Saturday 14 February 2015

கற்பழிப்பு சட்டத்தில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்




கடந்த வருடம் நான் எழுதிய மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள் கட்டுரையில் ஒரு முக்கியமான சட்டப்பிழையை குறிப்பிட்டிருந்தேன். ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டதாய் வழக்கு போட்டால் அதை சாட்சிகள் மூலமாக நீரூபிக்க வேண்டும் என்றொரு சட்ட கட்டாயம் இருந்தது. கற்பழிப்பாளர்கள் பொதுவெளியில் குற்றத்தை பொதுவாக நிகழ்த்துவது இல்லை என்பதே இந்த முறைமையை அபத்தமானது ஆக்குகிறது. தற்போது இந்த அசட்டு சட்ட நிபந்தனையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர் நீதிபதிகளான பி.சதாசிவம் மற்றும் ஆர்.எம் லோதா. கற்பழிக்கப்பட்ட பெண் கல்வியறிவு அற்றவர் என்ற பட்சத்தில் அவரது குற்றசாட்டை வெளிசாட்சியம் ஏதும் இன்றி நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் சமீபத்திய தீர்ப்பு. அவர்கள் இதற்கு கூறியுள்ள காரணம்: ”குற்றம் சாட்டும் எந்த பெண்ணும் பொய் சொல்லி தன் சுய-அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு பிறகு நீண்ட காலம் தயங்கிய பின்னரே அவர்கள் நீதி நாடி வருகிறார்கள். அவரிடம் ஆதாரம் கேட்பது மேலும் அவமானிப்பது போன்றதாகும்”.

இந்த தீர்ப்பு கரநாடகாவில் இரு கல்வியறிவற்ற சகோதரிகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தரப்பட்டுள்ளது. இவ்விருவரும் சம்ப்வம் நடந்து 42 நாட்களுக்கு பிறகே வழக்கு தாக்கல செய்தனர் என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் இப்பெண்களின் குடும்பத்தில் ஆண்கள் யாரும் ஆதரவளிக்க இல்லை என்பதை மனிதாபிமானத்துடன் கருதி நீதிபதிகள் இம்மேல்முறையீடை நிராகரித்துள்ளனர்.

இந்த சட்டதிருத்தம் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் படி செய்யலாமா என்பது நம்முன் உள்ள மற்றொரு கேள்வி. வரதட்சணை சட்டம் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே ஒரு ஆட்சேபணை உள்ளது. ஆனாலும் நம் சமூகத்தில் பெண்கள் தொடர்ச்சியாக சந்திக்கும் பலவித நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்பின்மைகளை கருத்தில் கொள்ளும் போது இச்சட்டத்தை அனைவருக்கும் ஆனதாக மாற்றலாம் என்பதே என் தரப்பு.
                                                                                                    நன்றி அபிலாஷ் சந்திரசேகர்.

No comments:

Post a Comment