Friday 24 April 2015

சென்னை விமான நிலையம்.

சென்னை விமான நிலையம்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 42–வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை தற்காலிக மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.
விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013-ல் விழத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று வரை கண்ணாடிகள், கிரானைட் கற்கள், லிஃப்ட் கண்ணாடிகள், மேற்கூரை கண்ணாடிகள், ஃபால்ஸ் சீலிங் வகையிலான மேற்கூரை என அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமாகி வருகிறது.
இதனால் இதுவரை பலர் காயமடைந்தும் உள்ளனர். அடிக்கடி உடைந்த பகுதிகள் பழுது பார்க்கவும்படுகிறது. இருப்பினும் விபத்துகள் தொடர்கதையாகத் தான் இருக்கிறது.
சென்னை விமான நிலையம் என்றால், அங்கே ஏதேனும் உடைந்து விழாமல் இருந்தால்தான் செய்தி என்ற அளவுக்கு இந்த விபத்துகள் மிக சாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்பாக ட்விட்டர்வாசிகள் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகிறார்கள். அதன் தொகுப்பு இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
Pragadeesh Mannai ‏@Pragadeesh_G - கூரையில்லா விமான நிலையம் என்ற பெருமையை சென்னை விமான நிலையத்துக்கே குடுக்கலாம்..., ஹய்யோ ஹய்யோ
Kuttybalaji ‏@balaji4165 - திடீர் திடீர்னு உடையுதாம் ஒழுகுதாம் ஆனா இன்னும் யார் தலையிலையும் விழலையாம் #சென்னை_ஏர்போர்ட்
சிநேகமுடன் சிவா ‏@shivafreedom - 41 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் விபத்து, எல்லா ஊர்லேயும் பிளைட் தான் கீழே விழும் ஆனா இங்க ஏர்போர்ட்டே கீழே இடிஞ்சி விழுது.
ஊரோடி™ ‏@RaguC - ஆளுக்கு ஒரு இரும்புக் குடை கொடுத்தா நல்லாருக்கும், எப்ப பிஞ்சு விழும்னு கூரைய பாத்துட்டு நிக்க வேண்டியாதா இருக்கு. சென்னை ஏர்போர்ட் திகில்.
நாடோடி மாம்ஸ் ‏@kkarthic - இடிஞ்சி எதுவும் விழலை இதுவரை!! ஆமா சென்னை ஏர்போர்ட்ல தான் இருக்கேன். ;-))
ரோபோ ரோமியோ ‏@abdul_civil - சென்னை ஏர்போர்ட் 40 வது முறையாக கண்ணாடி விழுந்து சாதனை. 100 தடவை விழுந்து உலகப் புகழ் பெற வாழ்த்தும் அண்ணனின் அடி விழுதுகள்.
Dinesh Kumar ‏@DinuVj - இந்நேரம் நம்ம ஏர்போர்ட் நாராயணசாமி இருந்திருந்தா, அடிக்கடி உடைந்து விழுகும் சென்னை ஏர்போர்ட் மேற்கூரையை 15 நாளில் சரி செஞ்சிருப்பார்.
பட்டிகாட்டு வாயாடி ‏@pattikaduu - 39வது தடவையா சென்னை ஏர்போர்ட் கண்ணாடிவிழுந்து உடஞ்சிருச்சாம். ஒரு வேலை உடைஞ்ச கண்ணாடியவே திரும்பத் திரும்ப பசை போட்டு ஒட்ட வைக்குராங்களோ.
பிரகாஷ் ‏@PrakashMahadev - சென்னை விமான நிலையத்தில் 39வது விபத்து: கண்ணாடி கதவு உடைந்து ஊழியர் காயம் # விமானத்துல போனா காணாம போயிடுது .. ஏர்போர்ட் போனா விபத்து ஆகிடுது.
நாகராஜசோழன் ‏@kandaknd - உலகத்துலயே பணக்கார ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட்டுதான் கூரை எத்தனை தடவ இடிஞ்சு விழுந்ததுனு எண்ணி சொல்ல ஒரு ஆளை வேலைக்கு வச்சிருக்காங்கனா பாருங்க.
வீம்பு ‏@kadivaalam - சென்னை ஏர்போர்ட் மீண்டும் ஒரு கண்ணாடிக்கதவு உடைந்தது#செய்தி#இனிமே 'இன்று கண்ணாடிக் கதவு உடையவில்லை' ன்னு செய்தி வந்தாதான் அதிசயம்.
வெங்கடேஷ் ஆறுமுகம் ‏@venkatapy - விடுப்பா... விடுப்பா... மனைவின்னா எரிஞ்சு விழறதும் ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழுறதும் சகஜம் தானே.
பாரதி ‏@BharathiBigB - மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல மறுபடியும் ஏதோ விழுந்து தொலஞ்சிடுச்சாமே :(( பேசாம அந்த கான்ட்ராக்ட்ட நாம எடுத்தா நல்ல வருமானம் கிடைக்கும் போலயே :))
முனிஸ்காந்த் ‏@smartsuruli - நெசமா அது சென்னை விமான நிலையம்தானா இல்ல சங்கர் படத்துக்கு போட்ட செட்டா??? #திடிர் திடிர்னு சாயுதாம்
சிங்கார வேலன் ‏@AnishBon - சென்னை விமான நிலையம் இன்னும் இடியுமாம், பேய் இருக்காம்,, பிசாசு இருக்காம்,,கிளப்பி விட்டுருவோம்!!

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்… யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அருகாமையில் சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது

night_mare1 போபால் நினைவுச்சின்னம் பார்க்க கெடுபிடிகள் சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். ஆங்கிலம் எதற்கும் பயன்படாது போலிருந்தது. வற்புறுத்தவே ஒரு காவலாளிகூடவே வந்து பொது நல அதிகாரியைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் இன்னொருவரை துணைக்கனுப்பினார். இருவரும் கூட இருக்க நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூற ஒரே ஒரு மலர்வளையம் மட்டுமே நினைவுச்சின்னத்தின் கீழ் இருந்தது. ஒரே ஒரு மலர்வளையம் வைக்க மட்டும் அனுமதியா. அல்லது யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி மனதில் வந்தது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னின.புகைப்படம் எடுத்த கணத்திலேயே உடனே கிளம்பச் சொன்னார்கள். அந்த இரு காவலாளிகளும் நாங்கள் வெளியேறுவரை முகப்பு கதவு வரை எங்கள் கூட இருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள்., அதன் பின்புறம் இருந்த 6 கி,மீ அப்பால் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். துரத்திவந்தவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர், உள்ளே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் பல ஆயிரம் டன்கள் நிலத்தையும் , நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி மக்களை நோயாளிகளாகவும் பிணங்களாகவும் ஆக்கியிருக்கிறது. திருப்பூரில் சாயக்கழிவுகள் அங்கங்கே கொட்டிக்கிடப்பது ஞாபகத்திற்கு வந்தது.இன்னும் போபால் கார்பைடு தொழிற்சாலைக்குள் 18,000 டன் நச்சுக்கழிவு கொட்டிக்கிடக்கிறது. ( திருப்பூரின் இவ்வாண்டின் பின்னலாடை சார்ந்த அந்நிய செலவாணி வருமானம் 18,000 கோடி ரூபாய் என்ற ஞாபகம் வருகிறது.). முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே 2000 லாரிகள் கொள்ளுமளவு கழிவு அங்கிருந்தது. கழிவைக் கொட்ட 32 ஏக்கர் பரப்பு குளம் அமைக்கப்பட்டு அதில் கழிவு தேங்கியிருக்கிறது. இது போபால் நகரைச்சுற்றியிருக்கும் மண்ணையும் நிலத்தடி நீரையும் நச்சாக்கி விட்ட்து.இந்த நச்சுக் கழிவை எரிக்கும் முயற்சியில் 10 பேர் பார்வையிழந்ததால் அதுவும் கைவிடப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட்து. ஜெர்மனிக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவற்றை அக்ற்றக்கோரி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அங்கு நிராகரிக்கப்பட்டன.புதிய டவ் நிர்வாகமும் மத்திய அரசும் இதில் கண்ணாமூச்சியும், பாராமுகமும் காட்டுகின்றன.
சுற்றிப்பார்த்த போது தொழிற்சாலையின் சுவர்களில் நிறைய வாசகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.” டவ் கெமிகல்ஸ் நிர்வாகமே. இந்தியாவை விட்டு வெளியேறு. இனி உனக்கு இங்கு வேலை இல்லை” “ குற்றவாளிகளை தண்டிக்கவும் “. “ நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாக வழங்கு. தொடர்ந்த மருத்துவ வசதி செய்து கொடு” “அரசே.. கெட்டுப் போன சுற்றியுள்ள பகுதிகளை சீர் அமை . ” பாதிகப்பட்டவர்களுகு அவர்களின் உடல் நலம் பற்றிய புத்தக ஆவணங்களை வழங்கு “ என்றபடி அந்த வாசகங்கள் இருந்தன,
முப்பதாண்டுகளுக்கு முன்னால் டிசம்பரின் அந்த குளிர்நாளில் வழக்கமான பராமரிப்பு பணியின்போது துருப்பிடித்த குழாய்கள் கசிந்து ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாய்ந்தது. புகை மண்டலம் மேலெழுந்து தொழிற்சாலையைத் சூழ்ந்து கொண்டது. மரணப்பிடிக்குள் போபால் நகரம் வந்து விட்டது.கண் எரிச்சல், மூச்சுத்திணறில் மக்கள் மூச்சடைத்தது. பலர் செத்து விழுந்தனர். பலர் கண்ணில் பட்ட ( எரியும் கண் காட்டிய ) கழிவுநீர்க் குட்டைகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வாந்தியும் , மலமுமாக விழுந்து தவித்தனர். உடனடியாக 10,000 பேர் செத்துமடிந்தனர். தொழிற்சாலையை சுற்றி இருந்த 6 லட்சம் மக்களின் நுரையீரல்களில் விச வாயு புகுந்து இன்னும் பாதிப்பைத் தந்து வருகிறது. செத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போல பாதிக்கப்பட்டவர்கள் குற்றுயிரும் குலையுமாக வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சம் பேர் 15 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களில் பலரை விசவாயு பற்றிய 30 ஆண்டு நினைவு நாள் மேடையில் , கூட்டத்தில் போபால் விசவாயு பீடிட் மகிளா உத்யோக் சங்காதன் ஏற்பாடு செய்திருந்த சுல்தானியா ஜனன மருத்துவமனை பூங்காவில் நடந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. மேதா பட்கரின் ஆவேசமான பேச்சில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது ,நானும் என் பங்கிற்கு ஒரு கவிதையை எழுதினேன்.
எங்கள்து கண்கள் பறிக்கப்பட்டபின்
எங்கள் உயிர்கள் பிடுங்கப்பட்ட பின்
நாங்கள் நடைபிணங்களான பின்
நீங்ள் செய்ய ஒன்றிருக்கிறது.
வருடாந்திர திதிக் கூட்டம்
மலரஞ்சலி
கொஞ்சம் பூக்கள்
சிலவரிகளில் கொஞ்சம் கவிதைகள்.
பிறகு அடுத்த வருட்த்திற்கு காத்திருப்பது.
மேத்தா பட்கர் முழங்கிக் கொண்டிருந்தார்” “மோடியிடமும் , முதலமைச்ச்ர் சிவராஜ் சவுகானிடமும் இன்னும் அதிகம் எதுவும் எதிர்பார்க்க முடியாது “
பூங்காவின் முகப்பில் மூன்று பொம்மைகள். நீதித்துறை, சட்டம், பன்னாட்டு கம்பனிகள் கம்பீரமாய எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நோக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மேத்தா பட்கர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்திய விவசாய புரட்சி உரங்களைக் கட்டாயமாக்கி விட்டபோது பூச்சி கொல்லி மருந்துகளுக்காக, செயற்கை உரங்களின் உறபத்திக்காகத் தொடங்கப்பட்டதுதான் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை. செத்து விழுந்தவர்கள், மாடுகள் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் எரியூட்டு நடந்திருக்கிறது. அவை எரியூட்டப்பட்ட போது எழுந்த புகை அதைச் செய்த ராணுவத்தினரை பாதித்து மூச்சு திணற வைத்திருக்கிறது.
இன்னுன் பாதிப்பாய் 300% குறைப்பிரசவம். 200% சிசு மரணம் நிகழ்கிறதாம். இன்னும் 2 லட்சம் பேர் பாதிக்கபட்டு சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உயிர் பழைத்தவர்களை பெரும் பாலும் தாற்காலிக பாதிப்பிற்கு உள்ளானவர்ளே என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.பாதித்த ஆறுமாதற்குப்பின் மத்திய பிரதேச அரசு 87 கோடி ரூபாய் ஒதுக்கி ஆரம்பத்தில் ரூ200 பிறகு 750 ரூபாயும் நிவாரணம் தந்தது. குடும்பத்திற்கு 1500 ரூபாய் . 13 ஆண்டுகளுக்குப் பின் யூனியன் கார்பைடு நிறுவன பங்குகள் விற்க முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவி எட்டாண்டுகள் இலவச சிகிச்சை தர ஆணையிட்டது. அந்த மருத்துவம்னை வளாகத்தில்தான் நினைவுச்சின்னம் உள்ளது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னிக் கொண்டிருக்கிறது.நம்பிக்கை பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையோருக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைதான் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த அடுத்த ஆண்டு “ போபால் விச வாயு கசிவுச் சட்டம் “ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றி யூனியன்கார்படிடுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் ரூ1750 கோடியை இழப்பீட்டு வைப்புத் தொகையாக அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கு இந்தியாவில்தான் நட்த்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்திய அரசு இரு மடங்குத் தொகையைக் கேட்ட்து. ஆனால் அதில் 15% தந்து நிர்வாகம் விலகிக் கொண்டது. பல்வேறு தன்னார்வக் குழுக்கள் நீதிமன்றத்தை அணுக 2010ல் தொழிற்சாலையின் இயக்குனர், செயல் தலைவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை தந்தது. உடனே அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கிரது இன்னும். அந்த்த் தீர்ப்பில் அதன் நிறுவனத்தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு குறிப்பு இல்லை. அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் தன்னைக்குற்றவாளியாக்க இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நிராகரித்தது. வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப்படுகொலைக்காக வழக்குமன்றம் பின் 10 ஆண்டு சிறை வழங்கினாலும் அவர் ஆஜராகாததால் தப்பியோடியக் குற்றவாளி என்றும், இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்ட்து. ஆண்டர்சனை ஒருமுறை கைது செய்து பின் மத்திய அரசு அவர் தப்பிப் போக வழிசெய்தது. உச்சநீதிமன்ற வழக்கொன்றும் கிடப்பிலேயே உள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை சொற்பமாகவே இதுவரை கிடைத்துள்ளது.
போபால் பேரழிவு பற்றி 1991 ல் மகேஷ் மதாஷ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுபடுத்துகிற விதமாய் ரவிகுமாரின் இயக்கத்தில் ”போபால்: ஏ பிரேயர் பார் ரெயின் “ என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. யூனியன் கார்படு தொழிற்சாலையின் முக்கியஸ்தரான ஆண்டர்சன் சென்றாண்டு இறந்து போனதால் இப்படம் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கியிருந்தன. திலீப் என்ற ரிக்‌ஷா தொழிலாளிக்கு யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.அந்த ஆலைக்குள் நடக்கும் விபத்து காரணமாக பணியாளர் ஒருவர் இறந்து விட அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பல அப்பாவிகள் முன்னமே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல் அவனுடனும் சிலர் சேர்கிறார்கள். அவனின் சகோதரியின் திருமண நாளில் கசியும் விச வாயு கசிவு காரணமாக திருமண விழாவுக்கு வந்த பலர் செத்து விழுகிறார்கள். கண் எரிச்சல், உடல் உபாதைகளால் பலர் கழிவு நீர் குட்டைகளுக்குள் விழுந்து செத்துப்போகிறார்கள். மருத்துவமனைகளில் பிணக்குவியல். சாலைகளில் பிணக்குவியல்.வாந்தியும், பேதியுமாய் செத்து விழுபவர்கள் பலர்.. தொழிற்சாலையில் ஏற்படும் சிறு அளவிலான பழுது கண்டு பிடிக்கப்படுகிற போது மேலாளர் வெளியே சொல்லாதே . வேலை போய் விடும் என்று மிரட்டி விடுகிறான்.சாதாரண ஏழையான திலீப் தன் வாழ்க்கையை கார்பைடு தொழிற்சாலை வேலை மேம்படுத்தும் என்ற கனவில் இருந்தவனுக்குப் பேரிடி.. vissவிசவாயு கசிவு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆலை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு உள்ளூர் பத்திரிக்கையாளனிடம் சொன்னாலும் அதை பத்திரிக்கை எச்சரிக்கையாக்குவதற்கு முன் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. திலீப் இந்த செய்திகளை முன்னம் உள்ளூர் பத்திரிக்கையாளன் மோத்வானிக்குச் சொல்லியிருக்கிறான். மோத்வானி விசாரிக்கையில் கார்பைடு ஆலையில் நடக்கும் பல் முறைகேடுகள் தெரிய வருகின்றன. எழுதுகிறார். தொழிற்சாலையைப் பார்வையிட வரும் ஆண்டர்சன் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை மாற்ற முயல்கிறார். அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார். ” பாதுகாப்பு கெடுபிடிகள் எங்கள் நாட்டில் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இந்தத் தொழிற்சாலையை அமைத்தோம். இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கும் என்றால் இங்கு அமைக்க வேண்டியதில்லையே “ என்கிறார். இப்படத்திலும் வாரன் ஆண்டர்சன் சற்றே மனிதாபிமானம் உள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் காட்டப்பட்டிருக்கிறார். திலீப்பின் குடும்பத்தைச் சார்ந்தே படம் இயங்குகிறது. விபத்துக்கும் முன் தொழிற்சாலை நடவடிக்கைகளும் சிறுசிறு விபத்துகளும் அதிர்வுடன் காட்டப்பட்டுள்ளன. விபத்திற்குப் பின் சொல்லப்பட்ட விசயங்கள் குறைவாகவே இருக்கின்றன.வாரன் ஆண்டர்சன், அரசியல்வாதிகள் மீதான விமர்சமும் குறைவாகவே இருக்கிறது. பலியானவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ கிடைக்காத அநீதி பற்றி அதிகம் இப்படம் பேசவில்லை. என்பது குறைதான். ஆனால் இன்றைய தலைமுறை இப்பேரழிவை அறிந்து கொள்ள இப்படம் ஆதாரமாக அமைந்துள்ளது.போபால் மக்களின் வாழ்க்கையோடு வெகு நெருக்கமாக அப்படம் இல்லை. ஆனால் போபால் பற்றிய உண்மைகளைக் கொண்டிருந்த படம்.
மத்திய பிரதேச முதல்மந்திரி 30 ம் ஆண்டு நினைவை ஒட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்ட்த்தில் பேசும் போது “பாதிக்கப்பட்டவர்களின் குரலை சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம் “ என்று பேசினார்.பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரலினைச் சொல்லும் படம் இது.
கூட்டம் நடந்த் இடத்திற்கு மேற்பகுதியில் ஒரு ஏரி தென்பட்டது. சென்ற போது ஏரியின் மீது ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.. அம்மன் கர்ப்பகிரகத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி பார்டர் . அதில் வேண்டுதல் போன்று சிறு சிறு துணிகள் கட்டப்படிருந்தன. அதில் பிளாஸ்டிக் பைகளும் நிறைய கட்டப்பட்டிருந்தன. சிறு துண்டுத்துணிகளுக்கு மாற்றா அவை. நேர்த்திக்கடனுக்கு பிளாஸ்டிக்கும் வந்து விட்டது தெரிந்தது. நடந்த களைப்பு தீர கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தேன். கால்கள் அம்மன் இருக்கும் திசையில் இருந்தன. உடல் ஊனமுற்றவன் ஒருவன் என்னைப் பார்த்து முறைத்தான். அவனை கோவிலைச் சுற்றிப்பார்த்தபோது கவனித்திருந்தேன். இரு கைகளையும் சேர்த்து கடவுளை நோக்கி கூப்ப முடியவில்லை.. கைவிரல்கள் சேர சிரமப்பட்டன. நான் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்ததை அவன் ஆட்சேபிப்பது தெரிந்தது. கால்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன் அந்த ஏரியிலிருந்து சிறு செம்பில் நீர் மொண்டு கொண்டு வந்து பலர் அம்மன் மேல் விடுவது தெரிந்தது. உடம்பும் முகமும் கோண அவனும் தண்ணீர் கொண்டு வந்து விட்டான். கோபத்தில் என்தலையில் ஊற்றி விடுவானோ என்ற பயம் இருந்தது அவனுடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். முப்பாதாண்டுகளுக்கு முன் அவன் சிறு குழந்தையாக இருந்திருக்கிறான. ” விச வாயுவால் பாதிக்கப்பட்ட்வன் நான். என் வீட்டில் இருவர் இப்படி. எல்லா வீடுகளிலும் யாராவது இருக்கிறார்கள் என்னைப் போல் ஊனத்துடன் “
போபாலில் பலரைக்கவர்ந்த இடம் ஹனுமன் கஞ்ச். அங்கு ஹனுமன் கோவில் கட்டப்பட்டது குறித்த ஒரு கதை உள்ளது. பேகம் ஹாஜகான் ஆட்சி காலத்தில் நடந்ததாம் . கமால்மகராஜ் என்ற சாமியார் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடவுள் வழிபாடு செய்து வந்தாராம். வழிபாட்டின் போது சங்கு ஊதுவாராம்.அது பேகம் அவர்களுக்கு தொந்தரவு தந்திருக்கிறது. அவரைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறார். படை வீரர்கள் அவரைத் தேடிப் போன போது அவர் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் வழிபாட்டு நேரத்தில் சங்கொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. படைவீரர்கள் அவர் உடலை வெட்டி பிய்த்துப் போட்டு விடுகிறார்கள்.அதன் பின்னும் சங்கொலி கேட்கிறது.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த அந்த விபத்தின் போது உடனடியாக எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டும். ஒலிக்கவில்லை. அது அணைத்து வைக்கப்பட்டிருந்த்தாம்.
இப்போது சொல்லப்படுவதெல்லாம் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகத்தான் இன்றைக்கு இருக்கிறது..தங்கள் முதுகிலும் மனதிலும் பிணங்களைச் சுமந்து கொண்டு ஊர் முழுக்க பலர் சபித்தபடி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.செத்துப் போன சவங்களின் விலை சொற்பமாகத்தான் இருக்கிறது.

தாலியின் சரித்திரம்

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

மனதில் உறுதி வேண்டும்.


03 -- SNSN (July 2014)

மனதில் உறுதி வேண்டும் / வாக்கினிலே இனிமை வேண்டும் / நினைவு நல்லது வேண்டும் / நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
என்று பாரதி மிகச்சரியாகப் பாடினார். முதலில் நமக்கு இருக்க வேண்டியது மனதில் உறுதி. வெற்றி பெறுபவர் விட்டுவிடுவதில்லை. விட்டுவிடுபவர் வெற்றி பெறுவதில்லை என்று ஒரு ஆங்கில முதுமொழி உள்ளது. ஆமாம். நமக்கு வெற்றி வேண்டுமானால் விட்டுவிடவே கூடாது. விட்டு விடாமல் இருக்கவேண்டுமானால் நம் மனதில் உறுதி வேண்டும்.
மன உறுதி என்றால் என்ன?
இது ஒரு கேள்வியா? இதுகூடவா தெரியாது என்று கேட்பீர்கள். நான் கேள்வி கேட்கவில்லை. மன உறுதி உங்களிடம் இருக்கிறதா என்று நீங்களே பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
  1. அவருடைய இமெயிலுக்கு பதிலனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தீர்களே அனுப்பிவிட்டீர்களா?
  2. அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தியானம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தீர்களே செய்தீர்களா?
  3. மெடாஸின் வாங்குவதற்காக மெடிகல் ஷாப்-புக்குப் போய் எல்லாம் ஒரே பாராஸெட்டிமால் குடும்பம்தான் என்று கடைக்காரர் சொன்னதை வைத்து க்ரோஸின் வாங்கிவந்தீர்களா இல்லையா? அப்போ மெட்டாஸின் வாங்கவேண்டுமென்ற உங்கள் முடிவு என்னானது?
  4. அடிக்கடி மறந்து போகும் ஒன்றைப்பற்றி, இனி மறக்கவே கூடாது என்று முடிவெடுத்தீர்களே, அதை நிறைவேற்றினீர்களா?
இப்படி நான் கேட்டுக்கொண்டே போகலாம். நீங்கள் மனசாட்சிப்படி பதில் சொன்னால், எந்தக் கேள்விக்கும் முடிவெடுத்தபடி செய்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஏன்? உங்களுக்கு மன உறுதி இல்லை. ஆனால் வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள், பெருவெற்றி அடைந்தவர்கள் – கவனிக்கவும், சாதாரண வெற்றியல்ல, பெருவெற்றி — யாரும் உங்களைப் போல இல்லை. அதனால்தான் அவர்கள் பெருவெற்றி அடைந்தார்கள்.
ஃபோர்டு கார்
ஹென்றி ஃபோர்டு தெரியுமில்லையா? அவர் முதன் முதலாக கார் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தார். அமெரிக்காவில் சைக்கிளில் போகிறவர்களெல்லாம் காரில் போக வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது. பேராசை அல்ல.
கவனிக்கவும். பெரிய ஆசை. மஹா ஆசை. மெகா ஆசை. இதற்கும் பேராசைக்கும் பெரிய வித்தியாசமுள்ளது.  தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது பேராசை. ஆனால் வைக்கின்ற ஆசையை, லட்சியத்தை சின்னதாக வைக்காமல் பிரம்மாண்டமாக வைப்பது பெரிய ஆசை.  புரிகிறதா?
பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். அது சரிதான் ஆனால் பெரிய ஆசை அப்படிப்பட்டதல்ல. அது பற்றி எரியும் ஆசை. எப்படி ராக்கட்டின் பின்னால் நெருப்பு பற்றி எரிய எரிய அது மேலே மேலே போய்க்கொண்டிருக்குமோ அதே போல வாழ்க்கையில் உங்களை மேலே மேலே கொண்டுபோகக்கூடிய ஆசை.  பேராசை அழிவுப்பூர்வமானது. பெரிய ஆசை ஆக்கப்பூர்வமானது. பேராசை உங்களை அழிக்கும். பெரிய ஆசை உங்களை வாழவைக்கும். மற்றவர்களும்  வாழ வழிவகுக்கும். பேராசை ஒரு பள்ளத்தாக்கு. பெரிய ஆசை மலையின் உச்சி.
சரி, ஹென்ரி ஃபோர்டுக்கு வருவோம். ஒரு கார் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் அல்லவா? அதுபற்றி கருத்து கேட்க அவர் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த ஆள் ரொம்பப் பெரிய மனிதர்.  அவரும் ஒரு சாதனையாளர். அதுவும் உலகமே வியக்கும் சாதனை மனிதர் அவர். இனம் இனத்தோடு சேரும் என்பது இதுதான். ஒத்த அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் இடையில்தான் நட்பும், உறவும் ஏற்படும். காதலர்களுக்கு இடையில் இருப்பது  மாதிரி. நல்ல கணவன் மனைவிக்கு இடையில் இருப்பது மாதிரி. நல்ல நண்பர்களுக்கு மத்தியில் இருப்பது மாதிரி. சரி, யார் அந்த சாதனை மனிதர்? அவர் வேறு யாருமல்ல, இறைவனுக்கு அடுத்த படியாக இந்த உலகத்துக்கே ஒளி கொடுத்த ’விஞ்ஞான மகான்’ தாமஸ் ஆல்வா எடிசன்தான்!
எடிசனும் ஃபோர்டும் நண்பர்கள். பின்னே, அப்படித்தானே இருக்க முடியும்? காந்தத்தோடு இரும்புதானே போய் ஒட்டும்?  வெறும் மண் ஒட்டுமா?
ஆனால் அந்த விஞ்ஞான மேதை என்ன சொன்னார்? அதுதான் ஆச்சரியமான உண்மை. ஃபோர்டின் கருத்தைக் கேட்டுவிட்டு, அது சாத்தியமில்லை, வேண்டாம், நீங்கள் பேசாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு வந்துவிடுங்கள் என்றார் எடிசன்!
நம்ப முடியவில்லை. ஃபோர்டின் புதிய சிந்தனை அவருக்குப் புலப்படவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? ஆஹா, இந்த கருத்தை இவன் அமுல் படுத்திவிட்டால் பெரிய ஆளாகிவிடுவான் என்ற பொறாமை பல்பு அவருக்குள்ளும் எரிந்ததா? தெரியவில்லை.
ஆனால் சாத்தியமில்லை என்று அவர் சொன்னது மட்டும் சத்தியம். வரலாற்றில் இது இருக்கிறது. அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் போனதுதான் ஹென்ரி ஃபோர்டு செய்த மிகப்பெரிய சாதனை என்று நான் சொல்வேன்! ஆமாம். அவ்வளவு பெரிய மனிதர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர்; அவர் எப்படி தவறாகச் சொல்லமுடியும் என்று ஃபோர்டு நினைக்கவில்லை. அவர் ஏற்கனவே தன் மனதுக்குள் அழுத்தமான கோடு, இல்லை இல்லை, ஃபோர்டு கார் செல்லத் தேவையான ரோடு போட்டு வைத்திருந்திருக்கிறார். ஆமாம். எடிசனே சொல்லிவிட்டார், இது நிச்சயம் நடக்காது என்று ஃபோர்டு நினைக்கவே இல்லை! அங்கேதான் அவரது மகத்துவம் இருக்கிறது. ”தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி  தன்மெய் வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் கருத்தை ஹென்ரி ஃபோர்டு பின்பற்றி இருக்கிறார்! அங்கேதான் அவர் நிற்கிறார்!
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல ஃபோர்டு காரியமாற்ற ஆரம்பித்தார். முதல் அவர் உருவாக்கிய காரில் ரிவர்ஸ் கியர் இல்லை. அதைப் பின்புதான் அவர் வடிவமைத்தார். அதனால் என்ன? முன்னேறிச் செல்லும் கார்களை மட்டும் அவர் முதலில் உருவாக்கினார் என்று வைத்துக்கொள்ளலாம்! என் நண்பர் ஒருவர் சொன்ன அனுபவ நகைச்சுவை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. முதன் முதலாகக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பிய அவர் தன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு போனார். ஒரு சின்ன தெருவில் கார் சென்றபோது எதிரில் ஒரு கார் வந்துவிட்டது. இவர் ரிவர்ஸில் போனால்தான் அந்தக் காருக்கு வழி கிடைக்கும் என்ற சூழ்நிலை. இவர் யோசிக்கவே இல்லை. உடனே காரைவிட்டுக் கீழிறங்கி எதிரில் இருந்த கார் ஓட்டுனரிடம் சென்று, “நான் இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கத் தெரியாது. எனக்காக தயவு செய்து நீங்களே ரிவர்ஸ் எடுத்துவிடுங்கள்” என்று சொல்லித் தன் காரின் சாவியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்! அவரைப் போன்றவர்களுக்காக ஹென்ரி ஃபோர்டு முதலில் கார்களை உருவாக்கியதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்!
’ரைட்’ எப்படி ராங்காகும்?
ரைட் சகோதர்கள் விமானம் செய்ய எண்ணி, அதைப் பற்றிய தங்களுடைய கற்பனைகளை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.  மற்றவர்கள் என்ன, அவர்களுடைய அப்பாவே சிரித்தார். ”பணத்தை விரயம் செய்ய இவ்வளவு முட்டாள்தனமான ’ஐடியா’வா? வேண்டாம் மக்களே, காற்றில் பறக்கின்ற வேலையை தயவுசெய்து பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலாகச் சொன்னார்! ஆனால் அவர்கள் விட்டார்களா?
”சாரி டாடி, எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்காமல் நாங்கள் விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறிவிட்டார்கள்.
முதல் விமானத்தைப் பறக்கவிட  வட கரோலினாவில் இருந்த கிட்டி ஹாக் (Kitty Hawk) என்ற இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நம்பிக்கையில்லாமல், என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சிலர் சென்றார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? பறவைகளைவிட அதிகமாக விமானங்கள் வானில் பறந்துகொண்டுள்ளன என்றே சொல்லலாம். ரைட் சகோதர்களின் “அபத்தமான கற்பனை” கொடுத்த விளைவு அது!
ரேடியம்
ரேடியமெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக கிடைக்காது என்றுதான் மேரி க்யூரியிடம் மற்ற விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால் தூங்காமல் கொள்ளாமல் நடு இரவிலும் விழித்திருந்து விடாமல் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார் மேரிக்யூரி என்ற சாதனைப்பெண். ரேடியம் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றபிறகு, போய் அதை வாங்கி வருவதற்குக்கூட அவரிடம் காசில்லாமல் இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம்!
அற்புதப் பாலம்
ப்ரூக்லின் பாலம் என்று ஒன்று நியூயார்க் நகரத்தில் உள்ளது. உலகின் மிக அற்புதமான தொங்குபாலங்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட 1600 அடி நீளம் கொண்டது! வேறு வார்த்தைகளில் சொன்னால் 490 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது! அதைக் கட்டியவர்கள் இரண்டு பேர். ஒரு அப்பா, ஒரு மகன். இருவரின் பெயரும் ரூப்லிங் (Roebling) என்று வரும். தந்தை ஜான் அகஸ்டஸ் ரூப்லிங். மகன் வாஷிங்டன் ரூப்லிங். இரண்டு பேருமே பொறியாளர்கள்தான். ஏற்கனவே சின்னச் சின்ன தொங்கு பாலங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 500 மைல் நீளப் பாலம் என்பது அசாத்தியமான கற்பனையாகவே இருந்தது.
திட்டமிட்டு, வடிவமைத்து வேலைகள் செய்த சில காலத்திலேயே ஒரு விபத்தில் சிக்கி தந்தை ரூப்லிங்-கின் பாதங்களின் இரு பெருவிரல்களும் நசுங்கி, பின் வெட்டியெடுக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வேறு விளைவுகளால் அவர் இறந்தே போனார். பின்னர் எல்லாம் மகனின் தலையில் வந்துவிழுந்தது. ஆனால் மகனும் ஒரு விபத்தில் சிக்கி அப்பாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரால் அசையவோ பேசவோ முடியாது! மருத்துவமனையிலேயே பல ஆண்டுகள் கிடந்தார். அதோடு தொங்குபாலம் பற்றிய திட்டம் அந்தரத்தில் தொங்கிப் போய்விடும் என்றுதான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அதுதான் நடக்கவில்லை. உடல் கிடந்தாலும் மனம் படு சுறுசுறுப்பாகவே இருந்தது ரூப்லிங்கிற்கு. ஒரு விரலை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. அதை வைத்துக்கொண்டு அவர் தன் மனைவியில் கையில் ஒரு தட்டு தட்டினார். ப்ரூக்லின் பாலம் அங்கே உருவாகத் தொடங்கியது என்று சொல்லலாம்.
ஆமாம். ஒவ்வொரு தட்டும் பொறியாளர்களுக்கு ஒரு உத்தரவு. அதை எப்படி அவர் மனைவி புரிந்துகொண்டார், அவர் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகியது, அவளுக்குப் புரிய வைப்பதற்கு ரூப்லிங் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இவ்விதம் தட்டித்தட்டி, ஒரு சிற்பி சிலையை உருவாக்குவதுபோல, ரூப்லிங் தன் மனைவியின் கையில் தட்டி உத்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். ப்ரூக்லின் பாலம் மெல்ல மெல்ல உருவானது!
ஆஹா, இதுவல்லவா சாதனை! நான் ப்ரூக்லின் பாலத்தைச் சொல்லவில்லை. ரூப்லிங் செய்த காரியத்தைச் சொல்கிறேன். ஒரு மனிதனின் மனதில் எவ்வளவு உறுதி இருந்தால் இப்படி விடாமல் முயன்றிருக்க முடியும்!
அற்புத மனிதன்
மாரிஸ் குட்மேனின் (Morris E Goodman) கதையும் இப்படிப்பட்டதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு குட்டி விமானம் வாங்கினார். அதை ஓட்டிக்கொண்டு போனபோது ஒரு விபத்து ஏற்பட்டது. விமானத்தில் ஏதோ கோளாறு. இவர் ஏதேதோ செய்து ஓடுதளம்வரை வந்துவிட்டார். ஆனால் விமான எலக்ட்ரிக் கம்பிகளில் மோதி தலைகுப்புற விழுந்தது. குட்மேனுக்கு எலும்புகள், தலைப்பக்கம், முதுகுத்தண்டுப்பக்கமெல்லாம் சேதமாயின. ஸி-1, ஸி-2 ரக காயங்கள் என்று அவை மருத்துவ உலகில் சொல்லப்பட்டன. அவரசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எட்டு மாதங்கள் இருக்க நேரிட்டது.
இந்த காலகட்டத்தில் அவரது உதரவிதானமும் நிரந்தரமாகச் சேதமடைந்திருந்தது. அவரால் பேசவோ, தானாக மூச்சுவிடவோ, உடலை அசைக்கவோ முடியாது. கண்கள் மட்டும் இங்குமங்கும் அசையும். அவ்வளவுதான். இனி காலம்பூராவும் அவர் இப்படியே ஒரு சப்பிப்போடப்பட்ட மாங்கொட்டை மாதிரிதான் கிடக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
ஆனால் அடுத்த கிறிஸ்துமஸுக்குள் தான் எழுந்து நடந்து மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். கவனிக்கவும், குட்மேன் முடிவெடுத்தார். அவர் கண்கள் அசைவதைப் பார்த்த அவரது சகோதரி அவருக்கு உதவினார். கண் அசைவுக்குத் தகுந்தமாதிரி  ஏ, பி, சி, டி எழுத்துக்களைப் புரிந்துகொண்டார். உதாரணமாக ஒருமுறை அசைத்தால் ஏ, இரண்டு முறை என்றால் பி – இப்படி. இப்படியே தான் சொல்ல நினைப்பதையெல்லாம் ’பேசி’ வந்தார் குட்மேன்.
செயற்கை உபகரணம் இல்லாமல் சொந்தமாக முயன்று அவர் மூச்சு விட்டபோது மருத்துவர்களுக்கு பெரிய ஆச்சரியம். அதேபோல பல ஆச்சரியங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. அவர் நினைத்தபடி எழுந்து நின்றார். யாருடைய உதவியும் இன்றி நடந்தார்! எட்டு மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ ஆனார்! அந்த மன உறுதிக்காகத்தான் உலகம் அவரை அற்புத மனிதர் என்று அழைக்கிறது.
மன உறுதி என்ற அந்த அற்புத ஆற்றல் நம்மிடமும்தான் உள்ளது.
பயன்படுத்தினால் என்ன நண்பர்களே?

நாகூர் ரூமி.

Monday 6 April 2015

புற்றீசல்கள் போல் செய்தி சேனல்கள்; போர்க்களம் போன்ற விவாதங்கள்: மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

புற்றீசல்கள் போல் படையெடுக்கும் செய்தி சேனல்களில் அன்றாடம் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சிகளால் செய்தியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ரமா பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
ரமா பாண்டே, தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 250-வது அத்தியாயத்தின் வெற்றி விழாவில், தற்போதைய செய்தி தொலைக்காட்சிகளின் தரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழாவில் அவர் கூறியதாவது, "நாட்டில் செய்தி சேனல்கள் புற்றீசல் போல் அதிகரித்த பின்னர் செய்தியின் தரம் தாழ்ந்துவிட்டது. சில செய்தி சேனல்கள் எல்லா செய்திகளையும் பரபரப்பு செய்தியாக மாற்றிவிடுகின்றன. செய்தியை எப்படி படைக்க வேண்டும் என்பது ஒரு கலை. அந்தக் கலையை சேனல்கள் சிதைத்துவிட்டன.பரபரப்புக்காக வதந்திகள், கவர்ச்சிகரமான செய்திகள்கூட ஒளிபரப்பாகின்றன.
இது தவிர விவாதம் என்ற பெயரில் எல்லா செய்திகளையும் விவாதப் பொருளாக்குகின்றனர். ஒரு செய்தியை அலசுகிறோம் என்ற போர்வையில் அந்த செய்தியின் சாராம்சத்தையே சிதைத்துவிடுகின்றனர்.
செய்தி விவாத நிகழ்ச்சியின் நெறியாளர் அமைதியாக, ஆரவாரமற்றவராக இருக்க வேண்டும். ஆனால் நெறியாளர்கள் அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடுகின்றனர். இப்போதெல்லாம் விவாத நிகழ்ச்சிகளை தொலைக்காட்சித் திரையில் பார்ப்பது ஏதோ போர்க்களத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. கூச்சலும், குழப்பமும் விவாதங்களை ஆக்கிரமித்துள்ளன.
இத்தகைய சூழலில், மக்கள் இந்த கூச்சலில் இருந்து விடுபட விரும்புகின்றனர். மெல்ல, மெல்ல காலையில் ஒரு கோப்பை தேநீருடன் அமைதியாக செய்தித்தாளை வாசிக்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

விவசாயப் போராளி நம்மாழ்வார்

சுயசார்பான வாழ்க்கை என்ற கனவை நோக்கித் தமிழக விவசாயிகளை அழைத்துச் சென்றவர்.
நம்மாழ்வாருடன் பழகிய பலரும் கூறியது, “எங்களால் நம்மாழ்வாரின் ஆழ, அகலங்களை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை” என்பதே. அது உண்மைதான். தனது ஆளுமைத் திறன்களை, அறிவாற்றலை, நுண் திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்ட அவர் மறுத்துவந்தார். தேவைப்பட்ட சூழலிலும் ஏதோ மிகச் சாதாரண ஒன்று போலவே காட்டினார். அடித்தட்டுக் கிராமத்து மனிதர்களின் வாழ்வை ஒரு படியாவது உயர்த்து வதையே முக்கியமான பணி என்றாக்கிக்கொண்ட அவருடைய வாழ்வில் அந்த அடித்தட்டு மக்களுடனான அனுபவங்களே அவரை ஆமை போலத் தன்னை உள்ளடக்கிக்கொள்ளச் செய்துவிட்டது.
தர்மபுரி அஞ்சட்டி மலைப் பகுதியில், விவசாயிகள் மத்தியில் தொண்டுநிறுவன ஊழியராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு அனுபவம் அவருக்கு. அந்த மலைப் பகுதியில் தடுப்பணைகள் கட்டி, நீர் தேக்கி விவசாயம் செய்ய உதவுதல் என்ற அடிப்படையில் பல தடுப்பணைகளை இவரும் நண்பர்களும் உள்ளூர் மக்களுமாகச் சேர்ந்து கட்டினார்கள். கட்டி முடித்த பின் விவசாயிகளிடம், “இனி இந்தத் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்யலாம் இல்லையா?” என்று கேட்டபோது அவர்களில் பலரும் இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்கள். “எங்கள் நிலம் மலையின் மேற்பகுதியில் இருக்கிறது. தடுப்பணையோ கீழே இருக்கிறது. கீழிருந்து மேலே எப்படித் தண்ணீர் எடுத்துச் செல்வது என்றார்கள். “நாம் எல்லோரும் சேர்ந்துதானே திட்டமிட்டுச் செயல்படுத்தினோம். இதை ஏன் அப்போது சொல்லவில்லை” என்று நம்மாழ்வார் கேட்டபோது, “நீங்கள் எல்லோரும் படித்தவர்கள். நீங்கள் செய்தால் சரியாகத்தானே இருக்கும் என்று இருந்தோம்” என்றார்கள். அப்போது அவர் எடுத்த முடிவுதான், தான் படித்தவன் என்று இனிமேல் கூறுவதில்லை என்பது. தன்னுடன் இணைந்து இயங்கும் அடித்தட்டு மனிதர்கள் எவ்வித மனத்தடையும் இல்லாமல், தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் இணைந்து இயங்கவும், தங்களின் கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் உதவும் வகையில், தன் ஆளுமைகளை மறைத்தும் சுருக்கியும் கொண்டார் நம்மாழ்வார்.
மக்களின் இயற்கை அறிவு
தன் ஆளுமைகளை மறைத்துக்கொண்டது போலவே அந்த மக்களுடன் சேர்ந்து இயங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டும் தன்னை மேம்படுத்திக்கொண்டார். “மக்களிடம் அறிவு ஆழமாகப் புதைந்துள்ளது. அதை வெளிக்கொணர உதவிசெய்து, அதை இன்றைய அறிவியல் கொண்டு புரிய வைத்தால் போதும், அதன் மூலம் அவர்கள் தங்களைத் தாங்களாகவே மேம்படுத்திக்கொள்வார்கள்” என்று அவர் கருதினார். அவர்களுக்குப் புதிதாக ஏதேனும் கொடுக்க வேண்டுமாயின் அது அவர்களின் அறிவு அறிவியல்பூர்வமானது என்பதை விளங்க வைப்பதுதான் என்று நம்பினார்.
மேலும், கிராமத்துப் பெண்களின் அறிவு மேன்மையை அவர்களுக்கே காட்டியதுடன் அவர்களின் அறிவு தாழ்ந்ததில்லை என்ற நம்பிக்கையை அவர்கள் அறியாமலேயே அவர்களிடம் ஊட்டினார். அது போலவே தன்னுடன் இணைந்து இயங்கியவர்களின் திறனை, அறிவை அவர்களே அறியாத வண்ணம் ஒரு படியாவது மேலே உயர்த்துவதைத் தொடர்ந்து அவர் செய்துகொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தன்னுடன் இணைந்து இயங்கியவர்கள் அனைவரும், எந்த வயதினராக இருப்பினும், தன்னை நம்மாழ்வார் என்று பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எந்தவொரு காலத்திலும் தான் ஒரு படி உயர்ந்தவர் என்ற உணர்வு எழுவதைத் தடுத்துவந்தார்.
விவசாயிகளின், கிராம மக்களின் அழகான சுயசார்பான வாழ்வுதான் அவருடைய கனவு. மக்களின் நல்வாழ்வு என்ற அவருடைய கனவு இயற்கை விவசாயத்தை மட்டுமின்றி திறன் அழிக்காத கல்வி, ஆரோக்கியம், கலைகள், அனைவரும் இயைந்து இயங்குதல், பெண்களின் மேம்பாடு, சாதிகளுக்கு அப்பால் அனைவரும் இயங்குதல் போன்ற வற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் அந்தக் கனவை நோக்கியே இழுத்துக்கொண்டு சென்றார்.
உடல்நலன் என்பது நாம் உட்கொள்ளும் உணவின் வெளிப்பாடு. அது நல்ல உணவாக இருப்பின் அது ஆரோக்கியத்தைத் தானே தரும் என்பது அவரின் அழுத்தமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவருக்கு இயற்கை உணவு- இயற்கை வைத்தியம் ஆகியவற்றிலிருந்து வந்தது. தன் கருத்து சரியானதுதானா என்பதைத் தன் வாழ்வில் சோதித்தறிந்த பின்னரே வெளியே கூறினார். அவரைப் பொறுத்தவரை, கூறுவது என்பது அதைத் தன் வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டுவதே ஆகும். “நோயுற்றால் அதற்கான வைத்தியம் நம் சித்த வைத்தியமே. பல ஆயிரம் ஆண்டுகள் மக்களைக் காத்துவந்த சித்த வைத்தியம் எப்படி மட்ட மானதாகவோ, பிற்போக்குத்தனமானதாகவோ இருக்க முடியும்” என்றவர், முறையாக சித்த மருத்துவத்தை அறிந்துகொண்டு, மருந்துகளைச் செய்வதைக் கற்றுகொண்ட பின்னரே அப்படிக் கூறினார். பிற பாரம்பரிய மருத்துவ முறைகளையும் அவர் ஏற்றார். அவர் மேற்கொண்ட இயற்கை விவசாயத்திலும், இயற்கை வளக் காப்பு நடைப்பயணங்களிலும் அவருடன் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் மூலிகைச் செடிகளைப் பற்றி அவருக்கு இருந்த அறிவைப் பற்றி.
செயல்தான் சிறந்த குரு
சொல்லை விடச் செயலே அதிகம் கற்றுக்கொடுக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை அவருக்கு. எல்லோரையும் செய்ய வைப்பார். முறைசாரா முறையில் கற்பிப்பதே அவரின் பிரதான முறை. கேள்வி களுக்கு ஏன் கதையும் சம்பவங்களுமான பதில் அளிக்கும் முறையைக் கைக்கொள்கிறீர்கள் என்ற போது, “ஆமாம் ஐயா, நம் மக்களுக்கு ஏற்ற ஒன்று இதுதான். ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கதை களாகக் கூறித்தான் ஆன்மிகத்தைப் புரியும்படி செய்தார். நான் வாழ்வியலைப் புரியும்படி செய்கிறேன்” என்றார்.
விவசாயிகளையும் பிறரையும் குழுவாக, வட்டமாக அமரச் செய்து விவாதிப்பது அவரது பாணி. “வட்டமாக அமர்வதில் எவரும் உயந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. நாம் இன்னமும் ஜனநாயக முறையில் இயங்குவதற்குப் பழகவேயில்லை. அதைப் பழகிக்கொள்ளத்தான் வட்டமாக அமர்கிறோம்” என்பார். கடும் விவாதங்களின்போதும் அமைதியான பார்வை யாளர் போலவே இருப்பார். குழு எடுத்த முடிவு, தனக்கு உடன்பாடில்லாத முடிவாக இருப்பினும், அதனை ஏற்பார். குழுவின் முடிவு சரியானதல்ல எனில், விளக்கிச் சொல்லியிருக்கலாமே என்றால், “குழுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம். மேலும், தன் முடிவு சரியல்ல என்று அனுபவத்தால் அந்தக் குழு உணரும்போதுதான் அறிவு பிறக்கும். இல்லாவிடில், அங்கு நம்மாழ்வாரின் கருத்தே திணிக்கப்பட்டதாக இருக்கும்” என்றும் “தவறு செய்வது ஒன்றும் கெட்ட காரியம் அல்லவே. தவறுகளிலிருந்து பாடம் கற்கும் மனப்பக்குவம்தான் நமக்குத் தேவை” என்பார்.
விவசாயிகளின் தந்தை
அவருடைய வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் சராசரியாக 200-250 இரவுகள் பேருந்துகளிலும் பகல் பொழுதுகள் விவசாயிகளின் நிலத்திலும் வீட்டிலுமாகவே கழிந்தன. அவருடன் இணைந்து இயங்கி, விவசாயக் குடும்பங்கள் அவரைத் தங்களின் தந்தையாகச் சுவீகரித்துக்கொண்டன என்றால் அதற்குக் காரணம், மக்களிடம் அவர் தன்னைக் காட்டிக்கொண்ட விதம்தான். ஈரோடு மாவட்டத்தில் 2002-ல் 28 நாட்கள் நடந்த பிரச்சார நடைப்பயணத்துக்கான மொத்த செலவும் ரூ. 2,800-க்குள் என்றால், விவசாயிகள் இவரையும் இவருடன் சேர்ந்து நடந்தவர்களையும் தங்களுடையவர்களாகச் சுவீகரித்துக்கொண்டதுதான் காரணம். மக்கள் தங்களுக்காக தியாகத்துடன் உழைப்பவர்களை என்றும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான அண்மைக் கால உதாரணம் இவர்.
மாற்று வாழ்வியல் முறைகளை மாற்று விவசாயத்தின் அங்கமாக சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதே சரியான போராட்ட வடிமாக இருக்கும். அதன் மூலமே பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். விவசாயிகளின், கிராமத்து மக்களின் வாழ்க்கையை வணிகமய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறச் செய்தல் என்ற இலக்குக்கான பாதையாகவே இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் பார்த்தார். பெருநிறுவனமயமாதலுக்கு எதிராக எவ்வித முழக்கங்களும் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல், கோஷங்கள் இல்லாமல் புரட்சி செய்த புரட்சிக்காரர் நம்மாழ்வார் என்பதே உண்மை.

Saturday 28 March 2015

சிறுபான்மையினரின் அடையாளங்களை அழித்தொழிப்பதுதான் இந்துத்துவமா?-

டீஸ்டா செடல்வாட். 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொலை மிரட்டல்கள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் பின்வாங்காமல் இருப்பதொன்றே டீஸ்டாவின் மன உறுதிக்குச் சான்று. சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்...
உங்கள் சமூகப் பார்வைக்கான அடித்தளம் எது?
என் வீடுதான் என் போராட்ட வாழ்வுக்கான முதல் படியை அமைத்துத் தந்தது. மும்பையில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தேன். என் தாத்தா எம்.சி. செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். என் அப்பா அதுல் செடல்வாட், ஒரு வழக்கறிஞர். எனக்கும் என் தங்கைக்கும் அநாவசியக் கட்டுப்பாடு இல்லை. இருந்தாலும் நாங்கள் எங்கள் சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்தே இருந்தோம்.
சிறு வயதில் இருந்தே நான் நிறைய படிப்பேன். உணவு மேசையில் அப்பா நிறைய விஷயங்களைப் பேசுவார். நாங்கள் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வாசிப்பும் விவாதமும் புதிய வாசல்களைத் திறந்தன.
பத்திரிகைப் பணி எந்த வகையில் உங்கள் சமூகப் பார்வைக்கு உதவியது?
பள்ளி நாட்களிலேயே பாப் வுட்வர்ட் போன்ற பத்திரிகையாளர்களின் புத்தகங்களைப் படித்தேன். உலகின் சிறந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை வாசித்தேன். அதுதான் பத்திரிகைத் துறையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம். ஏழு தலைமுறை வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தில், நானும் அதே துறையில் பணியாற்றுவேன் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்புதானே. ஆனால், நான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுதேன். என் முடிவை என் அப்பா வரவேற்றார். ‘டெய்லி,’ ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களிலும், பிறகு ‘பிஸினஸ் இந்தியா’ பத்திரிகையிலும் பணியாற்றினேன்.
சமூகத்துக்கு நீதி சொல்கிற பத்திரிகைத் துறையிலும் ஆண், பெண் சமநிலையின்மையை உணர்ந்தேன். பெண் நிருபருக்கு அரசியல் செய்திகளைச் சேகரிக்க அனுமதியில்லை. பெண்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்ற பிற்போக்குத்தனமான எண்ணமே இதற்குக் காரணம். ஒருமுறை ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலைப் பார்வையிட்டுச் செய்தி சேகரிக்கப் போயிருந்தோம். கப்பலுக்குள் பெண் நிருபர்கள் வந்தால் கமாண்டர்களின் கவனம் சிதறும் என்று எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஒரு பெண், பிரதமராக இருக்கும் நாட்டில் பெண் நிருபர்களுக்கு இப்படியொரு அவமானமா என்று அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
பத்திரிகைப் பணியைத் துறந்தது ஏன்?
பத்திரிகைப் பணியில் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு தேக்க நிலை இருப்பதாகத் தோன்றியது. நானும் என் கணவர் ஜாவேத் ஆனந்தும் பத்திரிகைப் பணியைத் துறந்துவிட்டு, ‘கம்யூனலிசம் காம்பாட்’ இதழைத் தொடங்கினோம். மதவாதத்தை எதிர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மதத்தின் பெயரால் சூறையாடப்படப்படுகிற மக்களுக்கு வேறு எதையும்விட சட்டத்தின் துணை அவசியம். அதை எங்கள் பத்திரிகை வாயிலாகச் சொல்கிறோம்.
மதவாதத்துக்கு எதிராக நீங்கள் செயல்பட ஆரம்பித்தது எப்படி?
மதவாதத்தின் கோரத் தாண்டவத்தின் விளைவுகளை மிக அருகில் இருந்து பார்த்தேன். தங்கள் அடிப்படை உரிமைகளுக்குக்கூடக் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மை மக்களுக்கு நீதி மட்டும் தானாகக் கிடைத்துவிடுமா என்ன? அதனால் முழு நேர மனித உரிமை செயல்பாட்டில் என்னை இணைத்துக்கொண்டேன். சில பத்திரிகை நண்பர்களுடன் சேர்ந்து ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for Justice and Peace) என்ற அமைப்பைத் தொடங்கினோம். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் கணவர் முஸ்லிமாக இருப்பதால்தான் நீங்கள் குஜராத் கலவரத்தில் ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?
இந்த ஒரு வழக்கில் மட்டுமா ஈடுபாடு காட்டுகிறேன்? இந்த நாட்டில் நடக்கும் எத்தனையோ செயல்களை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை, நான் துணிந்து போராடுகிறேன். அவ்வளவே.
ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்பது எப்படி இருக்கிறது?
முன்னாள் குஜராத் முதல்வரும் இந்நாள் பிரதமருமான நரேந்திர மோடியையும் வேறு சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தி நாங்கள் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்தே எங்களுக்குப் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். கொலை மிரட்டல்களைக்கூடச் சமாளித்துவிடுகிறேன். ஆனால், சிலரின் கொச்சையான வார்த்தைகளையும் அருவருக்கத் தக்க வசைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி.
பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் தொடங்கிய ‘கோஜ்’ அமைப்பின் நிலை என்ன?
மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுத்து, அதை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுதான் ‘கோஜ்’ அமைப்பின் நோக்கம். தென்னிந்தியாவில் இன்னும் எங்கள் பணிகளை ஆரம்பிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஓரளவுக்கு நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடிகிறது. பள்ளிகளில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை உரையாடச் செய்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களோடு ஒன்றிணைந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாங்கள் விரும்புவது. இந்தியப் பாடப் புத்தங்களில் திட்டமிட்ட சதி அரங்கேறிவருகிறது.
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?
ஒரு செயல்பாட்டாளராக, இந்தியாவில் பெண்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெண்கள் இங்கே சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆண், பெண் சமநிலையின்மை குறித்த கருத்தரங்கில் பேசுவதற்காக லக்னோ சென்றிருந்தேன். ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் என்னையும் சேர்த்து இரண்டே பெண்கள். எத்தனை முரண்! ‘எங்கே என் சகோதரிகள்?’ என்ற கேள்வியோடுதான் என் பேச்சைத் தொடங்கினேன். நம் சமூக அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. ஆண் குழந்தையைக் கொண்டாடுவதும் பெண் குழந்தையை அடக்கிவைப்பதும் இங்கே ஆண்டாண்டு காலமாக நடந்துவருகிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மனித உரிமை என்பது பெண்ணுக்கான உரிமையும்தானே.
ஊடகப் பெண்களுக்கான கூட்டமைப்பிலும் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறீர்களல்லவா?
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி ஊடகப் பெண்களுடன் தொடர்ந்து விவாதித்துவருகிறோம். பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களின் பாதுகாப்புக்காக ஒரு குழு செயல்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது எத்தனை இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுதிய காகிதத்தை வைத்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் சமாளித்துவிட முடியுமா? பெண்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அந்தப் போராட்ட குணம்தான் அவர்களைப் பாதுகாக்கும் கவசம்.
போராட்டத்தின் பலன் கைது செய்யப்படுவதா?
நரேந்திர மோடிக்கு எதிராக டீஸ்டா செயல்படத் தொடங்கியதுமே அதற்கான விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஈஷான் ஜாஃப்ரியும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களும் குஜராத் கலவரத்தின்போது படுகொலை செய்யப்பட்டனர். தன் கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி. குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 59 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று அவர் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சிகள் இருந்தாலும் அவை வழக்கு தொடரக்கூடிய அளவுக்கு வலுவானவை இல்லை என்று அந்த வழக்கில் 2012-ல் தீர்ப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டீஸ்டாவின் ஆதரவுடன் 2013-ல் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புள்ளிதான் டீஸ்டா மீதும் அவருடைய கணவர் ஜாவேத் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தது. இவர்கள் இருவர் மீதும் மோசடி வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ‘மோடி போன்றவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறவர்களின் நிலை என்ன ஆகும் என்பதற்கு டீஸ்டா மற்றும் ஜாவேத் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே சாட்சி’ என்று அரசியல் ஆர்வலர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இருவருக்கும் தொடர்ந்து முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கபில் சிபல் தலையிட்டதன் பேரில் டீஸ்டா கைது செய்யப்படுவது நின்றது. ஆனால் இது தற்காலிகமானதுதான்.

நானோ வணக்கம் சொல்லலாமா

நானோ தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமளிக்கக்கூடியவை!
ஆயுதம் செய்வதிலிருந்து காகிதம் செய்வது வரை பயன்படக் கூடிய தொழில்நுட்பம் நானோ தொழில்நுட்பம். 1960-களில் ஜப்பானில் பரபரப்பாக அறிமுகமான நானோ, 1981-ல் ‘அணுவையும் காட்டும்’ துளையீட்டு உருப் பெருக்குக் கருவி (tunneling microscope) உருவானதும் வேகமெடுத்தது.
உலகமே பொருட்களால் நிரம்பியுள்ளது. கணினி, கதைப் புத்தகம், கார், கத்தரிக்காய், தங்கம், வைரம், கறி, கரி என்று பொருட்களின் பட்டியல் நீளும். இவை நாம் உருவாக்கும் பொருளாக இருக்கும். அல்லது மண்ணில் விளைவதாகவோ இயற்கையாக ஏற்பட்டதாகவோ இருக்கும். இந்தப் பொருட்களை வடிவம் குறுக்கி ஒரு நானோ மீட்டர் கனமே உள்ளதாக ஆக்கினால், வியப்பளிக்கும் விளைவுகள் ஏற்படும். இதுவே நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை.
நானோ மீட்டர் என்றால்?
ஒரே ஒரு இழை தலைமுடியை எடுத்து, பஜ்ஜி போட வாழைக்காய் அரிவதுபோல அதை நீளவாட்டில் 50,000 துண்டாகப் பிளப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த நுண்ணிய துண்டு ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு நானோ மீட்டர் இருக்கும்.
தங்க நகை தங்க மூலக்கூறுகளின் (molecule) தொகுதி. தாமிரத் தட்டு தாமிர மூலக்கூறுகளின் தொகுதி. இப்படி, ஒவ்வொரு பொருளும் அதனதன் மூலக்கூறுகளின் தொகுதியாக இருக்கும். சின்னஞ்சிறிய மூலக்கூறு அளவே நானோ வடிவம்.
இப்படிக் குறுக்கும்போது பொருளின் அடிப்படைத் தன்மையே மாறலாம். இரும்பு திரவமாகப் பொங்கி வழியலாம். கரடுமுரடான கற்பாறை, முகம் பார்க்கும் கண்ணாடிபோல் ஒளியைப் பிரதிபலிக்கலாம். என்ன பயன் என்கிறீர்களா?
நானோ தொழில்நுட்பம் மூலம் தன்மை மாறிய கரியையும், வைரத்தையும் தங்கத்தையும், கணினியில் தகவல் சேர்த்து வைக்கப் பயன்படுத்தலாம். பல ஆயிரக் கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தை முழுவதுமாக மின்வடிவில் இந்தச் சின்னஞ்சிறு நானோ பொருளில் சேமித்து, வீட்டுக் கணினியில் பயன்படுத்தலாம். தகவல் தேடித் தரும் வேகமும் அதிகமாக இருக்கும்.
நானோ வேதியியல் துகள்கள் கலந்த காகிதம் நாம் இதுவரை பார்த்தேயிருக்காத அளவு கண்ணைப் பறிக்கும் வெண்மையாக ஒளிவீசும்.
சுத்தமான உடுப்போடு வெளியே போனால், தூசி, அழுக்கு, வியர்வை என்று எதுவும் உடை மேல் படிய விடாமல், துணியில் பூசிய நானோ ரசாயனப் பொருள் அதைத் தட்டி உதிர்த்து விடும். சலவை சோப்பு உற்பத்தியாளர்கள் வியாபாரம் கெட சட்டை துவைக்காமலேயே எப்போதும் சுத்தமாக இருக்கும்.
மரபணு பாதிப்பு
உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ஈ-கொலி நுண்ணுயிர் (bacteria) உணவில் கலந்திருந்தால், அதைப் பளிச்சென்று ஒளிவீசி மூலம் தெரியப்படுத்தவும், அந்தக் கிருமியோடு பிணைந்து அதை முழுவதுமாக அழிக்கவும், நானோ மாவுச்சத்துத் துகள்கள் உணவில் கலக்கப்படலாம்.
பேக்கரியில் விற்கப்படும் இனிப்பு வடை போன்ற டோநட்டில் பூசிய சர்க்கரைத் துகள்கள் பனிபோல் வெண்மையாகத் தெரிய ஐரோப்பாவில் டைட்டானியம் டை ஆக்ஸைட் என்ற வேதியியல் பொருளின் நானோ துணுக்குகளைச் சர்க்கரையில் கலக்கத் தொடங்கினார்கள். அண்மையில் இந்த நானோ துணுக்குகளால் மரபணு பாதிப்பு ஏற்படலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அபாயம் இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப் பட்டாலேயொழிய, நானோ உணவு பரவலான புழக்கத்துக்கு வருவது சிரமம்தான்.
மருத்துவத்திலும் நானோ தொழில்நுட்பம் பயன் படலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலுக்குள் மிகச் சிறிய நானோ தங்கத் துகள்கள் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அவற்றை வெளியே இருந்து கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் இயக்குவார். புற்றுநோய்த் திசு உடலில் உள்ள இடத்தில் இந்த நானோ துணுக்கு அதன் மேல் படர்ந்து அதைத் தனியாக இனம் காட்டிவிடும். நோய்த் திசுவை அகற்றினால் உடல் நலம் பெறும்.
சாதாரண மாத்திரைகள் ஜீரணமாகி அவற்றில் உள்ளதில் சிறிதளவு மருந்து மட்டும் ரத்தத்தில் கலந்து ஓரளவு நோய் தீர்க்கலாம். நானோ துகள்கள் மருந்துக் கடத்தியாகச் (carrier) செயல்படும்படிக் கலந்து உருவாக்கிய மாத்திரைகள் வேகமாக உடலுக்குள் பயணப்பட்டு, மருந்துப் பொருள் வீணாகாதபடி கொண்டுசேர்க்கும். உடல் நலம் பெறுவது இதனால் விரைவாகும்.
நானோ ரோபாட்களும் அறிமுகமாகின்றன. இந்த ரோபாட் ஒவ்வொன்றும் அரிசி முனையில் செதுக்கியது போல் சிற்றுடல், மூளை, சர்க்யூட் கொண்டது. மருத்துவர் ஊசி கொண்டு நோயாளியின் உடலில் இவற்றைச் செலுத்தி, கணினி வழியே கட்டளை இட, இவை உடலுக்குள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடத்தும். முடித்து, உடலில் ஏற்படுத்திய துளை ஊடாக வெளியேறிவிடும். நானோ ரோபாடிக்ஸ் வேகமாக வளரும் துறை.
மூலக்கூறுகளைச் செதுக்கினால் நானோ வரும். மூலக்கூறுகளைச் சற்றே மாற்றி அமைக்க, சூப்பர் மாலிக்யூல்கள் என்ற மூலக்கூறுகள் உருவாகும். இந்த சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நாசம் விளைவிக்கும் நானோ ரோபாட்களையும் நானோ ஆயுதங்களையும் உருவாக்க முடியும். டாங்குகளும் ஜீப்புகளும் போர் விமானங்களுமாகப் படையெடுத்துப் போகாமல், எறும்புகள் சாரிசாரியாக இருட்டில் ஊர்வதுபோல் இந்த நானோ ரோபாட்டுகள் யார் கவனத்தையும் கவராமல் பகை நாட்டில் புகுந்து மிகப் பெரும் நாச வேலை செய்யக் கூடும். செயல் திறன் மிகுந்த இவை தங்களையே பிரதி எடுத்துப் புது ரோபாட்டுகளை உருவாக்கவும் முடியும்.
கொடிய நோய்க் கிருமிகளைப் பகை நாட்டில் பரப்பி, அணு ஆயுதப் போரை விட அதிக நாசம் விளைவிப்பது நுண்ணுயிரியல் போர்முறை (Biological warfare). காற்றிலும் நீரிலும் உணவிலும் இப்படியான கிருமி பரவியுள்ளதா என்று கண்காணிக்க நானோ ஆய்வகங்களை நிறுவலாம். நாலு மாடிக் கட்டிடமாக ஆய்வகம் எழுப்ப இடம் தேட வேண்டாம். கைக்கடக்கமாக, சட்டைப்பையில் வைத்து எடுத்துப் போகக் கூடியவையாக இவை இருக்கும்.
அழிக்க மட்டுமில்லை, இந்த சூப்பர் மூலக்கூறுகளை அண்டை மாநிலம் ஆற்று நீர் தர மாட்டேனென்று முரண்டு பிடித்தாலும், இருக்கும் குறைவான நீர்வளம், நில வளத்தைக் கொண்டு அதிக மகசூல் தரும் தானிய வித்துக்களை உருவாக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயலும்.
சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நானோ தொழில் நுட்பம் மூலமாக மனித உடலிலும் மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆந்தை போல் இருட்டில் தெளிவாகத் தெரியும் கண்கள், வானொலி போல மின்னலைகளை ஒலியலையாக மாற்றும் காதுகள் இவற்றை எல்லாம் கேட்டு வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். ஆயர்பாடிக் கண்ணன் வாய்க்குள் மூவுலகம் தெரிந்ததுபோல், நானோ மூலம் வெறும் கண்ணுக்குள் தொலைக்காட்சி சீரியல் தெரியுமா என்ற கேள்வி கொஞ்சம் ஓவர் ரகமே.

ஊரு விட்டு ஊரு வந்து... அந்நிய 'மோகம்' சரியா?

இதை எப்படிச் சொல்வது?
"ஏன்டா டேய்... அங்கப் போய் யாரையாவது உஷார் பண்ணியா?" - வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களிடம் நடக்கின்ற தொலைபேசி உரையாடல்களில் யதார்த்தமாக பிறக்கின்ற கேள்வி இது.
சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். அவரிடம் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அமெரிக்க மூதாட்டி பேசத் தொடங்கினார்.
"உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?"
இல்லை" என்று அவன் கூற...
"ஓ.. யாரை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க? ஏன் நீ அமெரிக்க பெண் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று கேட்டார்.
கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வியந்த அவன் "இல்லை நான் இப்போ அதை பற்றி யோசிக்கல" என்றான்.
"உங்களுக்கு என்னதான் பிரச்சினை? எங்கள் வாழ்க்கைக்குள் வர்றீங்க. எங்கள் மீது அளவு கடந்த அன்பை காட்டி காதலில் விழ வைக்கறீங்க. கடைசியில் நாங்கள் எங்களை உங்களுக்கு தந்த பிறகு 'இல்லை இல்லை... எனக்கு குடும்பம் இருக்கிறது, கனவு இருக்கிறது' என்று பேசத் தொடங்குகிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு ஏன் முதலில் தோன்றுவதில்லை?
உன்ன மாதிரி ஓர் இந்தியன் அன்று என்னை கல்யாணம் செய்திருந்தான்னா இன்று எழுபது வயதில் நான் கடைக்கு தனியே வருவதற்கான தேவை இருந்திருக்காது. என்ன காதலிச்சவன் இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பணக்காரனாக சந்தோஷமாக இருக்கிறான். நானோ முதுமையில் தனிமையில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்" என்று பேசிவிட்டுச் சென்றார்.
நம் ஊரில் பெண்களை தங்கைகளாக, தோழியாக, காதலியாக பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, வெளிநாட்டுக்கு வரும்போது மட்டும் புதுவித பார்வை பிறக்கின்றது. மாடர்ன் உடை அணிவதாலும், பார்த்தவுடன் புன்னகைத்து ஹாய் சொல்வதாலும் பல இளைஞர்கள் இன்று தவறான நோக்கத்தோடு பெண்களை நாடத் துவங்குகின்றனர்.
ஒருமுறை வாஷிங்டன் டி.ஸி சென்றபோது, அங்கே ஒருவன் "எனக்கு உன் காலேஜ் பொண்ணுகிட்ட (இந்தியப் பெண்) இன்ட்ரோ கொடுடா. எனக்கு அவளை பிடிச்சிருக்கு" என்றான்.
"நீயே போய் பேச வேண்டியது தானே?"
"சரி, அவ நம்பர் மட்டும் கொடு நான் உஷார் செஞ்சிக்கிறேன்" என்றான்.
"இல்லைடா அவளுக்கு இந்தியால பாய்ஃபிரெண்ட் இருக்கான்"
"இந்தியால தானடா இருக்கான். நான் இங்க சும்மா யூஸ் பண்ணிக்கதான் கேட்டேன்" என்றான்.
மற்றொரு நிகழ்வு:
"உனக்கு இங்க யாரும் கேர்ள்பிரெண்ட் இல்லையாடா?" என்று நண்பனிடம் கேட்டேன் "இல்லைடா. நமக்கு இருக்குற வேலையில எதுக்கு அதெல்லாம். அது மட்டும் இல்லாம Girls Here Are Very Clingy-டா" என்றான்.
"Clingy (நசை) எந்த வகையில?" என்றேன்.
"இல்லைடா நமக்கு இருக்குற அறிவுக்கு மட்டும்தான் அவங்க நம்மகிட்ட வருவாங்க. ஒரு பொண்ணு அப்படிதான் பிரெண்ட் ஆனாள். நாங்க உறவில் இருந்தோம். அதுக்கு அப்புறம் எப்போ பார்த்தாலும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டா. நான் வீட்டுல இல்லைன்னா கூட எனக்காக காத்திருக்கிறா. அடிக்கடி பார்க்கனும்ன்னு சொல்றா. நமக்கு இருக்குற வேலையில இதெல்லாம் எப்படிடா முடியும். கழட்டி விடுறதுக்குள்ள... அய்யய்யோ..." என்று பேசினான்.
"இங்க நம்ம ஆளுங்க பண்றது டிசென்ட்டாவே இல்லைடா. இப்படியே போச்சுன்னா நம்மள யாரும் மதிக்க மாட்டாங்க" என்று நண்பன் புலம்புகிறான்.
வெளிநாட்டுக்கு வரும் இளைஞர்களே இப்படித்தான் செய்கிறார்கள் என்று கூறவில்லை. தன்னை பார்ப்பதற்கு யாரும் இல்லை, தன்னை சாடுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் யாரும் இல்லை என்கிற நிலை பிறக்கின்றபோது நம் ஆட்கள் பலர் எப்படி நடந்து கொள்கிறார்கள். உண்மையிலே நாம் பண்பட்டவர்கள் தானா? இல்லை நம்மை சூழ்ந்துள்ள சமுதாயத்திற்காக போலி முகமூடி அணிந்து திரிகிறோமோ? என்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றது.
பயணம் சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் கூறினார்... "உன் அம்மாவையும், காதலியையும், உன் தங்கையையும் மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அந்த வகையில் நீ மற்ற பெண்களிடம் நடந்துகொள்" என்றார். அற்புதமான வார்த்தைகள் அவை. ஒரு பெண்ணை காதலியாக நேசிப்பது தவறில்லை. ஆனால், மனதில் கள்ளத்தனத்துடன் ஒருத்தியை அடைவதற்காக காட்டப்படுகின்ற நேசம் இழிவானது.
"நான் எனது தேவைக்காக உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன்" என்று ஒரு பெண் கூறினால் அதை உங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியாதோ அதே போலத் தானே அவர்களுக்கும்?
அமெரிக்காவாக இருந்தாலும் சரி... இந்தியாவாக இருந்தாலும் சரி... பெண்கள் பெண்கள்தான். அவர்களைப் பண்டமாக பார்க்கின்ற ஆண்களின் இச்சைப் பார்வைகள் மாறிட வேண்டும். நம் நாட்டை பிற நாடுகள் மரியாதையாக பார்ப்பதற்க்கான காரணம் நம் பண்பாடு தான். அதுவும் இப்படிப் போலியாக்கப்படும்போது எண்ணங்கள் சிதைவு தான். எள்ளி நகையாடப்படுவது பாரதமும் ஆண்மையும் தான்.
அந்நிய மோகத்தை விட, அந்நிய நாட்டில் வரும் மோகம் மிகவும் மோசமானது. இல்லையா?
 ஹரி

Wednesday 18 March 2015

இணையத்தைத் தானதர்மம் செய்யலாமா?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல். மொபைல் போன்களில் இணையப் பயன்பாட்டை இந்தியா உட்பட உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்ல மார்க் விரும்புகிறார். ஆனால், அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், இந்தியச் சந்தையில், தங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதுதான் சுனில் மிட்டலின் கோபத்துக்குக் காரணம்.
‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ (internet.org) என்னும் அமைப்பை 2013 ஆகஸ்ட் 20-ல் தொடங்கினார் மார்க் ஸக்கர்பெர்க். அதன்படி உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனங்களுடன் இணைந்து, மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு இலவச இணையச் சேவையை அளிப்பது அவரது திட்டம். இலவசம் என்றால், குறிப்பிட்ட அலைபேசி சேவையைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள், ஃபேஸ்புக் உட்பட குறிப்பிட்ட சில இணையதளங்களைக் கட்டணமில்லாமல் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருந்த மார்க் ஸக்கர்பெர்க், இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு இணையத்தைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். உலகம் முழுவதும் 500 கோடிப் பேருக்கு இணையத்தைக் கொண்டுசெல்வது அவரது இலக்கு. கடந்த அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் புது டெல்லியில் நடந்த ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ மாநாட்டில் பேசிய மார்க், ஆங்கிலம் தவிர, பிற மொழிகள் பேசும் மக்களும் இணையத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று குறிப்பிட்டார்.
100 கோடி லட்சியம்!
ஜாம்பியா, தான்சானியா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டே ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ பயன் பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
மார்க் ஸக்கர்பெர்கின் கணக்குப்படி இந்தியாவில், தற்போது 24.3 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 கோடிப் பேர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள். அதேசமயம், இணையம் பயன்படுத்தாத மீதி 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இணையத்தைக் கொண்டுசேர்ப்பது தனது லட்சியம் என்கிறார் மார்க். மாபெரும் சந்தையான இந்தியாவில், இந்தத் திட்டம் வெற்றிபெறுவது முக்கியம் என்று அவர் கருதுகிறார். “உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்கு முதலில் நாம் இந்தியாவுடன் தொடர்புகொள்வது அவசியம்” என்று ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’யின் ஃபேஸ்புக் தளம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், பிப்ரவரி 10-ம் தேதி, இந்தியாவில் ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முதல் கட்டமாக, தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் ரிலையன்ஸ் செல்பேசிச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். ‘ஆஜ் தக்’, ‘பிபிசி நியூஸ்’, ‘இந்தியா டுடே’, ‘விக்கிப்பீடியா’உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இதன் மூலம் இலவசமாகப் பயன்படுத்த முடியும். ஆனால், செல்பேசிச் சேவைகளில் ஏகத்துக்கும் முதலீடு செய்யும் செல்பேசி நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.
எதிர்ப்புக் குரல்கள்
“இணையத்தை இலவசமாக வழங்க முடிவுசெய்துவிட்டால், முழுமையாக தானதர்மம்தான் செய்ய வேண்டும். இதன் தொடர்ச்சியாக, அலைக்கற்றையை அரசு இலவசமாகத் தந்துவிடலாம். ஆனால், இதெல்லாம் நடக்கின்றனவா? ஏற்கெனவே தகவல்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றும் பெரிதாகச் சம்பாதித்துவிடவில்லை. இந்த நிலையில், இணையத்தை இலவசமாகத் தருவது என்ன நியாயம்?” என்று கொந்தளிக்கிறார் சுனில் மிட்டல். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் சென்ற வாரம் நடந்த ‘மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்’ மாநாட்டில் கலந்துகொண்ட மிட்டல், தனது ஆட்சேபத்தை மார்க்கிடமே தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 62,162 கோடி அரசுக்கு வருவாயாகக் கிடைத்தது. இந்த ஆண்டு தொடங்கிய அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 82,000 கோடி இலக்காக வைக்கப்பட்டிருந்தாலும், நான்கே நாட்களில் ரூ.86,000 கோடி ஏலம் மூலம் கிடைத்தது. 7-வது நாளில் ஏலத்தொகை ரூ. 96,000 கோடியை எட்டியிருக்கிறது. இதன் பின்னணியில் பார்த்தால், செல்பேசிச் சேவை நிறுவனங்கள் எந்த அளவுக்கு முதலீடு செய்கின்றன என்பதை மதிப்பிட முடியும் என்பது சுனில் மிட்டல் தரப்பின் வாதம்.
வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விட்டோரியோ கோலாவின் கருத்தும் இதேதான். “இணையத்தை இலவசமாகத் தருவதாகக் கூறிக்கொண்டு தானதர்மத்தைச் செய்கிறார் மார்க். ஆனால், அதை என் காசில் அல்லவா செய்கிறார்” என்கிறார் அவர்.
“மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதுதான் எங்கள் நோக்கம். தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்பதுடன், மருத்துவம், கல்வி தொடர்பான விஷயங்களைப் பெறுவதும் இதன்மூலம் சாத்தியமாகும். இணையப் பயன்பாடே இல்லாத மக்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்யும் திட்டம் இது” என்கிறார் மார்க்.
இந்தியாவில் இந்தத் திட்டத்தை எதிர்த்தாலும், கானாவில் இந்தத் திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர் சாட்சாத் ஏர்டெல் நிறுவனம் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். மக்கள் தொகை, சந்தை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டால் கானாவை விட இந்தியா எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. மிட்டலின் எதிர்ப்பின் பின்னணி இதுதான் என்று கருதப்படுகிறது.
எப்படிப்பட்ட சேவை!
“உண்மையில், மார்க் கொண்டுவந்திருக்கும் இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது. இதற்கு முன்னர் இணையத்தைப் பயன்படுத்தியிராத ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரும் பயனை அடைந்திருக்கிறார்கள்” என்கிறார் நவீனத் தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம்குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சைபர் சிம்மன்.
“பெரும்பாலான வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் சந்தையை விரிவுபடுத்த, வெறும் வணிக நோக்குடன் செயல்படுவதில்லை. அந்தந்த நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான திட்டங்களுடன்தான் தங்கள் வணிகத் திட்டங்களையும் அவை கொண்டுசெல்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை” என்கிறார் சைபர் சிம்மன்.
அந்த வகையில், ‘தானதர்மம்’ செய்வதாக மார்க் ஸக்கர்பெர்கை விமர்சிக்கும் சுனில் மிட்டல் மனதில் இருக்கும் ‘வணிகக் கோபம்’புரிந்துகொள்ளக் கூடியதுதான்! அதேசமயம், குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் (மிக முக்கியமாக ஃபேஸ்புக்!) இலவசமாக வழங்கும் மார்க் ஸக்கர்பெர்கின் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் வணிக நோக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது, அவர்கள் கொடுக்க விரும்பும் இணையதளங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும். பயனாளிகளின் இணைய சுதந்திரம் இதனால் முற்றிலும் பறிபோய்விடும் அபாயமும் இருக்கிறது. இலவசமாகக் கொடுக்கப்படுவதுதானே என்று கேள்வி எழுப்பலாம். இலவசம்தானே நவீன யுகத்தின் மாபெரும் வியாபாரத் தந்திரம் என்பது நமக்குத் தெரியாதா, என்ன?
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கும் இளம் தொழிலதிபரான மார்க், சேவை என்ற போர்வையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறார் என்ற விமர்சனத்தை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது!
- வெ. சந்திரமோகன்.

Saturday 14 March 2015

நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வலுத்த குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களில் பலரை நாம் ‘வானுறை தெய்வத்திற்கு’ நிகராக வைத்திருக்கிறோம். ஆனால், சாதி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது.
நான் அலாஸ்கா சென்ற கப்பலில் என்னுடன் இரு இந்தியப் பயணிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் டாக்டர். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு அவரது மூதாதையர்கள் குஜராத்திலிருந்து சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து இவர் கனாடாவில் குடியேறியிருக்கிறார். மூன்று பெண்கள் அவருக்கு. ஒரு பெண் அவர் சாதிப் பையனையே மணம் செய்திருக்கிறார். ஒருவர் திருமணம் ஆகாதவர். மூன்றாமவர் வெள்ளையர் ஒருவரை மணந்துகொண்டதில் டாக்டருக்கு ஏக வருத்தம். “அங்கே கருப்பர் கையில் அகப்படக் கூடாதென்று இங்கு வந்தால், இங்கே வெள்ளைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டாள்.” மூன்றாவது பெண்ணுக்குத் தனது சாதியில் மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது பயணி தமிழர். 50 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கா சென்றவர். தனது பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைப் பெருமையாகச் சொன்னார். “எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பையன் நம்மவனா அமைஞ்சதுல.” நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் சாதி நம் பின்னால் நிழல் போலத் தொடர்கிறது. நாமும், தொடர்கிறதா என்பதைத் திரும்பிப் பார்த்து, தொடர்கிறது என்று தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.
அம்பேத்கர்
அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில், சாதிகள் ஒழிய வேண்டுமென்றால் அம்பேத்கரைப் படிக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கர் அந்தப் புத்தகத்திலேயே சாதி ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
1. சாதி, இந்துக்களை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறது.
2. இந்து மதம் சுதந்திர, சமத்துவ மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
3. இது நடக்க வேண்டுமானால் இந்து மதம் சாதிக்கும் வருணத்துக்கும் ‘புனித ஒப்புதல்’ தருகிறது என்ற எண்ணம் ஒழிய வேண்டும்.
4. சாதியும் வருணமும் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்ற எண்ணம் கைவிடப்பட வேண்டும்.
அம்பேத்கர் இதை எழுதியது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று எந்தக் குறிப்பிடத் தக்க மதத் தலைவரும் சாதிக்கு இந்து மதம் ஒப்புதல் தருகிறது என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்று அவர்களில் சிலர் சொன்னாலும், சாஸ்திரங்கள் சொன்னவற்றை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடமிருந்து - குறிப்பாக தமிழ் மக்களிடமிருந்து - சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படிக் கடைப்பிடிப்பவர்கள் தனியாக அறியப்படுவதே அவர்கள் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்குச் சான்று. அவர்களைப் பழமையின் எச்சங் களாகவே சாதாரண மக்கள் கருதுகிறார்கள். அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை களும் இந்து மதச் சட்டங்களும் இந்துக்களின் எல்லாச் சாதிகளையும் ஒரே தட்டிலேயே வைத்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
சாதியின் காரணம்
தூய்மை-தீட்டுச் சடங்குகள் கடைப்பிடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாதிய அடுக்குநிலை இருந்திருக்கலாம். இதில் ஒவ்வொரு சாதியின் இடமும் அடையாளமும் ஏறத்தாழத் தெளிவாக அறியப்பட்டிருக்கலாம். சமூகவியலாளர்கள் இடையே இதைப் பற்றிப் பல கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவரும் சாதிய அடுக்கில் தனது சாதியின் இடம் என்ன என்பதைவிடத் தனது சாதியின் அடையாளம் மற்றும் பெருமைகள் என்ன என்பதை அறிவதிலும் அவற்றைப் பரப்புவதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். இது ஏறத்தாழ எல்லா சாதிகளுக்கும் பொருந்தும். பிராமணர்களில் சிலர் தாங்கள்தான் உயர்ந்த சாதி என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், 99% மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்கள் உயர்வு-தாழ்வு சர்ச்சையில் இறங்குவதைவிடத் தங்களது அடையாளங்களில் மிகுந்த நம்பிக்கை கொள்ளவே முயல்கிறார்கள். இது ஒவ்வொரு சாதியிலும் வெவ்வேறு வகையில் நிகழ்கிறது.
அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஒவ் வொரு சாதியினரும் தங்கள் கலாச்சாரப் பிம்பங்களை யும் சடங்குகளையும் மறுபார்வை செய்துகொண்டே இருக்கின்றனர். பிம்பங்களும் சடங்குகளும் காலத்துக் கேற்ப மாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவை அந்தந்த சாதியைச் சேர்ந்தவையாகவே இருக் கின்றன. சில பிம்பங்களும் சடங்குகளும் எல்லாச் சாதியினருக்கும் பொது என்று சொல்லப்பட்டாலும், அவற்றுக்கு சாதி சார்ந்த தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டின் எந்த வைணவக் கோயிலுக்கும் ‘தென்கலை’, ‘வடகலை’ அடையாளங்கள் இருக்கும். வழிபாட்டு முறைகளில் கடைப்பிடிக்கப்படும் சில நுட்பமான வேறுபாடுகள் அந்த அடையாளங்களை அறிவித்துக்கொண்டே இருக்கும். இதைத் தவிர, சாதி எந்த விதத் தடையுமின்றி இயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
கலப்புத் திருமணங்கள்
அம்பேத்கர் தன்னுடைய ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்தில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் கலப்புத் திருமணங்கள் செய்வதுதான் ஒரே வழி என்று குறிப்பிடுகிறார். இதை பெரியார் சொல்லியிருக்கிறார். காந்தியும் பின்னால் இத்தகைய திருமணங்களை முழுவதும் ஆதரித்திருக்கிறார். இந்தியாவில், சுதந்திரத்துக்குப் பின் தோன்றிய எந்தப் பெரிய தலைவரும் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை. சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. சாதிக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கணக்கிலடங்காதவை. ஆனாலும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதாகத் தெரியவில்லை.
2005-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகப் பெரிய கணக்கெடுப்பு (பெண்களுக்கு மத்தியில்) நடத்தப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தெளிவானது: உங்கள் கணவர் நீங்கள் பிறந்த சாதியைச் சேர்ந்தவரா? கொடுத்த பதில்களை ஆராய்ந்ததில் இந்தியா முழுவதும் கலப்புத் திருமணங்களின் சதவீதம் 1981-ல் 3.5 ஆக இருந்தது 2005-ல் 6.1 ஆக உயர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, வருடத்துக்கு 0.1% கலப்புத் திருமணங்கள் அதிகரித்திருக்கின்றன. இதே நிலைமை நீடித்தால், இந்தத் திருமணங்கள் 50% அதிகரிப்பதற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகள் எடுக்கும்! தமிழ்நாட்டின் நிலைமை மிக மோசம். கலப்புத் திருமணங்களின் சதவீதம் 2005-ம் ஆண்டு 2.2% மட்டுமே. கலப்புத் திருமணம் அதிகம் நடக்கும் முதல் மூன்று மாநிலங்கள் - பஞ்சாப் 12.2%, மேற்கு வங்கம் 9.3%, குஜராத் 8.2%. 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ்த் திருநாட்டில் சாதிகள் வலுவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும், 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்லிக்கொண்டிருப்போம் என்பது நிச்சயம்.
பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்.

தூங்கா நகரங்களின்…தூங்கா மனிதர்கள்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே…
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே…
எவ்வளவு வாஸ்தவமான வார்த்தை வரிகள். ஒரு மனிதனுக்கு தூக்கம் மிக மிக அவசியமான ஒன்றே. தூக்கம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் ஒரு மனிதன் இருக்கமுடியும் ?
1964-ல் ராண்டி என்ற மாணவனால் நிரூபிக்கப்பட்ட தூக்கமற்ற நேரம் அதிக பட்சமாக 264 மணிகள்,15 நிமிடங்கள் சராசரியாக 11 நாட்கள். அதன் பின் அவனது விடாத நித்திரை 15 மணி நேரங்கள் நீடித்தது. இது நிகழ்த்தப்படுவதற்கு முன் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லை என்றாலே புத்தி சுவாதீனம் இல்லாமல் போகும் என்று கருதப்பட்டது. இருப்பினும் தூக்கமின்மை மனிதனை பல உடல் மற்றும் மன ரீதியான இக்கட்டுகளை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
சரி ஒரு நாளுக்கு தூக்கம் எவ்வளவு மணிநேரம் அவசியம் ? சராசரியாக 8 மணிநேரம் இது அவரவர் பழக்கம் மட்டும் உடல் அமைப்பைப் பொருத்தது. இந்த எட்டுமணிநேரம் பெரும்பாளானவர்களுக்கு இப்போது 7 மணியாக குறைந்துவிட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இதிலும் பெண்களுக்கு ஆண்களை விடவும் அதிக தூக்கம் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு; டீனேஜர்களுக்கு இன்னும் நீண்டநேரம் 9 மணிமுதல் 10 மணி நேரங்கள் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான தூக்கம் குழந்தைகள் ஞாபக சக்தியை கூட்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூங்கும் போது என்ன நடக்கிறது ? (தூக்கத்தில் நடப்பவர்களை சொல்லவில்லை) கண்ணை மூடுகிறோம் 5 அல்லது 7 நிமிடங்களில் உங்கள் மூளை தூங்குவதற்கான கட்டளையை செயல் படுத்த வேண்டும். சரி தூங்கிவிட்டோம் அதன் பிறகு தூக்கத்தைப் பல கட்டங்களாக பிரிக்கிறார்கள். மேல் நினைவு படிப்படியாக செயல் பாட்டை குறைத்துக் கொள்கிறது. மூச்சின் வேகம் ஒரு கட்டுப்பாட்டில் சீராக செல்கிறது. ஆழ்ந்த ஆரோக்கியமான தூக்கம் கனவுகளையும் உள்ளடக்கியது. ஞானிகளும் இதிலிருந்து தப்பமுடியாது. ஆழ்ந்த தூக்கத்தில் நடக்கும் கனவு பெரும்பாழும் ஞாபகம் இருக்காது. தூக்கம் நிகழும் போது ஹார்மோன்களால் உடல் முழுக்க இது உணர்த்தப்படுகிறது. ரத்த செல்களின் புதுப்பித்தல் நடக்கிறது.
ஆழ்மனம் விழித்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆழ்ந்த தூக்கம் என்பது தூக்கத்தின் நடுவில் எழுந்திருக்காமையையே குறிக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நித்திரை விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. உலகம் மறந்த மிக அயர்ந்த தூக்கம் 90 நிமிசங்கள் நீடித்தாலே நல்ல தூக்கத்தை உணர முடியும்.
மூளை நினைவலைகளை CPS [Cycles per Second] எனும் அலகால் குறிப்பிடுகின்றனர். விளித்திருக்கும் போது இவ்வலையின் அளவு 14 CPS மற்றும் அதற்கு மேலும் இருக்கும்.
கவலை,மன அழுத்தம், எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, ரத்தகொதிப்பு, நீரிழிவு, மறதி, மனோவியாதி,தலைவலி போன்ற உடல் நிலை பாதிப்புகளுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணம்.
அமெரிக்கர்களில் 60 சதவீதம் போர் தூக்கமின்மையினால் அவதிபடுகின்றனர் என்பது சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ள முடியாது. (இந்தியாவில் எவ்வளவு சதவீதம்? தெரியவில்லை)
சரிவர தூக்கம் இல்லாமல் போவது உற்பத்தி மற்றும் உடலுழைப்பு பாதிப்புகளை பொருளாதார ரீதியில் பாதிக்கிறது. குடித்துவிட்டு விபத்து ஏற்படுவதைவிடவும் தூக்க பாதிப்பினால் அநேக விபத்துகள் ஏற்படுகிறது. [இரவு காரில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்தல் நலம்.]
2008ல் என்று நினைக்கிறேன், வோல்வோ கம்பெனி வண்டிகளில் கேமரா பொருத்தி டிரைவர் தூக்கத்தால் தடுமாறும் நிலையில், ஸ்டீரிங் கட்டுப்பாடு தவறும் பட்சத்தில் அலாரம் அடித்து உசார் செய்யும் படியான ஒரு சிஸ்டத்தை நிறுவினர். [ இந்திய ரோடுகளுக்கு இதெல்லாம் ஒத்துவராது ? ]
தூக்கம் அற்று அவதிப்படுவோர் சும்மாவானும் படுக்கையில் படுத்து உருள்வதில் பிரியோசனம் இல்லை. அவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தையோ அதிக சப்தமில்லாமல் சற்று நேரம் டீவி பார்பதையோ, மெல்லிசையோ கேட்கலாம் ஆனால் தூக்க மாத்திரைகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவேண்டும்.
தூக்கம் அரோக்கிய உடல் நிலை மற்றும் சமச்சீரான உடல் இம்யூனல் சிஸ்டத்திற்கு அவசியம்.
நித்திரை வராமல் போவதற்கு பல காரணிகள், மனரீதியான காரணம், படுக்கை,படுக்கைவிரிப்புகள்,தலயணை சரியில்லாதது, ரூமில் அதிக வெப்பம் அல்லது குளிராக இருப்பது, சிறு குழந்தைகள் விழித்து தொந்தரவு (குறிப்பாக பெண்களுக்கு), இருமல், குரட்டை(மற்றவர்களுக்கு)பொருளாதார நெருக்கடி, கோபம்,கவலை, தூங்குவதற்கு முன் காபி, மது, புகைத்தல்..சொந்தபிரச்சினை, சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்வது, வயதாகிப்போதல்,மூட்டைப்பூச்சி, கொசு தொந்தரவு,…இப்படி பல காரணங்கள்.
துணையினால் குரட்டை தொந்தரவு என்று சொல்பவர்கள் விவாகரத்து கோராமல் காதில் பஞ்சை அடைத்து வைத்து கொண்டு தூங்குவது சிறந்தது.
தூக்கத்தின் இடையில் விழிப்பு ஏற்பட்டு பின் தூக்கம் வராமல் போவது. இது பெரும்பாழும் நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது.
மனிதன் தூங்கும் நிலைகளை வைத்து இவருக்கு இன்னின்ன குணநலன்கள் கொண்டவர் என்று கணிக்கிறார்கள்.
கடைசியாக… குட்டித்தூக்கம் (அ) பகல் தூக்கம் (அ) பூனைத்தூக்கம் அவசியமா ? அவசியமே இதனால் உடலுக்கு புது தெம்பு கிடைக்கிறது. பகல் தூக்கம் வெயிட் போட்டுரும் என்பதும் சரியே.
மீன்கள் கூட தூங்குகின்றன. டால்பின்கள் ஒன்னரை கண் தூக்கமும் போடுகிறது. யானை நின்னுகிட்டே தூங்கும்.

பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள்? கேள்விகளை சுமந்து கொண்டு கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தோம்.
“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”
“வெளிப்படையாவே சொல்லுங்க”
“சரி சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் என் கூட வேலை செய்றவங்க”. படிப்பதற்கான மேசையில் உடன் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களை சுட்டிக் காட்டுகிறார்.
“நான் இவங்கள கூட்டிகிட்டு போய் எங்க வீட்டில இருந்து சேர்ந்து படிக்க முடியுமா? வீட்ல மாமியார் விடுவாங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்வாங்க? இதையெல்லாம் யோசிச்சுதான் நடந்துக்கணும். இதுதான் பெண்களோட நிலைமை”
அவர் சிந்துஜா. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் எதிரில் போடப்பட்டிருந்த கூடாரத்தில் 2 இளைஞர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
“நான் சொந்தமா தொழில் செய்றேன். இப்ப சட்டக் கல்வி படிக்கிறேன். எனக்கே இந்த நிலைமைன்னா மத்த பொண்ணுங்கள பத்தி யோசிச்சிக்கோங்க”. “பேரு சொல்றேன், ஃபோட்டோ எல்லாம் வேண்டாம், பிளீஸ்” என்று தனது சகாக்களுடன் படிப்பைத் தொடர்ந்தார்.
சென்னை பல்கலைக் கழகம்
“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”
“முன்ன விட பல வகையில முன்னேறியிருக்கோம். எங்க அம்மா காலத்தில எல்லாம், படிக்கக் கூட விட மாட்டாங்களாம். இப்ப படிக்க வர முடியுது. இன்னைக்கு பாருங்க, லீவு நாளானாலும் வீட்ல சொல்லிட்டு வந்து இங்க உக்காந்து படிச்சிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைல இன்னும் மாறலாம். ஆனா,  இருட்டுறதுக்கு முன்னால வீட்டுக்கு போயிடணும். சில ஏரியால எல்லாம் தனியா போகவே முடியாது. நம்மதான் பத்திரமா இருந்துக்கணும்” என்று பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை இரு மாணவிகள் வெளிப்படுத்தினர்.
“அதைப் பத்தி எல்லாம் சொல்லத் தெரியாது.” “அய்யய்யோ ஃபோட்டோ எல்லாம் வேணாங்க. பேரு சொல்ல வேணாம்”, “இது பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலையே” “ஏதாவது சொல்லி சீக்கிரம் அனுப்புடீ” என்று தப்பித்தல்களுமாக பல உரையாடல்களுக்கு மத்தியில் சில எதிர்ப்புக் குரல்களும் வெளிப்பட்டன.
சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் ரேவதி, “சமீப காலமாக அதிகரித்திருக்கும் வல்லுறவுகளை எல்லா பெண்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். நமக்கு என்ன வந்தது என்று ஒதுங்கக் கூடாது. காதலித்தாள் என்பதற்காக தம் மகளையே அப்பாக்கள் கொலை செய்வது சகிக்க முடியாத காட்டுமிராண்டித்தனம். இப்படி எல்லாம் நடக்கறதுக்கு ஒட்டுமொத்த சமூகத்தைத்தான் குற்றம் சொல்லணும்.” என்கிறார்.
“இப்பல்லாம் நிறைய மாறியிருக்குதான், அதுக்காக சாதி மாறில்லாம் கல்யாணம் செய்ய முடியுமா. எப்படி பொண்ண வளர்த்திருக்காங்கன்னு திட்டுவாங்க. சொந்தக்காரங்க யாரும் நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க” – என்றார் கணவருடன் உட்கார்ந்திருந்த மீனாட்சி.
சென்னை பல்கலை மாணவியர்
இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா
பி.பி.ஏ படிக்கும் ஆனந்தி – “ஆண்களோட நடத்தைய வெறுக்கறேன். ‘சுதந்திரமா’ பொது இடங்கள்ல எல்லாம் தப்பா நடந்துக்கறாங்க. அவங்க வீட்டில நடக்கறது வேறயா இருக்கும். வெளிய வரும்போது, ‘நம்ம இஷ்டப்படி நடக்கலாம். யார் பார்க்கப் போறாங்க’ன்னு நடந்துக்கறாங்க. இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா.”
எம்.சி.ஏ படிக்கும் காயத்ரி, “குழந்தைகள் உழைப்பு, பெண்கள் மீதான வன்முறைதான் நான் வெறுக்கற விஷயம். இதற்காக போலீஸ் அதிக பாதுகாப்பு கொடுக்கணும். பெண் போலீஸ் அதிகப்படுத்தணும். போலீசும் குற்றவாளியா இருக்கறது உண்மைதான். பெண்கள் வெளிய போற இடத்தில தனிப்பட்ட விபரங்கள யாருக்கும் சொல்லக் கூடாது. முன்பின் தெரியாதவங்கதான் நிறைய பாதிக்கிறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல..” என்று கையறு நிலையை வெளிப்படுத்தினார்.
எம்.காம் இறுதியாண்டு சரவணபிரியா, “டெல்லி பாலியல் வன்முறையால பசங்களை பிடிக்காமலே போகுது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். எல்லார் கூடவும் போலீஸ் போட முடியாது. பசங்க பொண்ணுங்கள பார்க்கிற பார்வை மாறணும். அவங்கள தாக்கறதுக்கான உரிமை பெண்களுக்கு வேணும்.
சென்னை பல்கலை மாணவியர்
நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம்.
தப்பா நினைச்சுக்கக் கூடாது, நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம். அவங்களும் போய் வெளில சொல்ல முடியாதுல்ல.
தொலைக்காட்சில ஆபாச பாடல்களை எல்லாம் தடை பண்ணணும். சினிமால ஆபாசமா வர்றத தடுக்கணும். வெளிநாட்டு கலாச்சாரம் உள்ள வர்றதாலதான் பிரச்சனை. டெல்லி சம்பவத்தில கூட இன்னும் தண்டனை கொடுக்கல. காதல் பண்றதாலேயே மகளை கொன்ன அப்பனுங்கள கொல்லணும். இதுக்கெல்லாம் உடனுக்குடன் தண்டனை வழங்கறதுதான் தீர்வு” என்று தனக்கு தெரிந்த தீர்வை முன்வைத்தார்.
பி.பி.ஏ படிக்கும் டெய்சி, “குடிக்கிறவங்க மேலதான் எனக்கு வெறுப்பு. பொண்ணுங்கள ஒரு மாதிரி பார்க்கிறது அடுத்த விஷயம். பசங்கள விட வயசானவங்க மோசமா இருக்காங்க.” என்றார்.
அரபி ஆசிரியர்
பெண்கள் மீதே பொறுப்பு
“ஒரு பெண் என்பவள் தாய் அந்தஸ்தில் இருப்பவள், அதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் ஒழுங்கான ஆடை அணிய வேண்டும். பெண்கள் தேவையில்லாம உடலை காண்பிக்கக் கூடாது. ஆண்கள் பெண்கள் மீது மரியாதையான பார்வை வைக்க பழகணும்.” என்று பெண்கள் மீதே பொறுப்பை சுமத்தினார் குல்ஃபினா பர்வீன் என்ற அரபி ஆசிரியர்.
கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டம் படித்த தீபிகா, “பாலியல் தொந்தரவுதான் பிரச்சனையா இருக்கு. அந்த பிரச்சனை இல்லாம இருக்கணும். நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்.” என்று சொன்னார்.
நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்
இப்படி படித்த மாணவிகள் தமது பாதுகாப்பின்மையையும், தமக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து பேசவும், நொந்து கொள்ளவும் செய்ய அதே கடற்கரை சாலையில் ஜூஸ் விற்றுக் கொண்டிருக்கும் அம்மா, “பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம். காலையில 11 மணிக்கு கடை திறந்தா சாயங்காலம் 7 மணி வரை கடை போட்டிருப்பேன். நான் என் கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்.” என்கிறார்.
பழச்சாறு கடை நட்த்துபவர்
கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சுங்குவார்ச்சத்திரம், திருப்பந்தியூர் கிராமம். மல்லிகை, ரோஜா, குறிஞ்சி, செந்தாமரை, செம்பருத்தி, கஸ்தூரி, செண்பகம், மனோரஞ்சிதம், தாழாம்பூ என்று 17 மகளிர் சுய உதவி குழுக்களிலிருந்து செல்வி, வாசுகி, துளசி, லட்சுமி, சாந்தா, தேவகி, முனியம்மா, முத்து, பவானி, அமுதா, சுந்தரி ஆகியோர் ஒரு கூட்டத்துக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்புகிறார்கள்.
சுயஉதவிக் குழு பெண்கள்
சுய உதவிக் குழு அரசியல்
“ஆம்பளைங்க தண்ணி போடறதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. அத நிறுத்தச் சொல்லுங்க சார். நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். குடும்பத்தில நிறைய சண்டை.
எங்க ஊர்ல சாராயம் காய்ச்சிறதை எடுத்தாந்து கோயிலாண்ட போட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துட்டு காத்திருந்தோம். காவலுக்கு இருந்தவங்க எதுக்கு இந்த கருமம்ணு சாராயத்தை தரையில் கொட்டிட்டாங்க. போலீஸ்காரன் வந்து, எங்க ஆதாரம்ணுன்னு எங்களையே கேட்கறான்.
எந்த ஒரு பிரச்சனைக்கு நாங்க பேச வந்தாலும், நீங்க பொம்பளைங்க ஏன் பேசறீங்கன்னு கேட்கறாங்க. கான்வென்டுக்கு 4 வயசு கொழந்தைய அனுப்பறோம். டிரைவரே குழந்தைய சீரழிச்சிட்டான்னு நியூஸ் வருது. பொம்பள பசங்க பயந்துகிட்டுதான் வெளிய போறாங்க”
“இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே மகளிர் தினத்தன்று என்ன செய்வீர்கள்” என்று கேட்டோம்.
“மகளிர் தினத்த ஒட்டி சுத்துப் புறத்த சுத்தமா வச்சிக்கிறது எப்படி, கேன்சர் வராம பார்த்துக்கறது எப்படின்னு இன்னைக்கு கிளாஸ் எடுத்தாங்க. சாந்தோம் சர்ச்ல, கான்சர் பத்தி ஒரு டாக்டர் பேசினாங்க. சுத்துச் சூழல பத்தி பேசினாங்க, மரம் நடுறத பத்தி பேசினாங்க.
ஒவ்வொரு குழுவில இருந்தும் 2 பேரு வந்திருக்கோம். நாளைக்குதான் மகளிர் தினம். சாக்லேட் கொடுத்து இங்க நடந்ததை எல்லாம் சொல்ல மீட்டிங் போடுவோம். நாளைக்கு மீட்டிங் போட்டு சொல்லுவோம். கான்சர் விழிப்புணர்வு பத்தி பேசுவோம். செயல் விளக்கமா போட்டுக் காண்பிப்போம்.” என்று பெண்களை பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் சுயஉதவிக் குழு அரசியலையும் புரிய வைத்தார்.
மெரீனா கடற்கரையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளிகளிடம் பேசினோம்.

“இங்கயும் வேல செய்யணும். காலையில எழுந்தவுடன் ஒரு ஆபிஸ் படி பெருக்கணும். ஒரு ஆபிஸ் பெருக்கி துடைக்கணும். நம்ம வாழ்க்க முடிஞ்சி போச்சி. படிக்கிற குழந்தை வாழ்க்கை வீணா போகக் கூடாதுல்ல. இங்க 7 மணி வரைக்கும் பார்ப்போம். இந்த வேலை இல்லைன்ன எங்க கதி அவ்வளவுதான். எங்க கையில காசு இருக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.
எக்ஸ்போர்ட்டுக்கு போகணும்னா காலைல 10 மணிக்கு போய் சாயங்காலம் வரணும். அந்த சம்பளமும் பத்தாது. இங்க காலையில 6 மணிலருந்து 2 மணி அல்லது 2 மணிலருந்து 10 மணின்னு இருக்குது. காலையில எந்திச்சி சாப்பாடு செய்றோம், வீட்டு வேல செய்றோம், 2 மணிக்கு கிளம்பி வர்றோம்.
ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்.
பொண்ணா இருந்து சொல்ல முடியாத கஷ்டம்லாம் இருக்கு. பாலியல் ரீதியான தொந்தரவு இருக்கும். இதே மாதிரி வேற இடத்தில வேல செய்றப்போ தொந்தரவு கொடுத்தாங்க. அதான் இந்த வேலைக்கு வந்தேன். எங்க போனாலும் பொம்பளைங்களுக்கு தொந்தரவு.
sanitary-workers-1இன்னைக்கு ஆபிஸ்ல பெருக்கும்போது கூட நடந்தது. நாலாவது மாடியில இருந்து பெருக்கிகிட்டே வர்றேன், கட கடன்னு படியேறி வர்றாங்க. அப்படியே போயிட்டு, அடுத்த மாடிக்கு போனா அங்கயும் வர்றாங்க. உயிரையும் மானத்தையும் கையில பிடிச்சிகிட்டு வேல செய்றோம்.
ஒரு தடவை ஸ்டீல் பட்டறைல வேல செய்யும் போது வெள்ளிக்கிழமை சம்பளம் கொடுக்க ராத்திரி 10 மணி ஆயிடிச்சி. பஸ்சுக்கு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது 4 பேரு வந்தாங்க, தகாத முறையில பேசினாங்க. ஆட்டோ கூப்பிட்டு ஏறுங்கறாங்க. ஆட்டோக்காரண்ணன் பேசிகிட்டே, என்கிட்ட “போயிடு”ன்னு கண்ண காட்டினாரு. நான் போறப்ப, அந்த ஆளுங்க பின்னாலயே வந்தாங்க. இரண்டே முடிவு எடுத்தேன். போலீஸ் காரன் யாராவது எதிர்ல வந்தா சொல்லலாம், இல்ல பிரிட்ஜ்ல இருந்து கீழே விழுந்து செத்துடுவோம்னு.
அப்போ வந்த ஒரு அம்மாகிட்ட பேசி, “என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிங்க”ன்னு கேட்டு அவங்க என் தோளில கை போட்டு நடக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொல்லி லாஸ்ட் பஸ்ல ஒரு அண்ணன் கூட வீட்டுக்கு வந்து சேர்த்து விட்டாங்க. பொம்பளையா பொறந்தா எல்லா துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கு.
இதனாலேயே ஒரு இடத்தில வேலைய எங்களால செய்ய முடியல. எங்கனாவது பாதுகாப்பு கிடைக்காதான்னு அங்கங்க இடத்த மாத்திக்கிறோம். பயந்து பயந்து வாழறோம். எத்தனையோ தடவை சாவறதுக்கு முயற்சி பண்ணி, குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அரசாங்கத்த டாஸ்மாக் கடைய மூடச் சொல்லு, நான் குடிக்கிறத நிறுத்தறேங்கறாங்க ஆம்பளைங்க. 7,000 ரூவா சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்கு 2,000 தரவா, 3,000 தரவான்னு யோசிக்கிறாங்க. மாசம் முழுக்க கடன் வாங்கி குடிச்சிர்றாங்க, சம்பளம் வாங்கினதும் அதை எல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வெறுங்கையோட வர்றாங்க.
கொழந்தைங்கள எப்படி படிக்க வைக்கிறது சொல்லு. சமைக்கிறதுக்கு 300 ரூவா ஆகுது. நாங்கதான் வீட்லயும் வேல பார்த்துட்டு, வெளியிலயும் சொமக்கறோம். இந்த டாஸ்மாக்க மூடுனா பல குடும்பங்க பொழைக்கும் சார். அதைச் செய்யணும் சார். இருக்கிற கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்ல.
எங்க வீட்டுக்காரர் வேலைக்கு போறதில்ல. நான்தான் வேலைக்குப் போய் குடும்பத்த பார்த்துக்கணும். என் பையன் படிக்கிறான். குடும்ப கஷ்டத்த பார்த்து அவனும் வேலைக்கு போறான்.
வீட்டுக்காரரு குடிக்கு காசு கொடுத்தாலும், கொடுக்காட்டாலும் குடிப்பாரு. குடிக்கிறதுக்கு காசு வேண்டும். சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டாலும் குடி தினமும் வேண்டும். எங்கனா மூட்டை தூக்கப் போனா அந்தக் காச வீட்டில கொடுக்க மாட்டாரு. குடிச்சிட்டு சாப்பாட்டுக்கு வந்து சண்ட போடுவாரு. குடிக்கிறதாலதான பிரச்சனை.
நாங்க என்ன பண்றது. உயிரைத்தான் விடணும். கெவர்ன்மென்ட்தான் வைன் ஷாப்பை நடத்துறாங்க. குடி வருமானத்திலதான் இலவசம்னு சொல்றாங்க. எங்களுக்கு அப்படி என்ன இலவசமா தர்றாங்கன்னு எங்களுக்கு தெரியல. நாங்க எல்லாத்துக்கும் வரி கட்றோம்ல, அதெல்லாம் எங்க போகுது. அவங்களுக்குத்தான் அவங்க காசு எல்லாம் கேக்கறாங்க. எல்லா சொத்தும் அவங்க பேர்ல இருக்குது.
குடிய ஒழிக்க ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணியாச்சு. ஒழிக்கணும். சின்ன பசங்க குடிக்குதுங்க. மொதல்ல இந்த டாஸ்மாக்க ஒழிச்சுக் கட்டணும் சார். உள்ள போய் நாலைஞ்சு பாட்டில ஒடைச்சாத்தான் இதை நிறுத்த முடியும்.”
பல்கலை மாணவிகளிடமிருந்து ஆரம்பித்த நேர்காணல் நகர சுத்தி தொழிலாளிகளின் வார்த்தைகளுடன் முடிவடைந்தது. மகளிர் தினத்தின் சேதி என்ன என்பதை சுருக்கிச் சொன்னால் குடி, பாலியல் வன்முறை, பயந்து வாழும் பெண்கள் எனலாம். என்ன செய்யலாம்?
நன்றி வினவு.

Sunday 8 March 2015

இருசக்கர வாகனங்களின் அபரிமித பெருக்கத்தால் விபத்து: உயிரிழப்புகளில் தமிழகம் முன்னிலை


தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இதற்கு இருசக்கர வாகனங்களின் அபரிமித மான பெருக்கமும், வாகன ஓட்டி களின் அலட்சியப் போக்குமே காரணம் என கூறப்படுகிறது.
சாலை விபத்து உயிரிழப்புகளில் 10 ஆண்டுகளாக தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருந்துவந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் விபத்துகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவில் வாகன விபத்து களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள் ளது. கடந்த 2 ஆண்டுகளாக விபத்து உயிரிழப்புகள் சற்று குறைந்து வந்தபோதிலும், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டில் தமிழகத்தில் 67,250 விபத்துகளில் 15,190 பேர் இறந்துள்ளனர். 2013-ல் 66,238 சாலை விபத்துகளில் 15,563 பேர் இறந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே 1,337 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது:
இரு சக்கர வாகனங்களின் பெருக்கமே விபத்துகளுக்கு முக்கிய காரணம். தமிழகத்தில் தற்போதுள்ள 2.01 கோடி வாக னங்களில் 83 சதவீதம் இரு சக்கர வாகனங்களே. சிலர் மிக வேக மாக வண்டிகளை ஓட்டுவதும், குடிபோதையில் ஓட்டிச் செல் வதுமே விபத்துகளுக்கு கார ணம்.
தமிழகத்தில் வாகன எண்ணிக் கையுடன் ஒப்பிடும் போது உயிரி ழப்பு விகிதம் குறைவேயாகும். 10 ஆயிரம் வாகனங்கள் வீதம் ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்தால் தமிழகம் 16-ம் இடத்தில் உள்ளது.
எனினும், விபத்துகளைக் குறைப்பதற்காக பள்ளிப் பருவத்திலேயே போக்கு வரத்து விதிகள் போதிக்கப்படுகின் றன. பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங் கள் செய்யப்படுகின்றன. சாலைப் பாதுகாப்புக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துதல், சாலைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவருகின்றன. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைக்காவிட்டால் விபத்து களைத் தடுக்கமுடியாது என்றனர்.
வேகமே காரணம்
தமிழக சாலை பாதுகாப்புக் கொள்கையை வகுத்துக் கொடுத்த குழுவின் தலைவரும், போக்குவரத்து ஆலோசனை கூட்டமைப்புத் தலைவருமான என்.எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
திறமையாக ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம். வாகனங்கள் அதிவேகமாகச் செல்லக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அங்கு வேகத்தடைகளை ஏற்படுத்தி, தடுப்புகளைப் போட அரசு தீவிரமாக எடுக்க வேண்டும்.
குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவோருக்குக் கடும் தண்டனை விதிக்க வேண் டும். சாலை பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி, விபத்து தடுப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமல்படுத்த வேண்டும். பாதசாரிகள் நடப்பதற்காக நடை பாதைகளை அகலமாக்கி, சாலையோர பார்க்கிங்கை கட்டுப்படுத்தினால், விபத்துகள் குறையும். இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

எம்.எச்-370: யாருக்கும் இப்போது அக்கறை இல்லை!

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானம் காணாமல் போய் இன்றோடு ஓராண்டாகிறது. சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற் படைகளும் விமானப் படைகளும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்று தெரியவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை ஏதும் வெளியாகவில்லை.
விமானக் குழுவினரோ விமானப் பயணிகளோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று யாருக்கும் தெரிவிக்கவில்லை. விமானம் பறந்த வழியில் இருந்த நிலை யங்களோ, அருகில் பறந்துகொண்டிருந்த விமானங்களோ வித்தியாசமாக எதையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை. விமானம் கடத்தப்பட்டதாக எந்த அமைப்பின் மீதும் சந்தேகம் வரவில்லை. விமானத்தைத் தாங்கள் கடத்தியதாகவும் யாரும் தெரிவிக்கவில்லை. இது விபத்துதான் என்றால், விமானத்தின் எந்தப் பகுதியும் எப்படி இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருக்கிறது என்று தெரியவில்லை.
2014 மார்ச் 8
அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியை சாரா பாஜ்ச், பெய்ஜிங்கில் உள்ள தனது அடுக்ககத்திலிருந்து நண்பர் பிலிப் அந்த விமானத்தில் வரப்போகிறார் என்று காத்திருந்தார். அந்த விமானம் காணாமல் போனதாக, உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று ஒளிபரப்பானது. ஆஸ்திரேலியத் தொழிலதிபரும் துப்பறியும் நிபுணருமான ஈத்தன் ஹண்ட் துபாயிலிருந்து பாரீஸுக்கு விமானத்தில் அப்போது சென்றுகொண்டிருந்தார். தூரக் கிழக்கு நாட்டி லிருந்து ஒரு விமானம் வழிதவறிப் பறந்து, ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக வெளியான செய்தியை ஈத்தனின் உறவுக்காரப் பெண் அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார். அடிக்கடி தனக்கு வந்த மின்னஞ்சல் செய்தியால் குழப்பமடைந்த ஈத்தன், பாரீஸ் நகருக்குச் சென்றதும் ஹோட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சியில் செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்.
மர்மமான மறைவு
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு இரவு 12.41 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் காணாமல் போய்விட்டது. விமானம் ஆபத்தில் சிக்கியிருப்பதாக விமானி எந்தத் தகவலையும் அனுப்பவில்லை. இரவு 1.30 மணிக்கு ஜப்பானைச் சேர்ந்த போயிங் 777 விமானம் அருகில் பறந்தது. அந்த விமானி எம்.எச்.370-ஐத் தொடர்புகொண்டு 'வியட்நாம் வான் எல்லையில் நுழைந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். பதில் ஏதும் வரவில்லை.
மலாக்கா நீரிணைப் பகுதியில் உள்ள புலாவ் பேரக் என்ற தீவில் பின்னிரவு 2.40 மணிக்கு அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய விமானப்படைத் தளபதி டான் ரோட்சாலி தாவுத் தெரிவித்தார். மார்ச் 11-ல் இப்படிக் கூறிய விமானப்படை தளபதி, தான் அப்படிக் கூறவேயில்லை என்று அடுத்த நாள் மறுத்துவிட்டார். பினாங்கு நகருக்கு வட மேற்கில் 200 மைல்கள் தொலைவில் பின்னிரவு 2.15 மணிக்கு ராடாரில் சிக்னல் கிடைத்தது என்றார். அடுத்த நாள் அதையும் மாற்றி பின்னிரவு 2.30 மணி என்று நேரத்தைத் திருத்தினார்.
விமானத்தில் இருந்த யாரோ தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்த முடியாமல் தொடர்பைத் துண்டித்ததாகவும், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு விமானம் நிலையில்லாமல் மிதந்துகொண்டே இருந்ததாகவும், பயணியர், விமானக் குழுவினர் உள்ளிட்ட 239 பேரும் போதிய பிராணவாயு கிடைக்காமல் செயலிழந்துவிட்டதாகவும் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் மார்ச் 15-ம் நாள் அறிவித்தார்.
லட்சக் கணக்கானவர்கள் தேடல்
இணையதளத்தில் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட லட்சக் கணக்கானவர்கள் தங்கள் பகுதியில் விமானத்தின் சிதைவுகள் தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். கடல் பரப்பில் ஏதாவது மிதந்துவருகிறதா, எண்ணெய்ப் படலங்கள் தென்படுகின்றனவா என்று மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையொட்டிய கடல் பரப்பில் தேடுதல் வேட்டை தொடங்கியது. மலேசிய அரசு எதையோ மறைக்கிறது, அல்லது தேடுதலில் ஆர்வம் காட்டவில்லை என்று பிற்பாடு நினைத்த பலர், தாங்களாகவே குழுவாகச் செயல்பட்டுத் தேட முற்பட்டார்கள்.
ஆசிரியை சாரா பாஜ்ச் பலமுறை பேட்டி காணப்பட்டார். அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர் பிலிப் உட், ஐ.பி.எம். நிறுவனத்தின் அதிகாரி. 3 ஆண்டுகளாக இருவருக்கும் நட்பு. இருவரும் கோலாலம்பூரில் ஒன்றாகச் சேர்ந்து வாழத் திட்டமிட்டிருந்தனர். அவர் இறந்திருக்க மாட்டார் என்று சாரா உறுதியாக நம்புகிறார்.
இந்த விமானத்தில் சென்றவர்களில் ஒருவர்கூட நண்பரோ, உறவினரோ இல்லையென்றாலும், இந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ஈத்தன் ஹண்ட் (55). ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்த அவர் உடற்பயிற்சி மையம், கணினி மென் பொருள் நிறுவனங்களை நடத்துகிறார்.
21-வது நூற்றாண்டில் ஒரு விமானம் சுவடே இல்லாமல் காணாமல் போய்விட முடியுமா என்பதுதான் அவரது தீவிரத்துக்குக் காரணம். பிரேசில் நாட்டின் நாலாவது பெரிய ஹோட்டல் குழு மத்தின் அதிபர் மார்ட்டின் வான் ஸ்லை (51). ஏர்பிரான்ஸ் விமானம் 447, அட்லான்டிக் பெருங்கடலில் 2009-ல் விழுந்து விபத்துக்குள்ளானதில் தன்னுடைய தங்கை அட்ரியானாவை இழந்தவர் மார்ட்டின் வான் ஸ்லை. எனவே, இம்மாதிரி விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக அமைப்பை ஏற்படுத்தினார். எம்.எச்-370 விபத்துக்கு உள்ளானவுடனேயே அதில் சென்றவர்களின் உறவினர்கள் சிலரை, லாக்கர்பி விமான விபத்தில், நியூயார்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் தங்களுடைய உறவினர்களை இழந்தவர்கள் தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்தார்கள்.
பெரும் தொகை பரிசு!
இந்த விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசுகளின் உதவியின்றித் தனிப்பட்ட முறையில் தேடி அறிவது, தகவல் தருவோருக்குப் பெரும் தொகை பரிசாகத் தரப்படும் என்று அறிவிப்பது, அதற்காக மக்களிடம் நிதி திரட்டுவது என்ற முடிவை ஈத்தன் அறிவித்தார். ஃபேஸ்புக்கில் 17 லட்சம் பேர் உறுப்பினராக இருப்பதால், 2 வாரத்தில் இந்தத் தொகை கிடைத்துவிடும் என்று ஈத்தன் நம்பினார். இதற்காக இன்டீகோகோ (Indiegogo) என்ற இணையதளத்தின் உதவியை நாடினார். விமான விபத்துக்குப் பிறகு, அதில் சென்றவர்களின் உறவினர்களை மலேசிய அரசு அழைத்தது. அங்கு ராணுவ அதிகாரிகளும் இருந்தனர். விமானத் துறை அதிகாரி களை உறவினர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே வந்ததுபோல அவர்கள் நடந்துகொண்டார்கள். மார்ச் 24-ல் ஏர்லைன்ஸ் விமானம் அனுப்பிய செய்தியில், "எம்.எச்.370-ல் சென்ற அனைவரும் இறந்துவிட்டனர் என்றே சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது, நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். பலருக்கும் இது கோபத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. 'இப்படி இரக்கமில்லாமல் சொல்ல எப்படி முடிகிறது?' என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது.
சாரா அளித்த பேட்டிகளை வைத்தே அவரைப் பலரும் அணுகினர். சந்தர்ப்பவாதிகள், சொந்த ஆர்வத்தில் துப்பறிபவர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், வேறு கிரகத்திலிருந்து வந்து கடத்தியிருப்பார்கள் என்று நம்புகிறவர்கள் எனப் பலர் அவரைச் சந்தித்தனர். அரசுத் தரப்பில் அவரைச் சந்தித்தவர்கள் பிலிப்புடன் அவருக்கு எப்படி நெருக்கம் என்று இங்கிதமில்லாமல் பல கேள்விகளை எழுப்பினார்கள். விபத்து நடந்த 8 வாரங்களுக்குப் பிறகு, சாராவின் முகவரி கிடைத்து அவரைக் கண்டுபிடித்தார் ஈத்தன் ஹண்ட். சாரா முதலில் அவரை நம்பவில்லை.
6 பேர் குழு
விமானத்தைப் பற்றி தகவல் அறியும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் 6 பேர். அமெரிக்க பள்ளிக்கூட ஆசிரியை சாரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈத்தன், பிரேசிலைச் சேர்ந்த மார்ட்டின் வான் ஸ்லைஸ், பிரெஞ்சுத் தொழிலதிபர் கிஸ்லெய்ன் வாட்டர்லூஸ், சென்னையைச் சேர்ந்த மனித வள ஆற்றல்துறை ஆலோசகர் கே.எஸ். நரேந்திரன், புணேயைச் சேர்ந்த பிரஹ்லாத் ஷிர்சாத். சில மலேசிய, சீனக் குடும்பங்களையும் இவர்கள் தொடர்புகொண்டனர். அரசு தேடுவதே போதும் என்றனர் அந்தக் குடும்பத்தினர். 50 லட்சம் டாலர் திரட்டப்பட்டால் அதிலிருந்து நிதி பெறவும் விருப்பம் காட்டினர்.
பிறகு, அந்த விமானத்தில் சென்றவர்களின் புகைப்படங்களைத் தொகுத்து வெளியிட்டு, விபத்துபற்றித் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் நன்கொடை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள். தகவல் தருவோருக்குச் சன்மானம் உண்டு என்றும் அறிவித்தனர். எதிர்பார்த்தபடி தகவலோ, நன்கொடைகளோ வரவில்லை. 1,00,516 டாலர்கள் மட்டுமே வசூலானது. தொகை குறைவாக இருந்ததால், பரிசு தரும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, கிடைத்த தொகையைக் கொண்டு புலனாய்வு வேலையைத் தொடங்கினர். ஆனால், எந்தத் தகவலும் கசிந்துவிடாதபடி அதிகாரிகள் தடுத்தனர்.
கோலாலம்பூரில் பாதுகாப்பு எப்படி?
கோலாலம்பூர் விமான நிலையத்தையும் ஈத்தன் ஒரு நாள் முழுக்கத் தங்கியிருந்து நோட்டமிட்டார். வான் பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி, பானங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு வண்டிகள் எந்தவிதச் சோதனையும் இல்லாமல் விமான நிலை யத்துக்குள் போவதும் வருவதுமாக இருந்தன. யார் வேண்டுமானாலும் விமானம் நிற்குமிடம் வரை தடையில்லாமல் செல்லும் வகையில் இருந்தது பாதுகாப்பின் லட்சணம்! மலேசியாவின் பட்டர்ஒர்த் என்ற ராணுவத் தளத்தில் அந்த விமானம் தரையிறங்கிய பிறகு, வேறு எங்கோ பறந்திருக்க வேண்டும் என்கிறார் ஈத்தன். தென் பசிபிக் பெருங்கடலில் ஏன் தேடுதல் வேட்டை நடக்கவில்லை என்று கேட்கிறார் சாரா. இந்தோனேசியாவில் மட்டுமே மக்கள் வசிக்காத 16,000 தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஏராளமானவை மிகவும் சிறியவை. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி தீவுகள் மழைக் காட்டுக்குள் விமானத்தை மறைத்துவைக்கும் அளவுக்குப் பெரியவை.
சில கேள்விகள்
ஆக்ஸிஜன் இன்றி விமானத்தில் உள்ளவர்கள் இறந்திருப்பார்கள் என்று ஒரு ஊகம் சொல்லப்படுகிறது. விமானப் பயணிகளும் குழுவினரும் இறந்துவிட்ட பிறகு, விமானம் மட்டும் எப்படி தனியாக, எந்த ராடாரிலும் சிக்காமல், ஓசையின்றி, 6 மணி நேரம் பறந்திருக்க முடியும்? அப்படியே கடலிலோ தரையிலோ விழுந்திருந்தாலும் எப்படி உடையாமல், நொறுங்காமல், பாகங்கள் சிதறாமல் அப்படியே பொட்டலம்போல கண் மறைவாக விழுந்திருக்க முடியும்? இதை ஈத்தனும் சாராவும் கேட்கின்றனர்.
பதவியில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் வினோதமாகவும், மர்ம மாகவும் இருப்பதால் சந்தேகங்கள் வலுக்கின்றன. விமானம் கடலில் விழுந்தால் அது விரைவில் தெரிந்துவிடும். விமானம் புறப்பட்ட உடனேயே யாரோ அதைத் தங்களுடைய கட்டுப் பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்கிறார் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பிரிட்டிஷ் தலைமை நிர்வாகி டிம் கிளார்க். சென்னையைச் சேர்ந்த கே.எஸ். நரேந்திரனும் தென் சீனக் கடல் வழியாக விமானம் பறந்திருக்கலாம் என்கிறார்.
பைலட்டின் கடைசி கோரிக்கை
ஈத்தன் இந்த விசாரணையில் இப்போதும் தீவிரமாக இருக்கிறார். அந்த விமானம் புறப்படுவதற்கு முன்னால் அங்கு வந்த பைலட், கூடுதலாக 2 மணி நேரம் பறப்பதற்கேற்ப எரிபொருள் நிரப்பச் சொன்னாராம். இதைக் கூறிய ஈத்தனிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார். அதே சமயம், பைலட்டுகள் இப்படி அடிக்கடி கேட்பது வழக்கம்தான் என்றும் குறிப்பிட்டார். 2 மணி நேரம் கூடுதலாகப் பறந்தால், மாலத் தீவுகளிலோ அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கும் டீகோ கார்சியா தீவுக்கோ செல்ல முடியும். இந்த விபத்துகுறித்துத் துப்புத் துலக்க, ஈத்தன் அணுகிய தனியார் துப்பறியும் நிறுவனத்துக்குக் கொடுத்த பணம் செலவாகிவிட்டது.
கடந்த சில மாதங்களாக அவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே துப்பறிந்துவருகிறார்கள். அப்புறம் தந்தால் போதும் என்கிறார்கள். நிச்சயம் உண்மை வெளியாகும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மார்ட்டின். சாரா பொறுமையிழந்துவிட்டார். இனிமேல் யார் வந்தாலும் எனக்கும் பிலிப்புக்கும் உள்ள நட்பு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் என்கிறார். விமானத்தைப் பற்றித் திட்டவட்டமாக ஏதாவது தெரிந்தால் பேச வாருங்கள் என்று சலிப்பு, கண்டிப்பு கலந்த குரலில் கூறுகிறார்.
© 'தி கார்டியன்'