Saturday 14 March 2015

தூங்கா நகரங்களின்…தூங்கா மனிதர்கள்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே…
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே…
எவ்வளவு வாஸ்தவமான வார்த்தை வரிகள். ஒரு மனிதனுக்கு தூக்கம் மிக மிக அவசியமான ஒன்றே. தூக்கம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் ஒரு மனிதன் இருக்கமுடியும் ?
1964-ல் ராண்டி என்ற மாணவனால் நிரூபிக்கப்பட்ட தூக்கமற்ற நேரம் அதிக பட்சமாக 264 மணிகள்,15 நிமிடங்கள் சராசரியாக 11 நாட்கள். அதன் பின் அவனது விடாத நித்திரை 15 மணி நேரங்கள் நீடித்தது. இது நிகழ்த்தப்படுவதற்கு முன் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லை என்றாலே புத்தி சுவாதீனம் இல்லாமல் போகும் என்று கருதப்பட்டது. இருப்பினும் தூக்கமின்மை மனிதனை பல உடல் மற்றும் மன ரீதியான இக்கட்டுகளை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
சரி ஒரு நாளுக்கு தூக்கம் எவ்வளவு மணிநேரம் அவசியம் ? சராசரியாக 8 மணிநேரம் இது அவரவர் பழக்கம் மட்டும் உடல் அமைப்பைப் பொருத்தது. இந்த எட்டுமணிநேரம் பெரும்பாளானவர்களுக்கு இப்போது 7 மணியாக குறைந்துவிட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இதிலும் பெண்களுக்கு ஆண்களை விடவும் அதிக தூக்கம் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு; டீனேஜர்களுக்கு இன்னும் நீண்டநேரம் 9 மணிமுதல் 10 மணி நேரங்கள் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான தூக்கம் குழந்தைகள் ஞாபக சக்தியை கூட்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூங்கும் போது என்ன நடக்கிறது ? (தூக்கத்தில் நடப்பவர்களை சொல்லவில்லை) கண்ணை மூடுகிறோம் 5 அல்லது 7 நிமிடங்களில் உங்கள் மூளை தூங்குவதற்கான கட்டளையை செயல் படுத்த வேண்டும். சரி தூங்கிவிட்டோம் அதன் பிறகு தூக்கத்தைப் பல கட்டங்களாக பிரிக்கிறார்கள். மேல் நினைவு படிப்படியாக செயல் பாட்டை குறைத்துக் கொள்கிறது. மூச்சின் வேகம் ஒரு கட்டுப்பாட்டில் சீராக செல்கிறது. ஆழ்ந்த ஆரோக்கியமான தூக்கம் கனவுகளையும் உள்ளடக்கியது. ஞானிகளும் இதிலிருந்து தப்பமுடியாது. ஆழ்ந்த தூக்கத்தில் நடக்கும் கனவு பெரும்பாழும் ஞாபகம் இருக்காது. தூக்கம் நிகழும் போது ஹார்மோன்களால் உடல் முழுக்க இது உணர்த்தப்படுகிறது. ரத்த செல்களின் புதுப்பித்தல் நடக்கிறது.
ஆழ்மனம் விழித்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆழ்ந்த தூக்கம் என்பது தூக்கத்தின் நடுவில் எழுந்திருக்காமையையே குறிக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நித்திரை விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. உலகம் மறந்த மிக அயர்ந்த தூக்கம் 90 நிமிசங்கள் நீடித்தாலே நல்ல தூக்கத்தை உணர முடியும்.
மூளை நினைவலைகளை CPS [Cycles per Second] எனும் அலகால் குறிப்பிடுகின்றனர். விளித்திருக்கும் போது இவ்வலையின் அளவு 14 CPS மற்றும் அதற்கு மேலும் இருக்கும்.
கவலை,மன அழுத்தம், எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, ரத்தகொதிப்பு, நீரிழிவு, மறதி, மனோவியாதி,தலைவலி போன்ற உடல் நிலை பாதிப்புகளுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணம்.
அமெரிக்கர்களில் 60 சதவீதம் போர் தூக்கமின்மையினால் அவதிபடுகின்றனர் என்பது சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ள முடியாது. (இந்தியாவில் எவ்வளவு சதவீதம்? தெரியவில்லை)
சரிவர தூக்கம் இல்லாமல் போவது உற்பத்தி மற்றும் உடலுழைப்பு பாதிப்புகளை பொருளாதார ரீதியில் பாதிக்கிறது. குடித்துவிட்டு விபத்து ஏற்படுவதைவிடவும் தூக்க பாதிப்பினால் அநேக விபத்துகள் ஏற்படுகிறது. [இரவு காரில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்தல் நலம்.]
2008ல் என்று நினைக்கிறேன், வோல்வோ கம்பெனி வண்டிகளில் கேமரா பொருத்தி டிரைவர் தூக்கத்தால் தடுமாறும் நிலையில், ஸ்டீரிங் கட்டுப்பாடு தவறும் பட்சத்தில் அலாரம் அடித்து உசார் செய்யும் படியான ஒரு சிஸ்டத்தை நிறுவினர். [ இந்திய ரோடுகளுக்கு இதெல்லாம் ஒத்துவராது ? ]
தூக்கம் அற்று அவதிப்படுவோர் சும்மாவானும் படுக்கையில் படுத்து உருள்வதில் பிரியோசனம் இல்லை. அவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தையோ அதிக சப்தமில்லாமல் சற்று நேரம் டீவி பார்பதையோ, மெல்லிசையோ கேட்கலாம் ஆனால் தூக்க மாத்திரைகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவேண்டும்.
தூக்கம் அரோக்கிய உடல் நிலை மற்றும் சமச்சீரான உடல் இம்யூனல் சிஸ்டத்திற்கு அவசியம்.
நித்திரை வராமல் போவதற்கு பல காரணிகள், மனரீதியான காரணம், படுக்கை,படுக்கைவிரிப்புகள்,தலயணை சரியில்லாதது, ரூமில் அதிக வெப்பம் அல்லது குளிராக இருப்பது, சிறு குழந்தைகள் விழித்து தொந்தரவு (குறிப்பாக பெண்களுக்கு), இருமல், குரட்டை(மற்றவர்களுக்கு)பொருளாதார நெருக்கடி, கோபம்,கவலை, தூங்குவதற்கு முன் காபி, மது, புகைத்தல்..சொந்தபிரச்சினை, சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்வது, வயதாகிப்போதல்,மூட்டைப்பூச்சி, கொசு தொந்தரவு,…இப்படி பல காரணங்கள்.
துணையினால் குரட்டை தொந்தரவு என்று சொல்பவர்கள் விவாகரத்து கோராமல் காதில் பஞ்சை அடைத்து வைத்து கொண்டு தூங்குவது சிறந்தது.
தூக்கத்தின் இடையில் விழிப்பு ஏற்பட்டு பின் தூக்கம் வராமல் போவது. இது பெரும்பாழும் நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது.
மனிதன் தூங்கும் நிலைகளை வைத்து இவருக்கு இன்னின்ன குணநலன்கள் கொண்டவர் என்று கணிக்கிறார்கள்.
கடைசியாக… குட்டித்தூக்கம் (அ) பகல் தூக்கம் (அ) பூனைத்தூக்கம் அவசியமா ? அவசியமே இதனால் உடலுக்கு புது தெம்பு கிடைக்கிறது. பகல் தூக்கம் வெயிட் போட்டுரும் என்பதும் சரியே.
மீன்கள் கூட தூங்குகின்றன. டால்பின்கள் ஒன்னரை கண் தூக்கமும் போடுகிறது. யானை நின்னுகிட்டே தூங்கும்.

No comments:

Post a Comment