Monday 23 February 2015

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.
உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்மொழிக்கான இடம் எது?
பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.
ஆங்கிலம்தான் அறிவா?
சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.
ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.
'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.
உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?
கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.
தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.
ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.
"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.
தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.
இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .
மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.
தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.
ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?
எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.
சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.
யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?
மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.
''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...

அடங்காத வெறி!

பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. கலாச்சாரத்தில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.
செய்தித்தாள்களில் நாள்தோறும் தவ றாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.
நகரம், கிராமம் என்றில்லாமல் தொட ரும் இந்தக் கொடுஞ்செயல்கள், ஒன்று மறியாத பிஞ்சுக் குழந்தைகளைப் பலி யாக்கிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத இந்தக் குற்றங்களை செய்பவர்களின் மனம், எதனால் இப்படி மாறுகிறது? சமூ கத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக எப்படி இவர்கள் மாறிப் போகிறார்கள்? பால் உணர்வு பற்றிய புரிதல் இல்லாமல் இவர்கள் தடம் மாறிப் போகக் காரணம் என்ன? பெருகி வரும் குற்றங்களைப் பட்டியலிடுவதும், கவலை கொள்வதும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவிப் பணத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கம் தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. எந்தெந்த சிக்கல்கள் உடனடியாகத் தீர்க் கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் பொதுவிதியாக இருக்கிறது.
நான் மறக்க நினைத்தாலும் என் கண் முன்னே என் சிந்தனையை இடைஞ்சல் செய்து நிற்கின்ற இச்செய்தியை நீங் களும் அறிந்திருக்கலாம். மயிலாடு துறை அருகே ஒரு பள்ளி மாணவி சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணி யைப் படித்தபின், என் மனம் அந்த மாணவியையும் அவ்வாறு சிக்குண்டு இருக்கும் இளம் பெண்கள் பற்றியுமே சுற்றுகிறது.
மதுக் குடிக்கு அடிமையாகிப் போன அப்பனிடம் இருந்து பருவமடைந்த தன் இரண்டு மகள்களையும் காப்பாற்ற, அந்த மாணவியின் தாய் ஒவ்வொரு நாளும் போராடியிருக்கிறார். குடித்துவிட்டு வருகிற கணவனைத்தான் அவரால் கண்டிக்க முடிந்திருக்கிறது. தெருவில் இருக்கும் அரசு மதுக் கடையை அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தத் தாயால் முடிந்ததெல்லாம் பகலும் இரவும் தன் மகள்களிடம் அவர்களின் அப்பனை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண் டதுதான்.
தொடர்ந்து வன்புணர்ச்சிக் கொடுமையை அனுபவித்து வந்த மூத்த மகள், யாரிடம் இதைப் பற்றி சொல்ல முடியும்? எந்த மன நிலையில் அவளால் பள்ளிக்குச் சென்று படித்திருக்க முடி யும்? தன் தந்தையிடம் இருந்து தங்கையையாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தவள், ஒருநாள் நஞ்சு வாங்கி வந்து மதுவுடன் கலந்து வைத்து விட்டாள். அதனைக் குடித்த அப்பன் இறந்து போனான்.
அவளைத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்த தந்தையின் கூட்டாளிகள் இருவரும் மீதியிருந்த மதுவைக் குடித்ததினால் இறந்து போனார்கள். வழக்கம் போலவே பெயரை மாற்றி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஒரு பெண் பிள்ளையாகப் பிறந்ததினா லேயே மனதையும், உடல் வதையை யும் அனுபவித்து வந்தவள் மூவரும் இறந்துபோன காரணத்துக்காக சிறையில் கிடக்கிறாள். இறந்துபோன குற்ற வாளிகள் மூவருக்கும்தான் அவளால் தண்டனை கொடுக்க முடிந்தது.
மதுவைக் கொடுத்து குடிகாரர்களாக ஆக்கி யவர்களைத் தண்டிக்க முடியவில்லை. கல்வி கற்று வாழ்க்கையை வாழவேண்டிய ஒரு குடிமகள், கொடுஞ்சிறையில் குற்றவாளியாகக் காலத்தைக் கழிக் கிறாள். இப்படி நாள்தோறும் நடக்கிற குற்றங்கள் ஒன்றா, இரண்டா? அந்தக் குடும்பத்தின் கதி என்ன? யாருக்காவது தெரியுமா? அது பற்றிய அக்கறை யாருக்குத் தேவை? மதுவின் விற்பனை எண்ணிக்கைக் கூட்டுத் தொகையைவிட பாதிப்புக்குள்ளாகும் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை களின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கைக் குறைவுதானே என நினைக்கிறார்களா?
புத்தகங்களையும், புத்தகப் பையை யும், மிதிவண்டிகளையும், மடிக்கணினி யையும் கொடுப்பவர்களுக்கு மதுவைக் கொடுப்பதால் ஏற்படும் சீரழிவுகளைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? என் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த ஏழைத் தாய் ஒருவரிடம் அவருக்கு உதவியாக வந்திருந்த மகளை, ‘ஏன் படிக்கிற பெண்ணை வேலைக்கு அழைத்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு இதையேதான் காரண மாகச் சொன்னார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை வேலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், கணவன் குடிகார னாக இருப்பதால் வீட்டில் விட்டுவிட்டு வர அச்சமாக இருப்பதாகவும் சொன்னபோது அதிர்ந்து போனேன்.
‘மதுக் கடைகளை மூடுங்கள். சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், கடைகளை மூட முடியாது. முடிந்தால் மதுவின் கேடுகளைச் சொல்லி பரப்புரை செய்யுங்கள்’ என அந்தத் துறையைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சட்டமன்றத்தில் வாய் கூசாமல் சொல்கிறார். அதற்கும் மேசை உடைகிற மாதிரி தட்டி அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலையைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் பெண், தான் அணிந்து கொள் ளும் ஆடை முதற்கொண்டு, தான் பயணிக்கும் வாகனம், பணிபுரியும் பணிக் கூடம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டேதான் உயிரைக் கையில் பிடித் துக் கொண்டு வாழவேண்டியிருக்கிறது. ‘கண்காணிக்கும் கேமரா’ வைத்துவிட் டால் கடமை முடிந்துபோகும் என நினைக்கிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தருவதோடு காவல் துறையின் கடமை முடிந்துபோகிறது. பாலியல் குற்றங்களும், வன்முறைகளும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை.
இணையதளங்கள், வலைதளங்கள் எல்லாம் மனிதர்களைத் தனிமைப்படுத்தி யது. உறவுகளைக் கொன்றொழித்தது. பாலுறவு பற்றிய புரிதல்களைக் கற் றுக் கொடுக்காமலேயே, ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் கைப்பேசி, மடிக்கணினி கொடுக்கப்பட்டுவிட்டன. அதை வைத்து பொழுது விடிந்து உறங்கும் வரைக்கும் அதனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பார்ப்பதை எல்லாம் அனுபவித்து விடத் துடிக்கிறார்கள். பெற்றோர்களுக் கும் அவர்களைக் கவனிக்க நேரம் இல்லை.
தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவி னர்கள், தெரிந்தவர்கள் என இவர் களால் மட்டுமா இந்தப் பாலியல் வன் முறை நிகழ்கிறது? ஆசானாக இருக்கிற ஆசிரியர்களின் மனதையும் நச்சாக்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளால் பெற் றோர்களும், குழந்தைகளும் கதிகலங் கிப் போய்தான் நிற்கிறார்கள்.
பணவெறிப் பிடித்த தொலைக்காட்சி களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு கவர்ச்சி உடை அணி வித்து, திரைப்பட நடிகர், நடிகைகள் செய்யும் அருவருப்பான அங்க அசைவுகளைக் கற்றுக் கொடுத்து ஆடவிட்டு, பாடவிட்டு மதிப்பெண்கள் அளித்து கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடுஞ்செயல்களை யார் தடுத்து நிறுத்துவது? தடுத்து நிறுத்த வேண்டிய நாமே பல் இளித்து கைத்தட்டிக் கொண்டிருக்கும்போது, பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
உறவுகளின் விழுமியங்களை, அதன் மதிப்பீடுகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். அவர் களுக்கு எல்லாருமே அங்கிள், ஆண்ட்டி தான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும், மாமன், மச்சானுக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரிவதே இல்லை. முறைப் பெண்ணுக்கும், அக்காள், தங்கை உறவுமுறைக்கும் வேறுபாடு தெரியாமல் எல்லாருமே ‘கசின்கள்தான்!’
பணத்தாசை, பணவெறி அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்துவிட் டது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தால் சமு தாயம் தப்பிப் பிழைக்கும். அதுவரை நம் உயிராகப் போற்றுகிற கலாச்சாரங்கள் காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கும். என்ன செய்யலாம்?

Friday 20 February 2015

குழந்தை இப்போது வேண்டாமா?

கருமுட்டை வங்கிகளை மருத்துவ முன்னேற்றமாகப் பார்ப்பதா, மானுடச் சீரழிவாகப் பார்ப்பதா?
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் சில வாரங்களுக்கு முன்னால் ஓர் அதிசய அறிவிப்பை வெளியிட்டன. அவற்றில் பணியாற்றும் இளம் பெண்கள் நிர்வாகத்தின் வசதிக்கேற்றபடி தமது பேறுகாலத்தைத் தள்ளி வைத்துக்கொள்ளும் வகையில், தமது கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்ளப் பண உதவி செய்யும் ஒரு திட்டத்தை அவை அறிவித்துள்ளன.
ஆண் பணியாளர்களுடன் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளுக்காகப் போட்டிபோட வேண்டியிருக்கிற பெண் பணியாளர்கள், பிரசவத்துக்காக விடுப்பு எடுத்துத் தமது சாதனை வாய்ப்புகளைத் தாமதப்படுத்தவோ இழக்கவோ விரும்புவதில்லை. கருவுற்றிருக்கும் காலங்களில் ஏற்படும் மனம் மற்றும் உடல்ரீதியான சிக்கல்களின் காரணமாகப் பதவிப் போட்டியில் பின்தங்க நேரிடுவதையும் அவர்கள் தவிர்க்க முனை கிறார்கள். கடந்த நான்காண்டுகளில் ஏராளமான இளம் பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத் தமது கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண் முதன்முறை தன் கருமுட்டையை உறையவைக்க 10,000 டாலர்களும் அடுத்து ஒவ்வோராண்டும் 500 டாலர்களும் வழங்குவதாக, ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்துள்ளது. கூடுதலான மருத்துவ விடுப்புகளுடன், குழந்தையின்மைக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைபெற நிதியுதவியும் செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித் துள்ளது.
தமது பெண் ஊழியர்கள் எப்போது பேறுகால விடுப்பு எடுக்க வேண்டும், எப்போது பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக்கூடத் தாமே தீர்மானிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் எண்ணுவதைப் போலத் தோன்றுகிறது. அவர்களுடைய விருப்பப்படி பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு அவை 20,000 டாலர் வரை ஊக்கத்தொகையையும் அளிக்கின்றன.
வர்த்தகப் போட்டிகள் வலுவாக உள்ள இந்தக் காலத்தில், பெண் பணியாளர்களின் பிரசவ கால விடுப்புகளாலும், கர்ப்பகால உடல்நலக் குறைவு களாலும் தமது நிறுவனங்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற சுயநல நோக்கமே இத்தகைய தாராள நிதியுதவி வழங்கப்படக் காரணம் எனச் சில பெண்ணுரிமைவாத அமைப்புகள் கூறு கின்றன. கருமுட்டைகளை ஆய்வகங்களில் சோதித்து, தரமானவற்றை மட்டுமே பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுவதன் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளோ, மரபணுசார்ந்த பரம்பரை நோய்களோ இல்லாமல் தவிர்க்க இந்த உத்தி உதவும் என்று பல மருத்துவ ஆய்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.
வருங்காலவைப்பு
கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு ஏற்படுத்தும் உத்திகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டார்கள். அவ்வாறு உருவாகும் சிசுக்கள் சோதனைக்குழாய் சிசுக்கள் என்று அழைக்கப்பட்டன.
பெண்ணின் கருவணுவகத்திலிருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்தக் கரு முட்டைக்குள் புகுத்தி அதைச் சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது. அந்தக் கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் அல்லது மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து அது முழுக் குழந்தையாக வெளிப்படும். கருப்பையில் கோளாறு அல்லது வேறு வகை உடல்நலக் குறைபாடு உள்ள பெண்கள் குழந்தைப் பேறு பெற்று மகிழ இந்த சோதனைக் குழாய் உத்தி உதவியிருக்கிறது.
கருத்தரித்த முட்டையை ஒரு பெண்ணின் கருப் பையில் உடனடியாக வைத்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைக் குளிர்பதனப் பெட்டியில் உறைய வைத்துவிடலாம். தம்பதிகள் விரும்புகிறபோது அதை மனைவியின் கருப்பையில் பதித்து வளர்க்கலாம்.
ஏதாவதொரு காரணத்தால், கருவைப் பத்து மாதங்களுக்குத் தன் வயிற்றில் சுமக்க முடியாத நிலை மனைவிக்கு ஏற்படுமானால், உறையவைக்கப்பட்ட கருவை வேறொரு பெண்ணின் கருப்பையில் பதித்து அவளைப் பத்து மாதங்களுக்குப் பிறகு அதை முழுக் குழந்தையாகப் பெற்றெடுக்க வைக்கலாம். அவ்வாறு மேலை நாடுகளில் பல தம்பதிகள், உடல்நலமுள்ள பெண்ணின் கருப்பையில் தமது குழந்தைகளை வளர்த்து, பெற்றுக்கொள்கிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் கருப்பையை வாடகைக்கு விடுவது ஒரு தொழிலாகவே நடக்கிறது.
மாதம் ஒரு கருமுட்டைதான்…
பெண்ணின் கருவணுவகத்தில் மாதம் ஒரு கருமுட்டைதான் உருவாகும். எனவே, அவளுக்கு ஹார்மோன்களை ஊட்டி ஒரே சமயத்தில் நிறைய கருமுட்டைகள் உருவாகும்படி செய்கிறார்கள். பின்னர், அவற்றை வெளியில் எடுத்து அவை குறைகளின்றியும் நல்ல வளத்துடனும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னர், நான்கைந்து கருமுட்டைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றை ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்துக் கருத்தரிக்க வைப்பார்கள். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு கரு முட்டைகளை அவளுடைய கருப்பையில் வைத்து வளர விடுவார்கள்.
1986-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் சென் என்ற ஆஸ்திரேலிய மருத்துவர், பெண்ணின் கருத்தரிக்காத முட்டைகளைக்கூட உறையவைத்துப் பாதுகாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். தேவைப்படும்போது விந்தணுவுடன் சேர்த்துவைத்துப் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும்.
கருவுற்ற முட்டைகளை உறைய வைப்பதைவிடக் கருவுறாத முட்டைகளை உறையவைப்பது அதிக சிக்கலானது. கருமுட்டை என்பது மிக நுண்ணிய ஒற்றைச் செல். உறையவைக்கும்போது அல்லது உறைந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும்போது அது சேதப்பட பல வாய்ப்புகள் உண்டு. கருமுட்டையைச் சரியான நேரத்துக்கு உறைய வைக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் திரவம் உறைந்து கட்டி யாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஆனால், செல் கட்டமைப்பு குலைந்துவிடும். கருமுட்டைக் குள்ளிருக்கும் திரவத்தின் நீர்க்கூறை எடுத்துவிட்டு, வேறு சில ரசாயனங்களை அதற்குப் பதிலாகப் புகுத்தி அந்தத் திரவம் கட்டியாகாமல் தடுக்கப்படுகிறது.
கருமுட்டைகளின் எண்ணிக்கையைக் கூட்ட ஹார் மோன் சிகிச்சையளிக்கும்போது தாயின் கருப்பை உட்புறச்சுவர் தடித்துவிடும். அதன் காரணமாகப் பெண்ணுக்குத் தாய்மை ஏற்படாமல் போகலாம். ஹார்மோன் சிகிச்சையால் ஏற்பட்ட விளைவுகள் மறையும்வரை சினைப்படுத்தப்பட்ட கருமுட்டையை உறையவைத்துப் பாதுகாத்து, அதற்குப் பிறகு அந்தக் கருமுட்டையை அவளுடைய கருப்பையில் பதித்து வளரச் செய்யலாம்.
கருமுட்டை வங்கிகள்
ஒரு பெண் தனது ஆரோக்கியமான இளம் வயதில் தனது கருமுட்டைகளை உறைய வைத்துவிட்டுச் சில ஆண்டுகள் கழித்துத் தனது உடல்நிலை மற்றும் குடும்பநிலை சாதகமாக அமையும்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். வயதாக வயதாகப் பெண்களின் முட்டைகளில் குரோமோசோம்கள் குறை பட்டவையாக ஆகிவிடும். இதைத் தவிர்ப்பதற்காக இளம் பெண்கள் திருமணமானவுடன் தமது கரு முட்டைகளை எடுத்து முட்டை வங்கியில் டெபாசிட் செய்துவிடலாம். கணவருக்குப் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைத்து, குடும்பத்தின் பொருளாதார வசதி மேம்பட்ட பிறகு, அந்தக் கருமுட்டைகளைப் பயன் படுத்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். வேலைக்குப் போகிற பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
பெண்களுக்குப் போட்டியாக, ஆண்களின் விந்தணுக் களைச் சேமிக்கும் வங்கிகளும் சில நாடுகளில் தோன்றியுள்ளன. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆணழகர்கள் போன்றோரின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, தேவைப்படுவோருக்கு விற்கும் வர்த்தகம்கூடச் சில நாடுகளில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் ஒரு கோடீஸ்வரத் தம்பதி தமது கருவுற்ற முட்டையை உறையவைத்துப் பாது காக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் விமான விபத்தில் மரணமடைந்துவிட்டனர். அந்த உறைவு ஆய்வகத்தில் பணியாற்றிய ஒரு பெண், அந்தக் கருவுற்ற முட்டையைத் தன் கருப்பையில் பதித்துக் கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றாள். அந்தக் குழந்தைக்குக் கோடீஸ்வரத் தம்பதியரின் சொத்து முழுவதும் சேர வேண்டும் என்று வழக்கு தொடுத்தாள். மரபணுச் சோதனைகள் அவளுடைய வாதத்துக்குச் சாதகமாயிருந்தன. ஆஸ்திரேலியாவின் சட்ட மேதை களால்கூட எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியில் கோடீஸ்வரத் தம்பதியின் உறவினர்கள் அந்தப் பெண்ணுக்கு நிறைய பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டார்கள்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

வழிப்போக்கர்களுக்குத்தான் சாகித்ய அகாடமி விருதா?

வழிப்போக்கர்களுக்குத்தான் சாகித்ய அகாடமி விருதா?


இப்போதெல்லாம் மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து வழிப்போக்கர்களின் கரங்களையும் விருதுகள் சென்றடைகின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள்.
சாகித்ய அகாடமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு புகார்களை அவர் மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாடமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மைகுறித்தது. மற்றொன்று, குறைந்தபட்சம் இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறைகுறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
படைப்பில் மோசம் என்பது, அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை முக்கியமானது. இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும்போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகிவருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களைப் பெரும்பாலும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.
மணல் குவாரி மனோபாவம்
பொதுவாகவே, நோபல் பரிசு உட்பட உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்துவருகிறார்கள். எனவே, பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞருக்குரிய, எழுத்தாளருக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்ச நிலை. பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விழைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரர்களின் திறமை
பலவீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்காக அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து இவை சில சமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்துக்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச்சேர்கின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள். பெறுமதிகளை அவர் கள் பெற்ற பிறகு, சில சமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, “உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா?” எனக் கேட்கிறார்கள்!
சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்திவிட முடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக்கூடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்று அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கல்வியாளர்களும் சாதியவாதிகளும்
தங்களிடம் உள்ள அதிகாரத்தைச் சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்துக்காக மட்டுமே பெருமக்களைக் குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும். நமது அமைப்புகள் உள்ளடக்கக் குறைபாடுகளால் நிரப்பப்பட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை, குறைகூறி ஏன் இழக்க வேண்டும்?
நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால், கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்ய வேண்டும். தயவு தாட்சண்யம் ஏதுமின்றித் தனிநபர்களிடம் முடங்காமல், அடிப்படையான ஜனநாயகப் பண்புகளைப் பேண நிர்ப்பந்திக்க வேண்டும். சமகால கலை இலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனிநபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக் கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப் பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.
முற்போக்கு முகவர்கள்
சாகித்ய அகாடமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாகத் தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்டரீதியாகப் பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில், கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளைச் சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்கப் பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும்கொண்டிருந்த தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவல நிலை இது.
ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. பண்பாட்டு நிறுவனங்கள் வரை அது ஊடுருவி யிருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவர், நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி, சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொதுமக்களிடம் தெளிய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.

இசைக்கு எதிரானதா இஸ்லாம்?

இசை இசையாகவே பிறந்தது; நாம் நம்முடைய வகைமைக்குத் தக்காற்போல் அவற்றைப் பல வண்ணங்களாகப் பிரித்துக்கொண்டோம். இன்னமும் நாகரிகத்தின் ஒரு ஒளிக்கீற்றில்கூட நனையாத பழங்குடியினரிலிருந்து நாகரிகத்தின் உச்சத்தை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு இணைத்து அனுபவிக்கிறவர்கள் வரை எந்தப் பிரிவுமே இசையை ஒதுக்கித் தள்ளிய சரித்திரம் இல்லை. இசை ஓர் உடலியல் மருத்துவம்; உணர்வுகளின் மீட்டல்.
இசை மனித இனத்தின் பொது அவசியம். சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இசைக்கும் இஸ்லாத்துக்கும் இடையே எண்ணற்ற பகைமுடிச்சுகளை ஏராளமாகப் போட்டுவைத்திருக்கிறார்கள். இசைக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புகளேதும் இல்லை என்று நிறுவுவதில் இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகள் எவ்வளவு ஆர்வமாய் இருக்கின்றனவோ, அதே அளவுக்கு இஸ்லாத்தின் உள்ளும் அந்தச் சக்திகள் பலமாக வேரோடிப்போயுள்ளன. முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் இசைக் கருவிகளைப் போட்டு உடைத்ததாகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரை இசை, கலைகளுக்கு அப்பால் உள்ள மனிதராகக் காட்டினால், அவரை ஒரு தீயசக்தியாக நிறுவிவிடலாம் என்கிற நோக்கத்துக்கு இது பயன்படுகிறது.
ஆனால், இஸ்லாம் கலை, பண்பாட்டுக்கு எதிரானதாக இருக்க முடியாது என்பதை நபிகள்நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தும், அவர் இஸ்லாத்தை அரேபியப் பழங்குடிச் சமூகத்தின் கலாச்சார வேர்களிலிருந்து முழுவதும் துண்டித்துக்கொள்ளாமல், அதன் ஏற்புடைய அம்சங்களின் வழியாகவே வளர்த்தெடுத்தார் எனபதையும் அவருடைய வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு முஸ்லிம் அல்லாதவர்கூட உணர்ந்தறிய முடியும்.
கலை இலக்கியங்களுக்கு அப்பால் எந்தச் சமூகமும் தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள இயலாது. கலை இலக்கியங்கள் இஸ்லாத்தின் மாண்புகளைச் சீர்குலைத்துவிடும் என்று கருதுகிறவர்கள், தங்களின் பலவீனமான கருத்துகளைத் திணித்து எதிர்ப்புச் சக்தியற்ற உடலாக இந்தச் சமூகத்தை வார்க்கிறார்கள்.
சூஃபிகளின் சேவை
இஸ்லாத்தைத் தங்களின் ஞானப் பாடல்களாலும் சமூகச் சேவைகளாலும் பல்வேறு சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் அஹிம்சை முறையில் எடுத்துச்சென்ற சூஃபிகள் தொடர்ந்து திரைமறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியவர்கள்; இந்தச் சூழலையொட்டி அவர்களின் பணிகளுக்கு இசையும் கவிதைகளும் தானாக இணைந்துகொண்டன. பொதுவான மனித இயல்பின்படி ஒரு கருத்தை அல்லது தத்துவத்தை இறுக்கத்துடன் மூர்க்கமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், அது அடிப்படைவாதமாக மாறிவிடும். சமூகப் புத்தெழுச்சியையும் விரிந்தளாவிய மனப்பாங்கையும் பெறுகின்ற வாய்ப்பு அறவே தடுக்கப்படும். நாளடைவில் அது தன்னையோ தனது இனத்தையோ சாராதவர்களின்மீதான வெறுப்பு மனநிலைக்கு இட்டுச் செல்லும். இஸ்லாம் இப்படியான துர்க்கதிக்கு ஆளாக விடாமல் தடுத்தவர்களில் சூஃபிகளின் பங்கு மகத்தானது. அவர்கள் இஸ்லாத்தை அதன் தன்மை குலைந்துவிடாமல், கடைப்பிடிக்க எளிய வழிகளில் அறிமுகம் செய்தார்கள். இதனை தத்துவப் போதனையாகச் செய்வதைவிட இசை, கவிதைகளை உப கருவிகளாகக் கொண்டு, சமூகச் சேவையுடன் இணைத்துச் செய்துள்ளார்கள்.
இசை, மயக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதன்மூலம் ஒருவனை வழிகெடுக்க முடியும் என்று சில மார்க்கவாதிகள் கூறுவது பெரிய நகைப்புக்குரிய விஷயமாகும். அவர்கள் தங்கள் தரப்புக்கு ஒரு நியாயம் கற்பிக்க இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புகிறார்கள். இஸ்லாமியச் சிந்தனைகளில் மிகவும் இறுக்கமுள்ள சிலர், இசை போன்ற கலை வடிவங்கள் உலகப் பேரழிவின் அடையாளங்கள் போலவும், இசையே ஒரு நரக வடிவம், அதில் ஈடுபடுவது நரகத்தின் பாதை எனவும் கூறி, மார்க்க அறிவை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
இறை நம்பிக்கையை இதுபோன்ற பூச்சாண்டித் தனங்களால் அடைய முடியாது. மனித நேயமும் மானுடச் சேவையும்தான் இஸ்லாத்தின் ஆதியும் அந்தமுமான இலக்குகள். நபிகள் நாயகம் தன் வாழ்க்கையனுபவங்களில் முன்பிருந்த பலவற்றை மாற்றி மானுட உறவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். இசையும் கலைகளும் இல்லா வாழ்க்கை ஒரு பாலைவனத்துக்கு நிகரானது. ஆனால், இறையியலை இவ்வளவு பூஞ்சானாக இவர்கள் வடித்திருப்பதைப் பார்க்கும்போது, நாத்திகர்களுக்குச் சிரமங்கள் குறைவுதான்.
வேறு வழிகளா இல்லை?
வழிகெடுக்கும் ஆபத்துக்கு உலகில் வேறு வழிகளா இல்லை! சொல்லப்போனால் பொருளாதாரம், வணிகம் சார்ந்துதான் உலகமே தறிகெட்டு அலைகிறது. பணம் மற்றும் அதிகாரத்தின் மயக்கும் சக்தியை விடவும் இசையின் மயக்கும் சக்தி ஒரு கடுகளவும் தேறிவராது. இதனால் சமூகம் பிளவுபட்டதாகவோ, போர்கள் மூண்டு மனிதர்கள் அழிந்தொழிந்ததாகவோ, குண்டுகள் வெடித்ததாகவோ ஒரு ஆதாரத்தையும் கொடுத்துவிட முடியாது. ஒவ்வொன்றையும் நாம் பயன்படுத்தும் வழிமுறைகளை வைத்துத்தான் நன்மையும் தீமையும் உலகில் உருவாகின்றன. இசைப் பேரழிவுக்கு குர்-ஆனிலும் சுன்னாவிலும் (நபிகள் நாயகத் தின் நடைமுறைகள்) ஆதாரங்கள் இல்லை.
ஏற்கெனவே, சர்வதேசச் சூழலால் முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானங்களும் கறைகளும் நீக்கப்பட வேண்டுமென்றால், இஸ்லாமியச் சமூகம் கலையின் அனைத்து வடிவங்களையும் உடனடியாகக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னைப் புனரமைத்துக்கொள்ளவும் இது அவசியம். கலை மற்றும் இசையிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை அப்புறப்படுத்தி இஸ்லாத்தை வறட்டுத்தனமாகக் கற்றுக்கொடுத்ததினால்தான் இஸ்லாமிய உலகம் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களையும், அதைச் சமூகத்தின் மத்தியில் சூஃபிகள் கொண்டுவந்து சேர்த்த விதங்களையும் மென்மையான முறையில் போதித்திருந்தால், இன்றைக்கு இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்பதன்பேரால் உலக சமுதாயத்தை அச்சுறுத்தி, மேலை நாடுகள் எதிர்வியூகம் அமைத்திருக்கவும் முடியாது.
தமிழ்நாட்டில் இஸ்லாமும் இசையும்
இசை, கலை வடிவங்கள் மங்கி மறைந்துகொண்டிருக்கிற இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்தில், இப்போது அதைப்பற்றிய விழிப்புணர்வு அரும்பாடுபட்டு மீண்டும் உருவாகிவருகிறது. குறிப்பிட்ட சில வரவுகளை இங்கே கவனப்படுத்துவது சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது சர்வதேச மாநாடு முழுக்கவும் சூஃபித்துவ இசையின் மீதான புரிந்துணர்வை வளர்த்தது. அந்த இசையின் நவீன வடிவங்களை அதன் பாரம்பரிய இசை மரபாளர்களான ஃபக்கீர்களோடு இணைத்து, மேடையில் அரங்கேற்றம் செய்து ஒரு புதிய பாணி வகுத்தார் இசையமைப்பாளர் தாஜ்நூர். ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரிகள் உள்ளிட்ட தமிழ்த் திரையின் பாடகர்கள் பலரும் பங்கேற்றார்கள். மேலும் கோம்பை அன்வர், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஆவணப்படங்கள், குமரி அபூபக்கர், தக்கலை ஹலிமா, ராஜா முகம்மது உள்ளிட்டோர் செய்யும் பங்களிப்புகள் புண்பட்ட சமூகத்துக்கு மருந்திடுகின்றன. ரொம்பவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைய தமிழகத்தின் சிறந்த இசைப் பேரறிஞராக அனைவராலும் மதிக்கத்தக்கவராய் இருப்பவர் நா. மம்மது.
இசை புவிப் பரப்பின் மீது இழைஇழையாக அதன் இயல்பிலேயே பரவிப் படர்ந்தபடி இருக்கிறது. இவ்வகையில் அது இறைவனின் ஏற்பாடு. இதை எப்படி நிராகரிக்க இயலும்? இசையை நிராகரித்து இஸ்லாத்தை முன்னெடுத்துவந்தது சரி என்று எவரேனும் கருதினால், அதை இன்றைய இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஹராம் என்பதை ஒருவரின் நெருக்கடி மிக்க சமயத்தில் கருதிப்பார்த்து, அதை ஏற்க இஸ்லாம் ஒரு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. அதாவது, அன்றாட நடப்பியலை ஒதுக்கிவிட்டு இஸ்லாம் உருவாகவில்லை.
இசையின் வரலாற்றையும் அது மானுடத்துக்கு வழங்கிய கொடையையும் அதன் பரிமாணங்களையும் சோதித்தறிய வேண்டிய அவசியம் இனியுமா தேவை?
- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர்,

ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?

                                                         தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு நடந்த மாபெரும்
போராட்டம் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம். தமிழகத்தின் நவீன கால வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்துக்குக் காரணமாக அந்தப் போராட்டம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாள், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மரபு தொடர்கிறது.
50 ஆண்டுகள் கழித்து இன்று பார்க்கும்போது, அந்த அஞ்சலி மரபுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
இருக்கிறது. ஏன்?
ஏனென்றால்…
அந்த மொழிப் போராளிகள்தான் இந்தியாவில் இந்தி பேசாத எல்லா மொழிச் சமூக மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதிலிருந்து காப்பாற்றினார்கள். இந்தியா குடியரசாக உருவான 1950 ஜனவரி 26-ம் தேதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, இந்தியாவின் ஒன்றிய அரசாங்கத்தின் (the Union Government of India) அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மொழி அந்தஸ்தை இழக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த 15-வது ஆண்டுதான் 1965. அதற்கான கெடு நாள்தான் ஜனவரி 26. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால் அதை ஏற்க மாட்டோம் என்றும், ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தது யார்? 1965-ல் தமிழக மக்களும் மாணவர்களும்தான். அவர்களால்தான் நாம் ஒற்றை மொழி ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பினோம்.
ஏனென்றால்…
இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவது தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் விழுந்தன. அவையின் தலைவர் தனது ஒரே வாக்கை இந்திக்கு ஆதரவாக இட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினார். இந்திக்கு எதிராக வாக்களித்த 77 வாக்குகள் தமிழகத்தின் வாக்குகள் மட்டுமல்ல; இந்தி பேசாத எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்ததால்தான் அந்த 77 வாக்குகளும் விழுந்தன. 1965-ல் அந்த மாநிலங்கள் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்தன. தமிழகம் மட்டும் சிலிர்த்தது. இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசாத மக்களின் பிரதிநிதிகளாகத் தமிழகம் அந்தச் சதியை மீண்டும் முறியடித்தது. முறியடித்தவர்கள், நமது மொழிப் போராளிகள்.
ஏனென்றால்...
இன்று கொல்கத்தாவிலும் மும்பையிலும் பெங்களூருவிலும் முறையே வங்காள மொழியையும் மராத்தியையும் கன்னடத்தையும் இந்தியும் இந்தி சினிமாவும் இந்தி வெகுசனக் கலாச்சாரமும் அழித்துவிட்டன என்று அந்தந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் புலம்புகிறார்கள். ஆனால், சென்னையில் அது நடக்கவில்லை. தமிழ் வெகுசனக் கலாச்சாரமும் திரைத் துறையும் வீதி மொழியும் இங்கே இன்னும் தமிழாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால்...
இந்தியாவின் மெத்தப் படித்த காங்கிரஸ் மேதாவிகளின் திட்டப்படி 1965-ல் ஆங்கிலம் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட்டிருந்தால், இன்று இந்தியாவில் எதையெல்லாம் வளர்ச்சி, மேம்பாடு என்று சொல்கிறார்களோ அது எதுவுமே நடந்திருக்காது. குறிப்பாக, 1990-களுக்குப் பிறகு இந்தியாவின் உலக அடையாளமாக மாறிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி இங்கே சாத்தியப்பட்டிருக்காது. லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் தொழில் வாய்ப்புகளும் இருந்திருக்காது. தமிழகமும் தென் மாநிலங்களும் இந்தி மாநிலங்களைவிடக் கூடுதல் வளர்ச்சி பெற்றிருக்காது. தமிழர்கள் உலகெங்கும் தொழில்நுட்ப வேலைகளுக்குப் போயிருக்க மாட்டார்கள். நாம் நமது தாய்மொழியைப் பயன்படுத்தினால் இதைவிடப் பெரிய முன்னேற்றம் அடைய முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், எந்தப் பயனுமில்லாமல் இந்தியை மட்டும் படித்திருந்தால், நம் கதை என்னவாக ஆகியிருக்கும்? அது அந்தப் போராளிகளுக்குத் தெரிந்திருந்தது.
ஏனென்றால்...
இந்தி என்பது வெறும் மொழி சார்ந்த விவகாரம் அல்ல. அது வேலைவாய்ப்பு சார்ந்த விஷயம். இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், மத்திய அரசு வேலைவாய்ப்பில் வட இந்தியர்களைத் தவிர, வேறு யாரும் முன்னுக்கு வந்திருக்க முடியாது. யு.பி.எஸ்.சி-யில் ஆங்கிலம் சிறிய அளவில்கூட இருக்கக் கூடாது என்று இந்திக்காரர்கள் இன்றுவரை போராடுகிறார்கள். 1965-ல்
நமது முன்னோடிகள் களமாடியது ஆங்கிலத்துக்காக அல்ல; தமிழுக்காகத்தான் என்றாலும், காலத்தின் கட்டாயம் ஆங்கிலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களைப் போராடவைத்தது. அது ஓரளவுக்கு நமக்கு உறுதுணை புரிந்தது.
ஏனென்றால்...
நமது போராளிகள் இந்தியாவின் மொழி அரசியலை நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். இந்தியாவில் காங்கிரஸ், இந்துத்துவ கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிற்பவர்கள். இந்து-இந்தி-இந்துஸ்தான் என்கிற ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்று கொடிபிடிக்கும் இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை சம்ஸ்கிருதமயமாக்கப் பட்ட இந்தி என்பது சம்ஸ்கிருதமேயாகும். இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று தொடங்கி, பிறகு இந்தி மட்டுமே தேசிய மொழி என்று நீட்டி ஆளுகிற நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தமிழகத்தின் தனிச் சிறப்பான அரசியல் சூழலின் காரணமாகவே, 1965-ல் நமது முன்னோடிகள் அந்த ஒற்றைக் கனவைத் தகர்த்தெறிந்துவிட்டார்கள்.
ஏனென்றால்...
ஏதோ நாம் இந்தி படிக்காததால்தான் வேலைவாய்ப்பை இழந்துவருகிறோம் என்று பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேவை ஏற்பட்டால் இந்தி மொழியைத் தெரிந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதனால்தான் நாம் வேலைவாய்ப்பை இழக்கிறோம் என்பது உண்மையானால், மிக மோசமான ஒரு சதிக்கு நாம் உள்ளாகிவிட்டோம் என்றுதான் அர்த்தம். அதைத்தான் தமிழகத்தின் மொழிப் போராளிகள் முக்கால் நூற்றாண்டாக நம்மை எச்சரித்துவருகிறார்கள். நமது மொழியின் அடிப்படையிலேயேதான் நமக்கு வேலை கிடைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் எத்தனை மொழியையும் படிக்கத் தயங்க மாட்டார்கள் தமிழர்கள். பல்வேறு மொழி பேசுவோர் நடைபயின்ற காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் என்ன ஒற்றை மொழிவாதிகளாகவா இருந்திருப்போம்?
ஏனென்றால்...
உலகின் வளர்ந்த நாடுகளிலெல்லாம் தாய்மொழி அடிப்படையிலான மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றன. 1996-ல் பார்சிலோனா நகரில் வெளியிடப்பட்ட மொழி உரிமைகளுக்கான பன்னாட்டுப் பிரகடனத்தின் அடிப்படையும் 1937 முதல் இன்றுவரை தமிழகத்தில் மொழிக்காகக் குரல்கொடுப்போரின் அரசியல் சித்தாந்த அடிப்படையும் ஒன்றுதான். ஐரோப்பிய யூனியன் எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதோ அதே போன்ற மொழிக் கொள்கையைத்தான் இந்திய யூனியனும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நமது போராளிகளின் கோரிக்கை. ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்றால் ‘இந்தி மொழி ஒழிக, தமிழ் மட்டும் வாழ்க’ என்பது அர்த்தமல்ல. இந்தித் திணிப்பு ஒழிய வேண்டும், தமிழ் உட்பட இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பொருள். அதனால்தான் 1965-ல் போராடிய மாணவர்கள் அன்றே பிற மாநிலங்களிலுள்ள மாணவர் இயக்கங்களோடு தொடர்புகொண்டு தமது அரசியலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏனென்றால்...
அந்தப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட்டு, முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு இந்தியா முழுக்க மாநில சுயாட்சி பேசும் கட்சிகளும் தேசிய இன உரிமைகளைப் பேசும் அமைப்புகளும் உதயமாயின. அவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்கித்தந்து, காங்கிரஸின் ஏகபோகத்தை முறியடித்தவர்கள் 1965-ல் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களும் பிறரும்தான்.
ஏனென்றால்...
துரதிர்ஷ்டவசமாக, அன்றையப் போராட்டத்தின் பலனை அறுவடை செய்தவர்கள் – இருபெரும் திராவிடக் கட்சிகள் – இன்று மொழிக் கொள்கைக்காகப் போராடும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே, காவல் துறையாலும் ராணுவத்தாலும் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்காக – குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக – இன்று அஞ்சலி செலுத்த யாருமில்லை. ஆனால், அவர்களின் போராட்டத்தால் பலன் பெற்ற இன்றைய தலைமுறைக்கு அந்தக் கடமை இருக்கிறது. இன்று ஒரு நிமிடம் அவர்களைப் பற்றிச் சிந்திப்போம். நமது போராளிகள் தீர்க்கதரிசனமாகச் சிந்தித்தார்கள், போராடினார்கள். எத்தகைய மொழிக் கொள்கை இந்தச் சமூகத்துக்கு வேண்டுமோ அதற்கான வித்தினை அவர்கள் இட்டுச்சென்றிருக்கிறார்கள்.
ஏனென்றால்...
அவர்கள் நமது தாய் தந்தையர். அவர்கள் அன்று ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவின் ராணுவம் தமது பிள்ளைகளைக் குறிவைத்ததைக் கண்டு நமது பாட்டன், பாட்டிமார் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் துயரத்தை நாம் எப்படி மறக்க முடியும்? அவர்களின் தியாகத்தை நாம் எப்படி மறைக்க முடியும்? அவர்களின் தீர்க்கதரிசனத்தை நாம் எப்படி மறுக்க முடியும்?
- ஆழி செந்தில்நாதன்

இவர்களை நாம் கைவிட்டுவிட்டோம்

இராக்குக்கு 5 முறை வந்துவிட்டேன் 2007-க்குப் பிறகு. இப்போது பார்த்ததைப் போன்ற துயரத்தை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இராக், சிரியா நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள முகாம்கள், தற்காலிக வசிப்பிடங்கள் ஆகிய வற்றைப் பார்வையிட்டேன்.
கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் சண்டையில் சிரியாவின் மொத்த மக்கள்தொகையான 2.3 கோடியில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்களுடைய வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டார்கள். இராக்கில் பயங்கரவாதிகளின் வன்செயல் களுக்கு அஞ்சி 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பிடங் களை விட்டு வெளியேறிவிட்டார்கள். உயிருக்கு அஞ்சி ஓடி வந்துள்ள இந்த அகதிகள், மிகவும் கொடூரமான பயங்கரங்களை நேரில் பார்த்தவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு அவ்வளவுதான். வாழ்வதற்கு வழி தெரியாமல் அனைவரும் திண்டாடுகிறார்கள். நாலா புறங்களிலும் பயங்கரவாதமெனும் கொடூரம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அகதி முகாம்களைப் பார்த்துவருகிறேன். கூடாரத்தில் அமர்ந்து அகதிகளின் சோகக் கதைகளைக் கேட்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்கிறேன், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பார்க்கிறேன். அவர்களுடைய துயரங்களிலே நானும் பங்குகொள்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தவும், என்னால் முயன்ற அளவுக்கு வழிகாட்டவும் விரும்பு கிறேன். இந்த முறை அகதிகளின் துயரங்களைக் கேட்டு வாயடைத்துப்போனேன்.
என் மகள் எங்கே?
“என்னுடைய மகளை ஐ.எஸ். படையினர் பிடித்து வைத்துக்கொண்டு, பாலியல்ரீதியாக தினம்தினம் சித்தர வதை செய்கிறார்கள். அவளை விட்டுவிட்டுத் தனியாக இங்கு முகாமில் இருப்பதை நான் விரும்பவில்லை. என் மகள் துயரப்பட்டாலும் என் கண் முன்னால் இருப்பதையே விரும்புகிறேன். நானும் அங்கு இருப்பது என்றால் என்னவென்று தெரியும், என்னையும் உடல்ரீதியாகப் பலாத்காரம் செய்து சீரழிப்பார்கள்; என் மகளுக்கருகில் இருக்கிறேன் என்ற ஆறுதலாவது எனக்கு மிஞ்சியிருக்கும்” என்று ஒரு தாய் கண்ணீர் பொங்கிவரக் கதறியபோது என்ன சொல்லித் தேற்றுவது?
“நானும் என்னைச் சேர்ந்தவர்களும் ஒரு கிடங்கில் அடைக்கப்பட்டோம். திடீரென ஆட்கள் வருவார்கள், ஒரே சமயத்தில் எங்களில் 3 பேரை இழுத்துக்கொண்டுபோய் பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்துவார்கள்; எங்களைத் தேடிக்கொண்டு என்னுடைய அண்ணன் வந்தார், அவரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்” என்று 13 வயதுச் சிறுமி அழுகையும் கோபமுமாகச் சொல்லித்தீர்த்தாள். அவளிடம் என்ன பேச முடியும்?
அடுத்த கூடாரத்தில் 8 குழந்தைகள் மட்டும் இருந்தார்கள். அவர்களுடைய அப்பாவைக் கொன்றுவிட்டார்கள். அம்மா ‘எங்கோ’ இழுத்துச் செல்லப்பட்டார். 7 குழந்தைகளுக்கும் மூத்தவனான 19 வயதுப் பையன்தான் இப்போது அவர்களுக்கு அம்மா, அப்பா எல்லாம். “உனக்குத்தான் இப்போது எல்லாப் பொறுப்பும்” என்று நான் சொன்னவுடன் அந்தச் சிறுவன் சோகத்துடன் புன்னகைத்தான். சற்றே அஞ்சிய நிலையில் இருந்த தனது குட்டித் தங்கையைத் தேற்றும்விதமாக அவளுடைய தோளில் கைபோட்டு அருகில் அணைத்துக்கொண்டான். “இவர்களுக்கு உதவ என்னை விட்டுவைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றான். அவனும் அவனுடைய உடன்பிறப்புகளும் எதிர்காலம் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். எவ்வளவு துயரம் வந்தாலும், அதைக் கடவுளின் துணையுடன் வென்றுவிட முடியும் என்று நினைக்கிறார்கள்.
பசி, பட்டினி, கொலை
எத்தனை லட்சம் மக்கள் பசி, பட்டினி, படுகொலைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெண்களுக்கு நேரிட்டிருக்கும் துயரம் சொல்லி மாளாது. பசியாலும் நோயாலும் வாடும் குழந்தைகளின் முகங்களை நேரில் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
நாம் அவர்களைக் கைவிட்டுவிட்டோம் என்று அவர்கள் நினைத்தால், அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியுமா? உண்மையும் அதுதானே? ஜெனீவா மேற்கொண்ட முயற்சி ஓராண்டுக்கு முன்னால் தோல்வியுற்ற பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முன்னேற்றமும் இல்லையே? சிரியா பற்றி எரிகிறது; இராக்கின் பல பகுதிகளில் இன்னமும் கடும் சண்டை நடந்துவருகிறது. இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏராளமான நாடுகள் தங்களுடைய கதவுகளை அடைத்துவிட்டன. அவர்கள் இப்போது போவதற்கே இடமில்லாமல் நிர்க்கதியாகத் தவிக்கிறார்கள்.
அகதிகள் வெடிப்பு
சிரியாவின் பக்கத்து நாடுகளில் இப்போது 40 லட்சம் சிரியர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஜோர்டானின் மக்கள்தொகையில் 10% இப்போது சிரியர்கள்தான். லெபனானில் 25% சிரியர்கள்தான். அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்க இடம், உடுக்க உடை, கல்வி, சுகாதார வசதி, வேலை ஆகிய அனைத்தும் தேவை. இதை அவர்களுக்கு வழங்கினால், தன்னுடைய சொந்த மக்களுக்குத் தருவதற்கு லெபனானிடம் அதிகம் இருக்காது. எவ்வளவு பெரிய பணக்கார நாடாக இருந்தாலும், இப்படி அகதிகள் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிட்டால் நொறுங்கிப்போய்விடும்.
புதிதாக இருவர் சந்தித்துக்கொண்டால், குண்டுவீச்சு பற்றியும் திடீரென்று பயங்கரவாதிகள் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுக்கொன்றதுபற்றியும், இளம் பெண்களைத் துப்பாக்கிமுனையில் தூக்கிச் சென்றது பற்றியும்தான் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது, நம் நிலைமை என்ன என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் எங்கோ தொலைவில் நடக்கிற பயங்கரங்கள், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட முடியாது.
சர்வதேசச் சமூகத்தின் லட்சணம்
லட்சக் கணக்கான அகதிகளின் நல்வாழ்வு, மத்தியக் கிழக்கின் எதிர்காலம் மட்டுமே இப்போதைய பிரச்சினைகள் அல்ல. சர்வதேச நாடுகளின் அமைப்புகள் என்ன செய் கின்றன? மனித உரிமைகளைக் காப்போம் என்று நாம் கூட்டாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்குப் பொருள் என்ன? சிரியாவிலும் இராக்கிலும் அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் சுட்டுக்கொல்லப்படவும், லட்சக் கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்து முன்பின் தெரியாத இடங்களுக்குப் பிச்சைக்காரர்களாக ஓடவும், பெண்களும் சிறுமிகளும் பாலியல்ரீதியில் சூறையாடப்படுவதற்கும் காரணமாக இருக்கும் இந்த அராஜகத்தை நாம் எப்படி முடிவுக்குக் கொண்டுவரப்போகிறோம்?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் முகமையை ஏற்படுத்தியதற்குக் காரணம், அந்தப் போரில் இடம்பெயர்ந்த, வீடுவாசலை இழந்த மக்கள் விரைவாகத் தங்களுடைய நாடுகளுக்கும் சொந்த ஊர்களுக்கும் சென்று இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்குக் கூடாரம் அமைத்துக்கொடுத்து துணி, மருந்துகள் வாங்கித்தந்து 3 வேளையும் சாப்பாடு போடுவதற்காக அல்ல. அப்படிச் செய்தால், இந்தக் குழந்தைகள் நாடற்றவர்களாக நிரந்தரமாகத் திரிய நேரும். அந்தக் குடும்பங்கள் தங்களுடைய வீடுகளுக்கே திரும்ப முடியாத நிலைமை ஏற்படும். அந்த நாடுகளில் அமைதியே ஏற்படாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு அதுதான் நடக்கிறது. 5.1 கோடி மக்கள் உலகம் முழுவதுமே ஏதாவதொரு நாட்டிலிருந்து வெளியேறி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல் புகலிடம் தேடியும் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டியும் தங்கியிருக்கிறார்கள். உலக வரலாற்றில் இப்போதிருக்கும் அளவுக்கு அகதிகள் முன்பு எப்போதும் இருந்ததில்லை.
லட்சக் கணக்கான அகதிகளை வைத்துக்கொண்டு பராமரிக்க முடியாமல் திண்டாடும் சிரியாவின் பக்கத்து நாடுகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது. ஐ.நா. சபை விடுக்கும் மனிதாபிமான கோரிக்கைகளை ஏற்று நன்கொடை தருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த வளையங்களைத் தாண்டி உள்ள நாடுகள் அகதிகளைத் தங்கள் நாட்டில் ஏற்று மறுவாழ்வு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், சித்தரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானவர்களுக்காவது கருணை காட்ட வேண்டும். சமாதானம் ஏற்பட சர்வதேசச் சமூகம் வழிகாண வேண்டும். நம்முடைய தார்மிக விழுமியங்களை நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய நாட்டுக்குள், பத்திரிகைகளின் கட்டுரைகளில், கடிதங்களில் மட்டும் காட்டினால் போதாது. மத்தியக் கிழக்கிலும், சீரழிக்கப்பட்டுவிட்ட சிரியாவின் நகரங்களிலும் இந்த விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நம்முடைய உதவிகள் குவிய வேண்டும்.
- ஏஞ்சலினா ஜோலி,

கிறிஸ்தவர்களைத் துரத்தும் மத்தியக் கிழக்கு!

ஒரு காலத்தில் சகவாழ்வு வாழ்ந்த மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை என்ன?
எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதைப் படித்தபோது, எனக்கு ஓராண்டுக்கு முன் எகிப்துக்கு நான் மேற்கொண்ட பயணம் நினைவுக்கு வந்தது. நைல் நதிக்குக் கிழக்கே அமைந்துள்ள கெய்ரோ நகரத்தின் மிக அமைதியான பகுதியில் காப்டிக் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் எகிப்திய கிறிஸ்தவர்கள் வசிக்கும் இடம் இருக்கிறது.
அங்குள்ள தொங்கும் தேவாலயத்துக்கு நாங்கள் சென்றபோது, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. ஒரு காலத்தில் கோட்டை வாயில் மேல் இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டதாம். இப்போது கோட்டை இல்லை. படிகள் இருக்கின்றன. மேலே ஏறிச் சென்றால் பழைய தேவாலயம் ஒன்று இருக்கிறது. பல முறை புதுப்பிக்கப்பட்டாலும் பழைமையின் தடங்களைக் கொண்டிருக்கிறது. குறைந்தது 1,400 ஆண்டுகள் இந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். ஐகன் என அழைக்கப்படும் அழகான குறு ஓவியங்கள் சுவர்களுக்குப் புனிதத்தைத் தந்துகொண்டிருந்தன. கன்னி மேரியும் அவரது குடும்பமும் ஏரோது மன்னனிடமிருந்து தப்பித்து எகிப்துக்கு வந்தபோது இருந்த இடம் இது என்று சொல்லப்படுவதால் கிறிஸ்தவர்கள் உலகெங்கிலும் வருகிறார்கள்.
“என்ன, எகிப்தில் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் இருப்பார்களா?” எனது நண்பர் பாதிரியார் ஒருவரிடம் கேட்டார்.
“சுமார் 75 லட்சம் கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கிறார் கள்” என்று பதில் வந்தது. “எகிப்தின் கிறிஸ்தவம் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஏசுவின் 70 சீடர்களில் ஒருவரான மார்க் கொண்டுவந்தது. இன்று மக்கள் தொகையில் 10 %-க்கும் மேல் கிறிஸ்தவர்கள். இன்னும் அதிகம் இருந்தார்கள். நிலைமை சரியாக இல்லாததால் பலர் வெளியேறிவிட்டார்கள்.”
புனித காதரைன் மடாலயம்
கெய்ரோவிலிருந்து சூயஸ் கால்வாயைக் கடந்தால், சைனாய் பாலைவனம் பரந்து விரிகிறது. இந்தப் பாலைவனத்தின் நடுவே புனித காதரைனின் மடாலயம் இருக்கிறது. உலகின் மிகப் பழைய மடாலயங்களில் இது ஒன்று. ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஜஸ்டினியனால் கட்டப்பட்டது. நாங்கள் சென்ற வழியில் எந்த வாகனமும் செல்லவில்லை. 16 வயதுகூட நிரம்பாத பாலகன் ஒருவன் எகிப்திய ராணுவ உடை அணிந்து கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் எங்கள் வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்தான். அவனால் பாதுகாப்புத் தர முடியும் என்று நாங்களும் நம்பவில்லை; அவனும் நம்பியதாகத் தெரியவில்லை. வாகன ஓட்டி வானத்தைக் காட்டிக் கடவுளை நம்புங்கள் என்றார். எனக்குக்கூடத் தற்காலிகமாக நம்பலாமா என்று தோன்றியது.
மடாலயத்தை அடைவதற்குள் நடு இரவாகிவிட்டது. நபிகள் நாயகம் இந்த மடாலயத்துக்கு வருகை தந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். மடாலயத்துக்கு எந்த ஊறும் செய்யக் கூடாது என்று அவர் கைப்பதிவு பெற்ற ஆவணம் ஒன்று அதன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து கிறிஸ்தவர்கள் அங்கு வருகிறார்கள். அதன் அருகில்தான் புகழ் பெற்ற சைனாய் மலை இருக்கிறது. மோசஸுக்குக் கடவுள் பத்துக் கட்டளைகள் அளித்த இடம் அது என்று நம்பப்படுகிறது. மடாலயத்துக்குள் கடவுள் மோசஸுக்குச் செடி வடிவில் தோற்றமளித்ததாகச் சொல்லப்படும் ‘எரியும் செடி’ இருக்கிறது. இப்போது எரியவில்லை. பசுமையாக இருக்கிறது. வெளியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் பயங்கரவாதத்தின் காரணத்தால் கூட்டமே இல்லை. மேற்கத்திய உலகின் மிகப் பழைய ஓவியங்களில் சில இந்த மடாலயத்தில் இருக்கின்றன. ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை. சாவி வைத்துக்கொண்டிருப்பவர் அன்று வரவில்லை என்று சொன்னார்கள்.
பாலைவனத்தின் நடுவே அதிகப் பாதுகாப்பின்றி பயங்கரவாதத்தின் நிழலில் இருக்கும் மடாலயம் போன்றதே எகிப்தியக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.
நாங்களும் நிழலில் இருந்தோம் என்று எங்களுக்கு முழுவதும் உறைத்தது, திரும்பி வந்து 15 நாட்களுக்குப் பிறகு, சைனாய் பாலைவனத்தில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள்
மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. எல்லா நாடுகளிலும் அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டேவருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்புகூட நிலைமை மோசமாக இல்லை. உதாரணமாக, வில்லியம் டால்ரிம்பில் எழுதிய ‘புனித மலையிலிருந்து’ (ஃபிரம் தி ஹோலி மவுன்டன்) என்ற புத்தகத்தில் சிரியாவில் கிறிஸ்தவர்கள் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள், மிகுந்த பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். ஒபாமாகூட, சிரியாவை ஆஸாத் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் பத்திரமாக இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இராக்கிலும் கிறிஸ்தவர்கள் பயமின்றி இருந்தார்கள். சதாம் உசேனின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த (பின்னர் தூக்கு தண்டனை பெற்று இன்றுவரை சிறையில் இருப்பவர்) தாரிக் அஸிஸ் ஒரு கிறிஸ்தவர். இன்று இராக்கில் மூன்று லட்சம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் 14 லட்சம் இருந்தார்கள்.
யார் பணம் கொடுக்கிறார்கள்?
21 பேர்கள் கொல்லப்பட்டதற்காக ஐ.எஸ். இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. நாங்கள் கடுமையாகப் பழிவாங்குவோம் என்று பயங்கரவாதிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். எனவே, கொலைகள் தொடர்வது நிச்சயம். இராக், சிரியா, எகிப்து (சைனாய் பாலைவனம்), லிபியா போன்ற நாடுகளில் ஐ.எஸ். இயங்குகிறது. இந்த இயக்கத்தின் சார்பில் சண்டையிட்டு, முடிந்தால் மரணமடைவதற்காக உலகின் முக்கியமான நாடுகளிலிருந்து பலர் முன்வந்திருக்கிறார்கள். இது அழிக்க முடியாத சக்தியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்தாலும், மேற்கத்திய நாடுகள் அழிக்க வேண்டும் என்று நினைத்தால், அதிக முயற்சி எடுக்காமல் அழித்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகள் தலையிடுவதோ அல்லது குண்டுவீசுவதோ எந்தத் தீர்வையும் தராது என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணமாக, இராக்கிய கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் சொல்கிறார்: “இங்குள்ள கிறிஸ்தவர்கள் மேற்கத்திய நாடுகளை, பயங்கரவாதிகளுக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். எண்ணெய் விற்பதன் மூலம் பணம் கிடைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களால் எண்ணெயை எவ்வாறு விற்பனை செய்ய முடிகிறது? சாட்டிலைட்டுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இது கண்டுபிடிக்கப்படாதது, பெரிய தலைகள் ஐ.எஸ்ஸிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பதைத் தெளிவாக்குகிறது.”
ஒற்றுமையின் குரல்
கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்றி இருந்தாலும், அவர்கள் சாதாரண மக்களைக் குற்றம் சொல்லவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிரியாவின் அல் நபெக் என்ற நகரம். மொத்தம் 50,000 பேரைக் கொண்டது. இந்த நகரத்தில் 500 கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் நகரத்தை விட்டுப் போக விரும்பவில்லை. “பயங்கரவாதிகள் முஸ்லிம்களையும்தான் கொல்கிறார்கள். நாங்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கிறோம். வேலை இல்லை. வீடுகளை இழந்துவிட்டோம். இருந்தாலும், இங்குதான் இருக்க விரும்புகிறோம்” என்று சொல்கிறார்கள்.
இத்தகைய குரல்கள் எழுந்தாலும், ஐ.எஸ்ஸின் பயங்கரவாதம் தொடரும் வரை மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்கள் அழித்தொழிக்கப்படும் அபாயம் அழியாமல் இருக்கும்.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்.

 

மோடியின் தையல்காரர்!


விபின் சௌஹானும் ஜிதேந்திர சௌஹானும் தம்பி அண்ணன்கள். தங்களுடைய தையல் கடைக்கு ‘ஜேட் ப்ளூ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஹமதாபாத் ஆட்டோக்காரர்களிடம் கேட்டால், ‘மோடியின் தையல் கடை’ என்று சொல்லி வழிகாட்டுவார்கள் அல்லது கொண்டுபோய்விடுவார்கள். அஹமதாபாதில் மட்டும் அல்ல. குஜராத்துக்கு வெளியே நாக்பூர், உதய்பூர், ஜெய்பூர், புணே, ஹைதராபாத் என்று எங்கெல்லாம் ‘ஜேட் ப்ளூ’ கடைகள் இருக்கின்றனவோ எல்லாமே ‘மோடியின் தையல் கடைகள்’தாம். ‘ஜேட் ப்ளூ’ கடைக்காரர்களே அப்படிச் சொல்லித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானியும் ‘ஜேட் ப்ளூ’வின் வாடிக்கையாளர்தான்.



இரண்டு சௌஹான்களும் ஆரம்ப நாட்களில் கடைவீதியில் காஜா எடுக்கும் வேலை பார்த்திருக்கிறார்கள். எந்தத் தையல்காரர் சட்டைக்குப் பொத்தான் வைக்கக் கூப்பிடுகிறாரோ, அவருடைய கடை வாசலே அன்றைக்கு இவர்களுடைய கடை. கொஞ்ச காலம் கழித்து, 1981-ல் கொஞ்சம் துணிச்சலோடு, 250 சதுர அடியில் ஒரு இடத்தைப் பிடித்துக் கடை போட்டிருக்கிறார்கள். கடைக்கு அப்போது வைக்கப்பட்ட பெயர் ‘சுப்ரிமோ’. இதற்கு 8 வருடங்கள் கழித்து, அவர்கள் கடைக்கு நரேந்திர தாமோதர தாஸ் மோடி முதல்முறையாக வந்தார். ஆர்.எஸ்.எஸ். உறவு. முதல் முறை மோடிக்கு, வெள்ளை கதர் குர்தா தைத்துக்கொடுத்ததாகச் சொல்கிறார் விபின் சௌஹான். இன்று வரை மோடியின் குர்தாக்கள் இங்கேதான் தைக்கப்படுகின்றன. இடையில் 1995-ல் கடை 3,000 சதுர அடியில் விஸ்தரிக்கப்பட்டபோது பெயர் ‘ஜேட் ப்ளூ’ என்றானது. இப்போது 14,215 சதுர அடிக்கு விரிந்து கிடக்கிறது. வருட வியாபாரம் ரூ. 150 கோடி. கடையில் கிடைக்கும் ஏராளமான முன்னணி பிராண்டுகள் இடையே தங்கள் சொந்த பிராண்டுகளையும் வைத்திருக்கிறார்கள். முக்கியமான பிராண்ட் மோடி குர்தா. மோடியிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் இப்படிப் பெயர் வைத்தோம் என்கிறார்கள். பரஸ்பரம் விளம்பரம். ஒரு வருஷத்துக்கு முன்பு 25,000 மோடி குர்தாக்கள் போனதாம். இனி அதை 10 மடங்கு பெருக்க வேண்டும் என்கிறார் சௌஹான். ஆரம்ப நாட்களில், வெள்ளை கதர் குர்தாவில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்றைக்கு வந்தடைந்திருக்கும் மோடியின் ஆடை வண்ணப் பயணம் முழுவதற்கும் ‘ஜேட் ப்ளூ’வில் ஒவ்வொரு கதை உண்டு. ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, மோடி அணிந்திருந்த, ‘நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ என்று ஆடை முழுவதும் நெய்யப்பட்டிருந்த கோட்டின் ரகசியத்தை இங்கிருந்தும் பெற முடியவில்லை.


டை அலங்காரத்தையே ஒரு ஆளுமைப் பிரகடனமாகக் கருதும் தலைவர்கள் உலகம் முழுவதும் உண்டு. எல்லாக் காலத்திலும். நம் காலத்தில் ஆசியத் தலைவர்களில் ஆப்கனின் ஹமீத் கர்சாய் இதில் பெரும் பேர் வாங்கியவர். பல்கேரியாவின் போய்கோ பரிஸவ் தன்னை ஒரு ஆணழகனாகவே காட்டிக் கொண்டவர். மோடியின் 56 அங்குல மார்பைவிடவும் அகன்ற மார்பு இவருடையது என்று சொல்லலாம். கராத்தேவில் கருப்புப் பட்டை வாங்கியவர் என்பதை போய்கோ பரிஸவுடைய கை குலுக்கல் சொல்லும் என்று குலுக்கியவர்கள் சொல்வது உண்டு. எகிப்துடைய முபராக்கின் ஆடை அலங்காரம் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றாலும், அவரும் தன் பெயரை நெய்த கோட்டைப் போட்டுக்கொண்டதுண்டு. பெண் தலைவர்களில் லைபீரியாவின் எலென் ஜான்ஸன் சர்லீஃப் கச்சிதமாக, கம்பீரமாக உடுத்துவார் என்பார்கள்; அர்ஜென்டினாவின் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கீர்சனர் அரசியலில் அழகிக்கு உதாரணம் என்பார்கள். மறக்க முடியாதவர், தன்னுடைய கடைசிக் காலத்தில் மக்களால் தெருத்தெருவாக விரட்டிக் கொல்லப்பட்ட லிபியத் தலைவர் மம்மர் கடாஃபி. ஆடை அலங்காரத்தில் கடாபியை ஒரு பின்நவீனத்துவவாதி என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு நாள் பழங்குடி அவதாரம் எடுப்பார். ஒரு நாள் ராணுவ அவதாரம் எடுப்பார்.

எப்படியும் இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு இடம் கிடைப்பது சிரமம்தான். திருமதி ஒபாமா சவாலான போட்டியாளர். ஆனால், டெல்லியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில், மோடி உடைகளை மாற்றிய வேகத்தைப் பார்த்து ஒபாமாவே கொஞ்சம் திகைத்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள் ராஷ்டிரபதி பவன் சேவகர்கள். விருந்தின்போது ஒபாமாவே மோடியிடம் சொன்ன தாகவும் கேள்வி, “மிஷேல் மாதிரியே நீங்களும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்” என்று. குடியரசு தின அணிவகுப்பில் மோடி அணிந்திருந்த ராஜஸ்தான் ‘பந்தினி’ தலைப்பாகைக்குக்கூட ஒபாமா ஆசைப்பட்டதாக ஒருவர் சொன்னார்.


ரு அமெரிக்க அதிபர் முதல் முறையாக இந்தியாவின் குடியரசு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்; உலகின் இரு பெரும் ஜனநாயகங்கள் தோள் மீது கை போட்டு நெருக்கமாகப் பேசுகின்றன, அருகருகே உட்கார்ந்து டீ பரிமாறிக்கொள்கின்றன; ‘அணிசாராக் கொள்கை காலம் எல்லாம் நேருவோடு போய்விட்டது’ என்பதைப் பகிரங்கமாகச் சொல்லும் காலத்தில் அடியெடுத்துவைத்திருக்கிறோம்; அணுசக்தி யுகத்தின் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்... இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது பேச இதுதான் சேதியா? ஒரு பிரதமர் தன் விருப்பப்படி தன்னுடைய பெயரையே கோட்டில் நெய்து போட்டுக்கொள்ளக் கூடாதா? இதெல்லாம் ஒரு விவாதப் பொருளா?   கேட்கலாம்.

இந்திய வரலாற்றில் இது மிக முக்கியமான ஒரு நகர்வுதான். ஆனால், மூன்று நாட்கள் முழுவதுமாக என்ன நடந்தது என்ற கதை உண்மையாகவே யாருக்கும் முழுக்கத் தெரியவில்லை. முக்கியமாகப் பேசப்படும் ‘அணுசக்தி இழப்பீட்டு ஒப்பந்தம்’ நம்முடைய வாயில் வடையைச் செருகியிருப்பது பூடகமாகத் தெரிகிறது. விவரம் கேட்டு திக்விஜய் சிங் அறிக்கை விட்டிருக்கிறார். டி. ராஜா, மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கே இதுதான் நிலையென்றால், சாதாரணக் குடிமக்கள் என்ன செய்ய முடியும்?

நம்முடைய பிரதமருக்குத் தெரியும், எது விவாதப் பொருளாக இருக்க வேண்டும் என்று. சும்மாவா தன் பெயரை நெய்த கோட்டைப் போடுகிறார்? அவருக்குத் தெரியும். விபின் சௌஹானிடம் ஒரு முறை மோடி சொன்னாராம், “மூன்று விஷயங்களில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்: 1. பார்வை 2. குரல் 3. உடை.”

பெரிய மனிதர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்.

சவுதி மன்னர் அப்துல்லா இறந்துபோனதால், ஒபாமா தம்பதி தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகவில்லை. ஒபாமா தம்பதி ஆக்ராவைப் பார்க்கப் போகும்போது, சாலைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நம்முடைய அரசாங்கம் ரொம்ப மெனக்கெட்டிருந்தது. ஒரு நாளைக்கு ரூ. 300 கூலியாகக் கொடுத்து 600 பேரைச் சாலைகளைத் தினமும் கழுவிவிடச் சொல்லியிருந்தது. உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒபாமா தம்பதியை வரவேற்கும் வாய்ப்பு நழுவிவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.சாலைத் தொழிலாளர்கள் அதைவிடவும் வருத்தம் அடைந்திருப்பார்கள். கிடைத்த ஓரிரு நாள் வேலையும் பாதியில் போய்விட்ட துயரம்தான்.

ஒரு சமையல்காரரின் பேரன் ஒரு நாட்டின் அதிபராவதும் ஒரு டீக்கடைக்காரரின் மகன் ஒரு நாட்டின் பிரதமராவதும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும்தான் சாத்தியம் என்று பேசியிருக்கிறார் ஒபாமா. கூடவே, கடைசி நாள் அன்று, “பன்மைத்துவம்தான் நமது பலம். இந்தியத் துணைக் கண்டத்தில் மதரீதியாகப் பிரிவினை கூடாது. நாடு ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றிகள் குவியும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். வெறும் சம்பிரதாயமாகத் தெரியவில்லை.

பெரிய மனிதர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்!

ஜனவரி, 2015, ’தி இந்து’

Monday 16 February 2015

ஜக்கி வாசுதேவ்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மிஞ்சும் அளவுக்கு, ஆன்மீக வியாபாரம் செய்து வருபவர்தான் ஜக்கி வாசுதேவ்.   இந்த ஆன்மீக வியாபாரியின் முகத்திரையை முதன் முதலில் கிழித்தது சவுக்குதான். மூன்று கட்டுரைகள் மூலமாக, ஜக்கி யார் என்பது விரிவாக அம்பலப்படுத்தப்பட்டது. இணைப்பு 1.   இணைப்பு 2 இணைப்பு 3.
இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
8318629
ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ?
முதன் முதலாக ஈஷா குறித்து கட்டுரை எழுதிய பிறகு, ஈஷா குறித்து பல்வேறு தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. முதல் கட்டுரை எழுதுவதற்காக கோவை ஈஷா மையம் சென்று களமாடியபோது பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன.   ஏதோ மர்மமாக நடக்கிறது என்பதை உணர்த்தவது போலவே, ஏகப்பட்ட கெடுபிடிகள். வெளியே பதிவு செய்து, பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள்.
அப்படியே இடுப்பை வளைத்து, வணங்கி அண்ணா வணக்கம் அண்ணா என்று கூறுவார்கள்.   வெள்ளை குர்தாவும் பேண்டும் அணிந்த ஏராளமான அழகுப் பெண்களை காண முடியும்.   எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆண் தன்னை கவனிக்கிறான் என்னும் பொழுது சிறிது மாற்றத்துக்கு உள்ளாவாள்.   ஆனால், இந்த ஈஷா மையத்தில் நீங்கள் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது.   ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை பார்ப்பது போல உங்களைப் பார்த்து வணக்கம் வைப்பார்.   ஆனால், காவி சீருடை அணிந்திருக்கும் ஆண் சீடர்களிடம் சிறிது முரட்டுத்தனம் காணப்படுகிறது.   உள்ளை நுழையும் முன், உங்கள் செல்போன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.  ஒவ்வொரு நூறு மீட்டரிலும் உங்களது பாஸ் சோதிக்கப்படும்.
உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.
Dhyanalinga
அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். தியானலிங்கம் பற்றி ஜக்கி கூறுவது ” Dhyanalinga is the distilled essence of yogic science. It does not ascribe to any particular belief or faith. It does not require any pooja or worship. Just sitting silently for few minutes within the sphere of Dhyanalinga is enough to make even those unaware of meditation experience a state of deep meditativeness and feel the divine energy that overflows from this glorious form.
Dhyanalinga was consecrated by Sadhguru Jaggi Vasudev, a realized master, mystic and yogi, after three years of intense process of prana prathista. Measuring 13′ 9″, Dhyanalinga is the largest mercury based live linga in the world. In the metaphysical sense, Dhyanalinga is a guru, an energy center of tremendous proportions. All the aspects of life are enshrined in the form of seven chakras energized to the very peak and locked. A doorway to enlightenment and spiritual liberation, Dhyanalinga offers a sadhaka ² the opportunity to perform sadhana ³ in utmost intimacy with a live guru, – an opportunity which is traditionally available to a select few.
Situated at the foothills of the Velliangiri Mountains, Dhyanalinga is a colossal entity of eternal vibrations. The earth colors, the natural granite, and the fusion of irregular surfaces and shapes creates an ethereal ambiance and an apt atmosphere to receive the grace of the Dhyanalinga.”
அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த மன அமைதியும் தோன்றவில்லை.     அந்த லிங்கம் மெர்குரியால் செய்யப்பட்டது என்று சத்குருவே அறிவிக்கிறார்.
மெர்குரி என்பது ஒரு விஷப்பொருள்.   சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தானது. மெர்குரியை சுவாசித்தாலோ, வாய் மூலம் உட்கொண்டாலோ, மூளை பாதிக்கப்படும் என்கிறது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு.   அறையில் தட்பவெட்பத்தில் அறைக்குள் இருக்கும் மெர்குறி சிறிய அளவே வெப்பம் உயர்ந்தாலும் மெர்குரி ஆவியாகிவிடும்.   மிக எளிதாக மனித உடலில் நுழைந்து விடும்.   மெர்குரி எவ்விதமான மணமும் இல்லாத காரணத்தால், மெர்குரியை சுவாசிக்கிறோம் என்பதே ஒருவருக்கு தெரியாது. கனடாவைச் சேர்ந்த கால்கரி பல்கலைக்கழகம் மெர்குரி எந்த வகையில் மூளையை பாதிக்கும் என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டள்ளது. இணைப்பு
இந்தியாவில் மெர்குரி பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான சட்ட திட்டங்களும் இல்லாத காரணத்தால், இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் நான் ஒரு சிலையை உருவாக்கியிருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் ஜக்கி. இணைப்பு
இத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் செய்யப்பட்ட லிங்கம் அடங்கிய குளத்தில் குளித்தால், தீராத வினையெல்லாம் தீரும் என்று அறிவிக்கிறார் ஜக்கி.
Theerthakund
ஈஷா மையத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவிலேயே மெர்குரியை அவர்கள் கையால் கையாள்வது வெளிப்படையாக தெரிகிறது. இணைப்பு. ஏற்கனவே இருக்கும் மெர்குரியால் அமைக்கப்பட்ட தீர்த்தகுண்டம் பத்தாது என்று, புதிதாக சூர்யகுண்டம் என்று மற்றொரு மெர்குரி சிலை அடங்கிய குளத்தை உருவாக்கியிருக்கிறார் ஜக்கி. இணைப்பு.   மெர்குரி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும் மத்திய மாசு கட்டுப்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியுள்ளபடி
3.0 EFFECTS OF MERCURY ON HUMAN HEALTH
Mercury is very toxic and linked with a wide range of healtheffects including irreversible damage to the human nervous system. The severity of health effects from mercury exposures is influenced by the following factors:
(i) Chemical form of mercury i.e. inorganic or organic mercury,
(ii) Dose,
(iii) Age of the person exposed (the foetus is the most susceptible),
(iv) Duration of exposure,
(v) Route of exposure i.e. inhalation, ingestion, dermal contacts, and
(vi) Health of the person exposed
Inhalation:
Mercury vapor is highly toxic via inhalation. It can cause severe respiratory tract damage. Symptoms of mercury toxicity include sore throat, coughing, pain, tightness in chest, breathing difficulties, shortness of breath, headache, muscle weakness, anorexia, and gastrointestinal disturbance, ringing in the ear, liver changes, fever, bronchitis and pneumonitis. Mercury can be absorbed through inhalation with symptoms similar to those appearing after ingestion.
Ingestion:
Ingestion (through mouth) of mercury may cause burning of the mouth and pharynx, abdominal pain, vomiting, corrosive ulceration, bloody diarrhea. Ingestion may be followed by a rapid and weak pulse, shallow breathing, paleness, exhaustion, tremors and collapse.
Skin Contact:
Contact of mercury with skin causes irritation and burns to skin. Symptoms include redness and pain. It May cause skin allergy and sensitization. Mercury can be absorbed through the skin with symptoms parallel to ingestion.
Eye Contact:
Contact of mercury with eye causes irritation and burns to eyes. Symptoms include redness, pain, blurred vision; may cause serious and permanent eye damage, also depending upon exposure.
Chronic Exposure:
Chronic exposure of mercury through any route can produce central nervous system disorders. It may cause muscle tremors, personality and behavior changes, memory loss, metallic taste, loosening of the teeth, digestive disorders, skin rashes, brain damage and kidney damage. Mercury can cause skin allergies and accumulate in the body. Repeated skin contact with mercury can cause the skin to turn gray in color. Mercury is a suspected reproductive hazard; may damage the developing foetus and decrease fertility in males and females.

மெர்குரியோடு நெருங்குவது ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையே தெரிவிக்கிறது இணைப்பு. ஆனால், இதையறியாத பல்வேறு பக்தர்கள் தாங்கள் கூவாத சேவலாகப் போகிறோம் என்பதையே அறியாமல், ஜக்கி வாசுதேவ் கூறியபடி மெர்குரி சிலை இருக்கும் குளத்தில் நீராடி மகிழ்கின்றனர்.
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நீங்கள் நுழைந்தால், அங்கே ஜக்கியின் படங்கள், அவர் படம் பொறித்த பனியன்கள், வேட்டிகள், மாலைகள், நகைகள், லிங்கங்கள் உள்ளிட்ட ஏராளமானவை விற்பனை செய்யப்படும். இது ஒரு புறம் என்றால், மறுபுறம், பிஸ்கட், மூலிகை தேயிலை, ஊறுகாய் என்று உணவுப் பொருட்கள் ஒரு புறம் விற்பனை செய்யப்படும்.   பைரவி என்று வெறும் இரண்டு கண்கள் படம் மட்டுமே இருக்கும். அதன் விலையைக் கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்வார்கள்.   இது போக உத்திராட்ச மாலை, ஸ்படிக லிங்கம் என்று பல்வேறு பொருட்கள் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படும்.   இவற்றில் நீங்கள் எதை வாங்கினாலும் ரசீது தரப்படாது.   மீறி ரசீது கேட்டீர்கள் என்றால், நன்கொடைக்கான ஒரு ரசீது தரப்படும்.   அந்த ரசீதில், ஈஷா என்ற ட்ரஸ்டுக்கு நீங்கள் நன்கொடை வழங்கியுள்ளீர்கள் என்றும், அந்த நன்கொடை, இந்திய வருமான வரித்துறை சட்டம் பிரிவு 80Gன் படி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசாங்கத்தின் வரிச்சலுகையில் நகை வியாபாரம் செய்யும் ஜக்கி
80G இந்திய வருமானவரிச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு பெற வேண்டுமென்றால் முக்கியமான ஒரு நிபந்தனை, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நலனையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் சலுகை பெறும் நிறுவனம் செயல்படக்கூடாது என்பதே.   லிங்கமும், ருத்திராட்சமும் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன ?   அப்பட்டமாக இந்து மதத்தின் நலனைப் பாதுகாத்து ஈஷா மையம் நடத்தி வரும் ஜக்கி என்ற அயோக்கியனுக்கு, இந்த நாள் வரை வருமானவரிச் சலுகை அளித்து வருகிறது வருமானவரித்துறை.
இதுதான் மதச்சார்பற்ற அமைப்பாம்
இதுதான் மதச்சார்பற்ற அமைப்பாம்
சமீபத்தில் கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில், ஈஷா மையத்துக்கு எதிரான ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தனது புகாரில் பின் வருமாறு தெரிவிக்கிறார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜெயபால் என்ற பெண்மணி தனது புகாரில், நான் 16 டிசம்பர் 2014ல் இந்தியா வந்தேன். நான் இந்தியா வந்தது, வெள்ளியங்கரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் யோகா மற்றும் யந்த்ரா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா மையம் என்னை நாலரை லட்சம் கட்டச் சொன்னார்கள். அதன்படியே நானும் நாலரை லட்சம் கட்டினேன்.   நான் கட்டிய நாலரை லட்சத்தை நன்கொடையாக பதிவு செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. நன்கொடை என்பது விரும்பி, தாமாக முன்வந்து தர வேண்டும்.
யந்த்ரா என்ற அந்த நிகழ்ச்சி 21 டிசம்பர் 2014 அன்று நள்ளிரவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு மேலும் 50 ஆயிரம் கேட்டார்கள். அந்த 50 ஆயிரம் அந்த யந்த்ராவை விமானம் மூலமாக ஸ்வீடன் அனுப்புவதற்காக என்று தெரிவித்தார்கள். எனக்கு அந்த யந்த்ராவே வேண்டாம் என்று நான் கூறியபோதும், 50 ஆயிரம் கட்டியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஏற்கனவே நாலரை லட்சம் கட்டிய என்னை மேலும் 50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியது என்னை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.   அந்த யந்த்ராவை எடுத்துப் பார்த்தபோது, அது 165 கிலோ எடை இருந்தது என்பதும், அது உடைந்திருந்தது என்பதையும் கண்டு பிடித்தேன்.
மேலும் மேலும் என்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தியபோதுதான் நான் இவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை உணர்ந்தேன்.   உணர்ந்ததும் வருத்தத்தோடு நான் கட்டிய நாலரை லட்சம் பணத்தை திருப்பித் தாருங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.   பணம் திருப்பித் தர முடியாது என்று என்னோடு வாதத்தில் இறங்கியதோடு, மேலும் 50 ஆயிரம் தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
என்னுடைய நாலரை லட்சத்தை பெற்றுத் தருவதோடு, ஈஷா மையத்தின் மேல் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


புகார் மனு
புகார் மனு
740107316_72245
இந்தப் புகாரையடுத்து, குற்ற எண் 1/2015 என்ற எண்ணில், ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின் என்ன நடக்கும் ? வழக்கம் போலவே, புகாரளித்தவருக்கு பணத்தை திருப்பி அளித்து, சமாதானம் செய்து கொண்டனர் ஈஷா மையத்தினர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டில் வாழும் ஒருவரை வசியம் செய்து, அவரது சேமிப்புகளை வந்து ஈஷா மையத்தில் கொட்டம் அளவுக்கு மனமாற்றம் செய்யும் வலிமையை ஜக்கி பெற்றிருக்கிறார் என்பதே.   கடந்த வருடம், சென்னை மாம்பலத்தில் ஈஷா மையத்தின் ஒரு வார யோகா வகுப்புக்கு சென்றிருந்தபோது, யோகா கற்றுக்கொடுத்த, ஒரு பெண் வகுப்பு நடக்கையில் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் இன்போசிஸ் நிறுவனத்தில் மிக உயர்ந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். டீம் லீடர் அளவுக்கு வளர்ந்தேன்.   ஆனால், அப்போது இல்லாத நிம்மதியை ஈஷா மையத்தில் சேர்ந்ததும் அடைந்திருக்கிறேன். ” என்று கூறினார்.
செக்ஸ் போன்ற இயல்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பிரம்மச்சர்யத்தை கடைபிடிப்பதே உண்மையான ஞானம் என்று என்று ஜக்கி கூறுவதன் அடிப்படையில் தங்கள் வேலை, குடும்பம், மனைவி என்று அனைத்தையும் துறந்து, ஜக்கியின் ஆசிரமத்தில் முழு நேர தொண்டர்களாக மாறுகிறார்கள். ஜக்கியின் ஆசிரமத்தில் சேர்ந்ததால் நாசமான குடும்பங்கள் ஏராளம்.
செக்ஸ் போன்ற உணர்வுகள், மிக மிக இயல்பானவை. அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, இயற்கைக்கு முரணான பிரம்மச்சர்யத்தை கடைபிடித்தால், மனச்சிதைவுக்கு ஆளாகி, ஒரு சாடிஸ்டாக மட்டுமே மாற முடியும். மன நிம்மதி கிடைக்காது.
ஜக்கி வாசுதேவ் கட்டுரை எழுதிய பிறகு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனின் அலுவலகத்துக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார்.   அவருடைய மகளும், மருமகனும், வேலையை ராஜினாமா செய்து விட்டு, தங்கள் சேமிப்பு அனைத்தையும் ஜக்கி நிறுனத்தில் செலுத்தி விட்டு, தங்கள் குழந்தையை சன்னியாசிகளை உருவாக்கும் சம்ஸ்கிருதி பள்ளியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.   என் மகளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன்.   ஆனால் அவள் என்னிடம் கோபப்படுகிறாள். என்னை அடிக்கிறாள்.   ஜக்கியைப் பற்றி பேசாதே என்று சண்டை போடுகிறாள். ஒரு நாள் முழுக்க ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்ணுகிறாள். என்னால் என் மருமனையோ, மகளையோ கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. என் பேத்தியின் வாழ்வை நாசமாக்கி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. தயவு செய்து, அந்த சம்ஸ்கிருதி பள்ளியை மூடுவதற்கான வழக்கை துரிதமாக நடத்துங்கள் என்று கூறினார்.   இதற்காக எவ்வளவு கட்டணம் ஆனாலும் நான் தருகிறேன் என்று கூறினார். அவரிடம் பணம் எதுவும் வேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டு, வழக்கை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தோம்.   பிறகு இவரைப்போலவே மற்றொரு வயதான பெண்மணி, தொலைபேசியில் இதே போன்ற ஒரு கதையை கூறினார்.   அந்தப் பெண்மணிகளின் கண்ணீர் வேதனையை வரவழைத்ததோடு உணர்த்திய மற்றொரு விஷயம், இந்தப் பெண்மணிகளைப் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஜக்கி என்ற பொறுக்கியால் சீரழிந்ததுள்ளன என்பதே.

சன்னியாசினிகளாக்கப்படும் பிஞ்சுகள்
ஊருக்கெல்லாம் பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்யும், ஜக்கி வாசுதேவால், தன்னுடைய சொந்த மகளுக்கு பிரம்மச்சர்யத்தின் தாத்பர்யங்களை கடைபிடிக்கும்படி அவரை நம்பவைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.
மகளை கன்னியாதானம் செய்து தரும் ஜக்கி
மகளை கன்னியாதானம் செய்து தரும் ஜக்கி
இதைத்தவிர்த்து, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஈஷா மையம் செய்து வரும் காரியங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவையே…..
ஆனால், இந்த அரசு அமைப்புகள் அனைத்தும், ஜக்கி வாசுதேவ் போன்ற சமூக விரோதியை பாதுகாத்து கொள்ளையடிக்க அனுமதிப்பதோடு, பல்வேறு குடும்பங்களை சீரழிக்க அனுமதித்து வருகின்றன.
முதன் முறையாக ஜக்கி வாசுதேவை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக மூன்று பொது நல வழக்குகள் தொடுப்பதற்கும் நாம் காரணமாக இருந்தோம்.   அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்துக்கு வருமானவரித்துறை வழங்கியுள்ள கீழ்கண்ட சலுகைகளை ரத்து செய்யவும், புகார் அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
                                                                                                                                      நன்றி சவுக்கு.

உண்மையான ஞானி மக்களை தேடி போவன். சொகுசு வாழ்கை அனுபவித்து கொண்டு மக்களை தன் பக்கம் வரவைப்பவன் ஞானி இல்லை.புத்தர் வள்ளலார் போன்ற மனிதர்கள் மக்களை தேடி தான் சென்றார்கள்.

உங்களை நான் யாரயும் நம்பவேண்டாம் என்று சொல்லவில்லை , எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும். அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.
திருவள்ளுவர்.

கடவுள் நீ என்று உணர்.
மகாகவி பாரதியார்.




Saturday 14 February 2015

மண்ணைப் போல இருப்பது


“பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்”
- விக்கிரமாதித்யன்


மண்மாதிரி இருப்பது என விக்கிரமாதித்யன் சுரணைகெட்டத்தனத்தை குறிக்கிறார். எனக்கு இன்னொன்று தோன்றுகிறது.

மோகன்லாலின் வெற்றியை பற்றி குறிப்பிடும் போது இயக்குநர் பிரியதர்ஷன் அவருக்கு ஒரு அப்பாவித்தனமான முகம் வாய்த்தது அனுகூலம் என்கிறார். அந்த முகத்தை கொண்டு சீரியஸாக நடித்தாலும் நகைச்சுவை பண்ணினாலும் மக்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது. தமிழில் இது ரஜினிக்கும் பொருந்தும். அவர் பண்ணுகிற அதே ஸ்டைலை கமல் செய்தால் நமக்கு அது அலட்டலாக தோன்றி எரிச்சல் தருகிறது. எல்லாத்துக்கும் முகம் தான் காரணம்.

அன்றாட வாழ்விலும் இது போல் அப்பாவி முகம் கிடைத்தால் நல்லது. என்ன தான் கிரிமினல் வேலை பண்ணினாலும் ஜனம் சீக்கிரம் நம்பி விடும். எவ்வளவு தான் புத்திசாலியாய் இருந்தாலும் அது சட்டென்று வெளியே தோன்றினால் உடன் இருப்பவர்கள் நம்மை வெறுப்பார்கள். புத்திசாலித்தனத்தை மறைக்க கற்க வேண்டும். அதற்கென்று முகத்தை மாற்ற முடியாதல்லவா!

சராசரிகள் புத்திசாலிகளை பார்த்து அஞ்சுகிறார்கள். எதிரிகளை கூட விட்டு விடுவார்கள். ஆனால் உங்களை தேடி தேடி அழிப்பார்கள். அதனால் சராசரிகளால்  காரியம் ஆக வேண்டிய போது மண்ணைப் போல் இரு! அதற்குள் விதை, புதையல், கண்ணி வெடி என்னவேண்டுனாலும் இருக்கலாம். ஆனால் மேலாக மண்ணைப் போல் இரு.

பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?

\
இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது?

1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்து பார்க்காமலே அழிக்கலாம். ஏனென்றால் சைன் இன் செய்தவுடன் மின்னஞ்சல் பேச்சில் இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது என்கிற மேலோட்ட தகவலை தான் தரும். மின்னஞ்சலை மொத்தமாய் உங்கள் முகத்துக்கு நீட்டாது. நீங்கள் அதை படிக்க வேண்டுமா என யோசிக்கும் நேரத்தை அவகாசத்தை தரும். ஆனால் பேஸ்புக் அந்த பத்து நொடிகளை உங்களுக்கு வழங்காது. நீங்கள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி நீங்கள் நேற்று படித்தவரின் நிலைத்தகவலை மொத்தமாய் உங்கள் முன் காட்டும். அதற்கு என்ன நிலைப்பாடு எடுப்பது என முடிவெடுக்கும் முன் சில நூறு பேர் அதற்கு தெரிவிக்கிற கருத்துக்களை, விருப்பக்குறிகளை காட்டும். நீங்கள் பிடிக்காத உணவை வலுக்கட்டாயமாய் ஊட்டப்படும் பத்துமாத குழந்தை போல் விக்கித்து போவீர்கள். மனிதனின் ஒரு அடிப்படை குணம் பக்கத்தில் இருப்பவரின் முகபாவத்தை போல செய்வது. பக்கத்தில் இருப்பவர் கொட்டாவி விட்டால் உங்களுக்கும் கொட்டாவி வரும். திடீரென்று சம்மந்தமில்லாத ஒருவர் கேவி கேவி அழுதால் உங்களுக்கும் வயிறு கலங்கும். பேஸ்புக்கில் பின்னூட்டங்கள் உங்களை இது போல் போல செய்ய வைக்கிறது. பத்து பேர் ஒன்றை திட்டி பின்னூட்டமிட்டால் உங்களுக்கும் கோபம் வந்து திட்ட தோன்றும். நிலைத்தகவல் பார்த்து உங்களுக்கு கோபம் வரவில்லை என்றாலும் கூட கொட்டாவி வந்தாலும் கூட பின்னூட்டங்களை கவனித்தால் சற்று நேரத்தில் தாண்டவமூர்த்தி ஆகி விடுவீர்கள்.
2) அது போல் பேஸ்புக்கில் நாம் கால் விநாடிக்கு மேல் எதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை என்பதால் பார்த்ததும் கோபப்பட்டு/சிரித்து பழகி விட்டோம். கால்நொடி உணர்ச்சிக்கு உடனடியாய் கருத்தெழுத பேஸ்புக் தூண்டுகிறது. அதற்கும் சில விநாடிகள் தாம் அவகாசம். இதற்கும் யோசிக்க எங்கே நேரம்? எனக்கு இதை நினைக்கையில் முன்னர் நள்ளிரவில் கலைஞரை கைது பண்ணின அதிர்ச்சியில் யாரோ ஒரு தொண்டர் இறந்து போனது நினைவு வரும். ஏனென்றால் கலைஞர் அந்த அற்ப சம்பவத்தை தாண்டி ரொம்ப ஆண்டுகள் வந்து விட்டார். இன்னும் ஜம்மென்று இருக்கிறார். ஆனால் அன்றிரவு அதிர்ச்சி அடைந்தவர் தான் பாவம் உயிருடன் இல்லை.
யோசித்து பார்த்தால் பேஸ்புக் மட்டும் இணையத்தில் இருந்து சற்று விடுபட்டு இயங்குவது விளங்கும். இணையத்தில் விளம்பரங்கள் உண்டு. ஆனால் அவை உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கவும் வழி வகையும் உண்டு. ஜிமெயிலிலும் நாம் படிக்கிற மின்னஞ்சலை பொறுத்து உடனடி அல்காரிதம் வைத்து விளம்பரம் வருகிறது. அதாவது நீங்கள் யாருக்கோ குழந்தை பிறந்தது பற்றி சேதி படித்தால் வலப்பக்கம் குழந்தை வளர்ப்புக்கான சாதனங்களின் விளம்பரங்கள் வரும். ஆனால் நம் மனதின் ஒரு சிறப்பு இது போன்ற குப்பைகளை கவனிக்காமலே தவிர்ப்பது. மிக சரியாக கண்கள் மின்னஞ்சலை படித்து விட்டு மூடி விடும். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பணம் செலுத்தினால் அவரது பதிவு (விளம்பரம்) நீங்கள் வழக்கமாய் படிக்கிற ஸ்டிரீமிலேயே நடுவில் உங்கள் பார்வையால் தவிர்க்க முடியாத படி வரும்.
இணையம் என்பது நாம் விரும்புகிறதை தேவையான நேரத்தில் சுதந்திரத்துடன் படிக்கிற பார்க்கிற இடம். ஆனால் பேஸ்புக் நேர்மாறாக டி.வி போல் இயங்குகிறது. அதில் காட்டுவதை தான் நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாய் நித்தியானந்தாவின் படுக்கையறை காட்சியை திரும்ப திரும்ப ஒரு சேனல் காட்டிக் கொண்டிருந்தால் தமிழகமே அதைப் பற்றித் தான் பேசும். பேச வேண்டும். வேறு வழியில்லை. இப்படி மனிதனின் உணர்ச்சியை, பார்க்கும் உரிமையை கட்டுப்படுத்துவது தான் ஊடகங்களின் உண்மையான அதிகாரம். பேஸ்புக் இதையே தான் பயனர்களின் உதவியுடன் செய்கிறது. அதிகம் பேசப்படுகிற பதிவுகள் எப்படியோ அனைவர் கண்ணிலும் பட்டு ஒரு பரபரப்பு தோன்றுகிறது. அது தீயாக பற்றி எரிகிறது. இதன் வழி நாம் எதற்கு எப்படி எந்நேரத்தில் எதிர்வினையாற்ற வேண்டும் என ஒரு ஊடகம் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கில் எதற்கும் நேரம் குறைவா, நாம் உடனுக்குடன் கோபப்பட்டு எதையாவது சொல்லி யாரையாவது கோபப்படுத்தி ஒரு இணைய கலவரத்துக்கு தீக்கொளுத்தி போட வேண்டும், தெரிந்தோ தெரியாமலோ.
இது நாம் உணர்ச்சிவசப்படுகிற பாணியை மெல்ல மாற்றி அமைக்கிறது. ஒரு பிரச்சனை முக்கியமா என யோசிக்க தவறுகிறோம். ஒரு பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களை பார்க்காமல் கோபப்படுகிறோம். பேஸ்புக்கின் உண்மைத்தன்மை போன்ற தோற்றமும் இதற்கு ஒரு காரணம். இன்று மெல்ல மெல்ல நாம் டி.வி செய்திகள் மேல் அவநம்பிக்கை கொள்ள துவங்கி இருக்கிறோம். ஆனால் அதே சேதியை யாராவது பேஸ்புக்கில் பேசும் போது அது இன்னும் உண்மையாக நெருக்கமாக படுகிறது. அதனால் தான் ஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு கூட மதிப்பளித்து கடுமையாய் மோதிக் கொள்கிறோம்.
பேஸ்புக் இல்லாத காலத்தில் நாஞ்சில் நாடனின் பட்டியல் இவ்வளவு குழப்பங்களை வெறுப்பான உரையாடல்களை உருவாக்கியிருக்குமா? ஒருவேளை பிளாகுகளில் சில பேர் அதுவும் பின்னூட்டங்களில் அரட்டையடித்து மோதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பேஸ்புக் காலத்தில் நாஞ்சிலின் பட்டியலல்ல அது பற்றி பிறர் எழுதும் கருத்துக்கள் தான் அதிகம் சர்ச்சைகளை உருவாக்கியது. இவரை ஏன் சொல்லவில்லை என்று அவர் கேட்டால் அவர் எப்படி இவரை இப்படி சொல்லலாம் என இன்னொருவர் யோசித்தால் ஆயிரம் கற்பனை குடிசைகள் எரியும். யோசித்து பாருங்கள் இந்த சர்ச்சையின் போது நாம் ஏதாவது ஒரு உருப்படியான விவாதத்தை உருவாக்கினோமா? கருத்துக்களை கண்டுபிடித்தோமா? அவதானித்தோமா? இல்லை. முடிவில் வெறும் சாம்பலே எஞ்சியது.
பேஸ்புக் தருகிற வெளிப்பாட்டு சுதந்திரம் அபாரமானது, பாராட்டத்தக்கது. ஆனால் அது நம் உளவியலை கட்டுப்படுத்துவது, உணர்ச்சி தூண்டுதலை தீர்மானிப்பது வருத்தத்துக்கு உரியது. அதை விட சிக்கல் அது உணர்ச்சிகளை மட்டுமே தூண்டுகிறது என்பது. அதுவும் சொடக்கு போடுகிற வேகத்தில். உதாரணமாய் ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதில் உங்களுக்கு பிடித்த இளையராஜாவை திட்டுகிறார். நீங்கள் கொந்தளித்து திரும்ப குறுஞ்செய்தி அனுப்ப மாட்டீர்கள். ஏன் இப்படி எழுதுகிறான் என யோசிப்பீர்கள். உங்கள் பதிலை அனுப்புவீர்கள். அல்லது கூப்பிட்டு பேசுவீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் தெருவில் புரண்டு அடிக்க மாட்டீர்கள். காரணம் உணர்ச்சிகளை ஆறப் போட்டு யோசிக்கும் நேரத்தை குறுஞ்செய்தியின் வடிவம் அளிக்கிறது. பேஸ்புக்கில் போல் டக்கென அடிக்க முடியாது. இலவசமும் கிடையாது. அது போல் இது அந்தரங்கமான உரையாடல் எனும் உணர்வு கூட உங்களை கண்ணியமாய் யோசிக்க செய்யும். ஆனால் பேஸ்புக்கில் நீங்கள் உடனடியாய் எளிதாய் செலவின்றி பதில் அடிக்கலாம். அதை ஊர் உலகமே பார்க்கும். அது ஒரு பெரிய பிரச்சனை போல் தெரியும். ஒரு படத்தையும் இணைத்து விட்டால் உங்கள் நிலைத்தகவல் ஒரு பத்திரிகை தலைப்பு சேதியை போன்றே தோன்றும். சொல்லப்போனால் அதை விட முக்கியமாய் தோன்றும்.
ஆனால் இவை எதுவுமே பத்து நிமிஷம் ஆறப் போட்டால் உங்களுக்கே சரியாய் வேகாத வெண்டைக்காய் பொரியல் போல தோன்றும். என் நண்பர் ஒருவர் பிரபல முகநூல் பதிவர். ஒரு நிலைத்தகவலை போட்டு பத்து நிமிடம் பார்ப்பார். அதற்கு போதுமான விருப்பக்குறிகள் விழாவிட்டால் அழித்து விடுவார். பார்த்த அடுத்த நொடியில் உணர்ச்சிவசப்பட வைக்காவிட்டால் அது முக்கியமல்ல. இந்தளவுக்கு அற்பமாய் அபத்தமாய் போய்க் கொண்டிருக்கிறது நாம் கோபப்படுகிற பாணி.
சரி குறைந்தது நாம் தானே இச்செய்திகளை உருவாக்கி பரபரப்புகளை கட்டுப்படுத்துகிறோம். நாம் அழித்து விட்டால் முடிந்து போய் விட்டது என நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல.
பேஸ்புக்கில் அத்தனை பதிவுகளும் உங்கள் முகப்பில் தோன்றாது. நீங்கள் வழக்கமாய் படிப்பவர்களிடம் இருந்து சில பதிவுகள் (எப்படியோ) தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். சமீபமாக அமெரிக்காவில் ஒரு பலகலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது. பேஸ்புக்கில் சில பயனர்களுக்கு சில குறிப்பிட்ட நிலைத்தகவல்களும், பதிவுகளும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களது ஸ்டிரீமில் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறாரகள், இது அவர்களின் மனநிலையை எப்படி பாதித்தது, அவர்களை தொடர்வோர் எப்படியெல்லாம் எதிர்வினை செய்தார்கள் என பேஸ்புக்கே தரவுகளை வழங்க அதைக் கொண்டு ஆய்வு நடந்தது.
எனக்கொரு சந்தேகம். ஒருவருடைய ஸ்டிரீமில் இப்படி எவையெவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த ஆய்வுக்காக தனியாய் நடந்ததா அல்லது பொதுவாகவே பேஸ்புக் இதை செய்கிறதா? இல்லை என்றால் பேஸ்புக் இதை செய்ய துவங்கும் காலம் அருகாமையில் உள்ளதா? உதாரணமாய் பெட்ரோல் விலை உயர்வை எடுங்கள். அது பற்றி கோபமாய் எழுதப்படும் நிலைத்தகவல் மற்றும் பின்னூட்டங்களை மட்டும் அனைவர் முகப்புகளிலும் அதிகம் தெரியும்படி பண்ணி பேஸ்புக்கால செயற்கையாய் ஒரு கலவரச் சூழலை, போலி பதற்றத்தை ஏற்படுத்த முடியாதா? இப்போதே நாம் மேற்கொள்ளும் உரையாடல்களை கண்காணித்து அதைக் கொண்டு தோதான விளம்பரங்களை தரும் பேஸ்புக் ஒருவிதத்தில் நம் அந்தரங்களை வெளியே விற்று காசு பண்ணுகிறது. அடுத்த கட்டமாக ஒரு படம் அல்லது பொருளின் விற்பனைக்காக ஒரு செயற்கை பரபரப்பை அது ஏன் ஏற்படுத்தாது? பேஸ்புக் செய்ய வேண்டியதெல்லாம் நம் முகப்பிலும், டிக்கரிலும் எது அதிகமாய் தோன்ற வேண்டும் என தீர்மானிப்பது தான். ஒரு மென்பொருளின் துணையுடன் லட்சக்கணக்கானோரை அது இவ்வாறு கட்டுப்படுத்தினால் இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஆறு பத்துக்குள் இத்தனை லட்சம் பேரின் ரத்தக்கொதிப்பை உயர வைக்க வேண்டும் என இலக்கை தீர்மானித்து செயல்படுத்த முடியும். இந்த நாள் மாலை முழுக்க இப்படம் பற்றியே லட்சக்கணக்கான பேரின் பேச்சிருக்க வேண்டும் என நம் மனநிலையை முழுக்க ஆட்ரா ராமா ஆடு என பண்ண முடியும். இது நடக்கப் போகிறதா அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறதா?
இப்படி எந்த பிரச்சனை என்றாலும் நொடியில் உணர்ச்சிவசப்படும் போது நாம் அதன் ஆழத்தை அறிய தவறுகிறோம். அது போல் சில முக்கியமான விசயங்களுக்கும் சிலரிடம் ஒரு அற்பமான/மேலோட்டமான மனவெளிப்பாடு மட்டுமே இருக்கலாம். எல்லாராலும் சரியாக சிந்திக்க முடியாது தான். அதை நாம் நன்கு உணர்ந்தே இருக்கிறோம். ஒரு அரசியல் தலைவர் பற்றி நமக்கு மிகுந்த அபிமானம் இருக்கலாம். அதேவேளை அவர் மீது எல்லாருக்கும் மரியாதை இருக்க வேண்டியதில்லை எனவும் அறிவோம். அதை ஏற்று இவர்களின் கருத்து முக்கியமில்லை என நினைத்து நம் பாதையில் பயணிக்கிறோம். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பிரபாகரனின் படத்தை போட்டு கீழே ஆபாசமாய் எழுதுகிறார் என வைப்போம். நீங்கள் ஒரு ஈழப்போராட்ட அபிமானி. உங்களுக்கு அதைப் பார்த்ததும் ரத்தம் கொதிக்கும். ஆனால் ஏன் கொதிக்க வேண்டும்? பொதுக்கழிப்பறையில் இருக்கையில் அல்லது தெருமுனையில் யாரோ ஒருவர் இதே போல் அவமானகரமாய் பேசினால் நின்று சண்டை போடுவீர்களா? அலுவலக கேண்டீனில் பக்கத்து மேஜை உரையாடலில் ஒருவர் இன்னொருவரிடம் பிரபாகரனை திட்டி பேசினால் தலையிட்டு அவரது கழுத்தை பிடிப்பீர்களா? நீங்கள் வீட்டுக்கு வருகிற வழியில் பத்து பேர் அங்கங்கே நின்று இப்படி பேசுவதை கேட்டு அவர்களிடம் தர்க்கித்தால் நீங்கள் இரவு பன்னிரெண்டுக்கு கூட வீட்டுக்கு வந்து சேர முடியாது. முட்டாள்கள் பேசுகிறார்கள் என நினைத்து விட்டு வந்து விடுவோம். ஆனால் பேஸ்புக்கில் மட்டும் ஏன் உடனடியாய் கோபித்து சண்டை போடுகிறோம்? அது பொதுவெளி என்றா? தெருமுனை கூட பொதுவெளி தானே? எழுதப்படுவதால் அது மதிப்புக்குரியது என்றா? இணையத்தில் ஆபாசக்கதைகளூம் கிசுகிசுக்களும் கூடத் தானே எழுதப்படுகிறது? எழுதப்படுவதால் ஒன்று மதிப்புக்குரியது என்றால் கழிப்பறையிலும் கூடத்தான் ஏகப்பட்ட வாக்கியங்கள் எழுதப்படுகின்றன. அதற்கெல்லாம் ஒரு கரிக்கட்டி எடுத்து பின்னூட்டம் சுவரிலேயே எழுதுகிறோமா?
நீங்கள் சற்றும் பொருட்படுத்தாத மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்போரை பொதுவெளியில் எளிதில் கடந்து போகிற நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை இவ்வளவு பொருட்படுத்தி பேசுகிறீர்கள்? அவர்கள் போடும் ஒரு சிறுசொல்லுக்கு ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள்? உங்கள் மனம் என்பது யார் கல் வீசினாலும் அலைகளை உருவாக்கும் நீர்ப்பரப்பை போன்றதா? ஒரே ஆள் எப்படி ரெண்டு விதமாய் இருக்கிறீர்கள்? நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம் இருக்கிறது?

நன்றி: அமிர்தா ஆகஸ்டு 2014