்கூட எந்த
முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியில் கோடீஸ்வரத் தம்பதியின் உறவினர்கள்
அந்தப் பெண்ணுக்கு நிறைய பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை
வாங்கிக்கொண்டார்கள்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
No comments:
Post a Comment